சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம்
1 min read
Improvement in Sasikala’s health
23/1/2021
சிறையில் இருக்கும் சசிகலாவின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது.
சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளளார். அவர் தண்டனை காலம் முடிந்து வருகிற 27-ந் தேதி விடுதலையாகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சசிகலாவுக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருந்து வந்தது.
கடந்த புதன்கிழமை மாலை மூச்சுத்திணறல் அதிகமானதால் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது ஆக்சிஜன் அளவு 79 சதவீதம் இருந்தது. இதையடுத்து ‘ஆன்டிபயோடிக்’ மருந்துகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஆக்சிஜன் அளவுஉயர தொடங்கியது. காய்ச்சல் மற்றும் இருமலும் குறைந்தது.
அந்த ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்வதற்கான சாதனங்கள் இயங்காததால் சசிகலாவை நேற்று முன்தினம்( வியாழக்கிழமை) விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்ததில் கொரோனா இருப்பது தெரியவந்தது. நுரையீரலிலும் தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதனால் அவரை அதே விக்டோரியா மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
முன்னேற்றம்
அங்கு சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) அதிக காய்ச்சல் ஏற்பட்டது. டாக்டர்கள் அளித்து வந்த சிகிச்சையில் சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட தொடங்கியது. காய்ச்சலும் குறைந்து விட்டது. நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் அனைத்தும் சீராக உள்ளது. நுரையீரல் தொற்றும் குறைந்துள்ளது.
ஆனாலும் கொரோனாவுக்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் விடுதலை தேதியான 27-ந் தேதி வரை சசிகலா, விக்டோரியா மருத்துவமனையிலேயே இருந்து சிகிச்சை பெறுவார் என்று தெரிகிறது. சசிகலாவின் உறவினரான டாக்டர் வெங்கடேஷ் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை விவரங்களை கேட்டறிந்து வருகிறார்.
சசிகலா 27-ந் தேதியில் விடுதலை ஆனாலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் 14 நாட்கள் தனிமைபடுத்தப்படுவார். இதனால் விடுதலை நாளில் அவருக்கு கொடுக்கப்படுவதாக இருந்த வரவேற்பு ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.