மாஞ்சோலையில் வரலாறு கண்டிராத மழை! ஒரே நாளில் 517 மி.மீ. கொட்டியது
1 min read
Unprecedented rain in Manjola! 517 mm in a single day. Poured
13/1/2021
இந்த ஆண்டு (2021) தமிழ்நாட்டுக்கு மழையாண்டாகவே தொடங்கி, போதும் போதும் என்று சொல்லுமளவுக்கு மழை பெய்து வருகிறது.
வழக்கமாக, வடகிழக்குப்பருவ மழை டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்து விடும். அதன்பிறகு, ஜனவரி, பிப்ரவரியில் மழை பெய்தால் அது குளிர்கால மழையாகக் கருதப்படும்.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையின் நீட்சியாக, ஜனவரி 3-ந் தேதியில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
முதலில் சென்னையிலும், அதன் புறநகர்ப்பகுதிகளிலும் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரியில் “சாதனை மழை” கொட்டித்தீர்த்தது.
அடுத்து, கடலூர் முதல் கன்னியாகுமரி வரை தினமும் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. மாலையில் தொடங்கும் மழை, இரவிலும் தொடர்ந்து காலை வரை நீடிக்கிறது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுடன் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களும் கடும் மழைப்பொழிவை சந்தித்து வருகின்றன.
குறிப்பாக, கடலூர், மயிலாடுதுறை,திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், நெல்லை, தென்காசி போன்ற மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக “அடை மழை” யாகப் பெய்து வருகிறது.
கடலூரிலும், காவிரி வடிநிலப்பகுதிகளான தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் விளைநிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கி வெள்ளக்காடாக காட்சி தருகின்றன.
நிரம்பி வழிகின்றன, பாபநாசம், மணிமுத்தாறு அணைகள்
நெல்லை, தென்காசி மாவட்டங்களின் நீர் ஆதாரங்களாக விளங்கும் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
குறிப்பாக, மணிமுத்தாறு, பாபநாசம் போன்ற பெரிய அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் அதிக அளவு நீருடன் (வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி) காட்டாறுகளின் வெள்ளமும் கலப்பதால் தாமிரபரணி ஆறு பொங்கிப் பெருகி, வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
பாபநாசம் அணையில் இருந்து அகத்தியர் அருவி வழியாகப் பாய்ந்து வரும் வெள்ளம் “நயாகரா அருவி” போல் கொட்டுகிறது.
கரை புரண்டு ஓடி வரும் வெள்ளம் காரணமாக, தாமிரபரணிக் கரையோரம் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லை மாநகரில் தாமிரபரணி ஆற்றின் நடுவே அமைந்திருக்கும் “குறுக்குத்துறை முருகன் கோவில்” முற்றிலும் மூழ்கி விட்டது.
1992-ம் ஆண்டு தாமிரபரணியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்குப் பின், இப்போதும் மழை நீடிக்குமானால் அதே அளவிலான வெள்ளம் வரக்கூடும் என்பதால் கரையோர மக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரு குழுக்கள் நெல்லைக்கு விரைந்து வந்துள்ளன.
குற்றால மலைகளில் கொட்டிய கனமழையால் அருவிகள் அனைத்திலும் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதற்கிடையே, மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலையில் தென்மேற்குப் பருவ மழை, வடகிழக்குப்பருவ மழை, குளிர்கால மழை என தொடர்ச்சியாக கடந்த 5 மாதங்களாக மழை நீடித்து வருகிறது. இங்கு பகலில் சூரியனையே பார்க்க முடியவில்லை என்கிறார்கள், மாஞ்சோலை மக்கள்.
இன்று (ஜனவரி 13) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழைஅளவின்படி, மாஞ்சோலை மலையில் கொட்டிய மழையின் அளவு இதுவரை பதிவாகாத உச்சத்தை எட்டியுள்ளது.
மழை அளவு வருமாறு:-
ஊத்து 517 மில்லி மீட்டர்
நாலுமுக்கு 372 மிமீ
மாஞ்சோலை 347 மிமீ
இந்த 3 இடங்களுமே மாஞ்சோலை மலையில் அடங்கிய பகுதிகள் என்பதும், கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 2,000 மில்லிமீட்டருக்கு மேல் மழை கொட்டித்தீர்த்தது ஊத்துவில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று காலை பதிவான மழை அளவின்படி, நெல்லை மாவட்டத்திற்கு அடுத்ததாக, கடலூர், நாகை மாவட்டங்கள் கனமழையை சந்தித்துள்ளன.
கடலூர் மாவட்டம்: கொத்தவாச்சேரி 284 மிமீ, பரங்கிப்பேட்டை 283,
சேத்தியாத்தோப்பு 209, புவனகிரி 196, ஸ்ரீமுஷ்ணம் 186, சிதம்பரம் 157.
நாகை மாவட்டம் வேதாரண்யம் 178.
நெல்லை மாவட்டம்: பாபநாசம் 185, மணிமுத்தாறு 165.
“கடந்த 100 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் இந்த அளவுக்கு கனமழை கொட்டியதில்லை” என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
–திருநெல்வேலியில் இருந்து மணிராஜ்.