சசிகலா 4 ஆண்டு சிறைதண்டனை முடிந்து விடுதலையானார்
1 min readSasikala was released after serving 4 years in prison
27.1.2021
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகாலம் சிறைதண்டனை அனுபவித்த சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார்.
சசிகலா
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். அவருடன் சுதாகரன், இளவரசி ஆகியோரும் தண்டனை பெற்றனர். இவர்கள் 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து 27ந் தேதி (இன்று) விடுதலை ஆவார் என்ற ஏற்கனவே அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி ஜெயிலில் இருந்த சசிகலாவுக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதறக்காக அவர் பெங்கருவில் உள்ள விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா
அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த ஒரு வாரமாக சசிகலா விக்டோரியா ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக நீங்கிவிட்டது. ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு ஆகியவையும் சீராக இருக்கிறது. ஆக்சிஜன் அளவு 98 சதவீதமாக உள்ளது. ஊன்றுகோல் உதவியுடன் அவர் நடக்கிறார்.
இந்த தகவலை விக்டோரியா ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
விடுதலை
சசிகலாவின் தண்டனை காலம் இன்றுடன் முடிவடைந்தது. ஆனால் அவர் இன்னும் ஆஸ்பத்திரில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை. எனவே அவரை ஆஸ்பத்திரியில் இருந்தபடியே விடுதலை செய்ய சிறைத்துறை முடிவு எடுத்தது.
அதன்படி நேற்று அரசு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் சசிகலா விடுதலை தொடர்பான ஆவணங்களை சிறைத்துறை அதிகாரிகள் தயார் செய்தனர்.
இன்று காலை 9.20 மணிக்கு சிறைத்துறை அதிகாரிகள் ஜெயிலில் இருந்து புறப்பட்டு 10.30 மணிக்கு அரசு விக்டோரியா ஆஸ்பத்திரியை அடைந்தனர். அவர்கள் டாக்டர்களை சந்தித்து சசிகலாவை விடுதலை செய்வதற்கான ஆவணங்களை கொடுத்து கையெழுத்து வாங்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகளை டாக்டர்கள் சசிகலா சிகிச்சை பெற்ற வார்டுக்கு அழைத்து சென்றனர். அவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் சிறைத்துறை அதிகாரிகள் கவச உடை அணிந்து அங்கு சென்றனர்.
சசிகலாவை விடுதலை செய்வதற்கான ஆவணங்களை அவரிடம் காண்பித்து அதில் கையெழுத்து பெற்றனர். பின்னர் காலை 10.40 மணிக்கு சசிகலா விடுதலை செய்யப்பட்டதற்கான உத்தரவை அவரிடம் கொடுத்தனர். சசிகலாவின் உடைமைகளையும் அவரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து சசிகலா தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டார். சசிகலா விடுதலை செய்யப்பட்ட தகவலை சிறைத்துறை அதிகாரிகள் உள்துறையிடம் தெரிவித்தனர்.
சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவை சந்திக்க சென்றபோது டி.டி.வி.தினகரன், வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனும் ஆகியோரும் சென்று சசிகலாவை சந்தித்தனர்.
பாதுகாப்பு
சசிகலாவுக்கு இதுவரை இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சிறைத்துறை போலீஸ் பாதுகாப்பும், பெங்களூரு போலீஸ் பாதுகாப்பும் அவருக்கு போடப்பட்டு இருந்தது. தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு சிறைத்துறை போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இனி அவரது பாதுகாப்பை பெங்களூரு போலீசார் கவனித்துக்கொள்வார்கள்.
சசிகலா அரசியல் தலைவர் என்பதால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவரது வக்கீல் வாசுகி ராஜராஜன், கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பான மனு மத்திய உள்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சசிகலா தற்போது தண்டனை முடிந்து விடுதலை ஆகிவிட்டதால் அவர் இனி சுதந்திரமாக எந்த ஆஸ்பத்திரியில் வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 7 நாட்கள் மட்டுமே ஆவதால் மீண்டும் பரிசோதனை செய்து அதன் பிறகு அவர் வேறு ஏதாவது தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து பெங்களூருவிலேயே தங்கி சிகிச்சை பெறலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரது உறவினர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.
சசிகலா விடுதலை செய்யப்பட்டாலும் இன்னும் சில நாட்கள் அவர் பெங்களூரிலேயே தங்கி சிகிச்சை பெறுவார். பிப்ரவரி மாதம் முதல்வாரம் அவர் சென்னை திரும்ப முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சசிகலாவுடன் தண்டனை பெற்ற இளவரசிக்கு பிப்ரவரி 5-ந் தேதிதான் தண்டனை காலம் முடிகிறது. எனவே இளவரசியுடன் சேர்ந்து சசிகலா சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.