நெல்லையில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
1 min readThe person who pasted a poster welcoming Sasikala in Nellai has been expelled from the AIADMK
27.1.2021
நெல்லை மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய சுப்பிரமணியராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
போஸ்ட்டர்
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அங்குள்ள விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொரோனா தற்போது குறைந்துவிட்டபோதும் தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சசிகலாவை வரவேற்று நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியராஜா என்பவர் போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில் “அ.இ.அ.தி.மு.கவை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களே வருக” எனக்குறிப்பிட்டு சசிகலா புகைப்படத்தோடு நெல்லை மாநகர மாவட்டத்தினுடைய இணை செயலாளர் எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த சுப்பிரமணியராஜா சுவரொட்டிகள் ஒட்டியிருந்தார்.
நீக்கம்
இந்த நிலையில் கட்சி அலுவலகத்தில் இருந்து ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அதில், “கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி களங்கம், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காணத்தினால் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியராஜா இன்று முதல் கழகத்தின் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அவருடன் கட்சியை சார்ந்தவர்கள் உடன் பிறப்புகள் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.