“காங்கிரஸ் எம்.எல்ஏ.க்களை பாரதீய ஜனதா விலை கொடுத்து வாங்குகிறது” தூத்துக்குடியில் ராகுல் குற்றச்சாட்டு
1 min read“Congress buys Congress MLAs at BJP price” Rahul accused in Thoothukudi
27/2/2021
தூத்துக்குடியில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி “காங்கிரஸ் எம்.எல்ஏ.க்களை பாரதீய ஜனதா விலை கொடுத்து வாங்குகிறது” என்று குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடியில் ராகுல்காந்தி
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி தமிழகத்தில் தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே நிறைவு செய்துள்ளார்.
முதல்கட்ட பிரசாரத்தில் அவர் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
தற்போது அவர் தமிழகத்தில் தனது 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கியுள்ளார். இதற்காக அவர் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். அங்கு அவருக்கு கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்றும், நாளையும் ராகுல்காந்தி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிற்றார். மார்ச் 1-ந்தேதி குமரி மாவட்டத்தில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
கலந்துரையாடல்
இன்று தமிழகம் வந்த ராகுல்காந்தி தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது ராகுல்காந்தி பேசியதாவது:&
ஒரு தேசம் என்பது தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அமைப்புகள், பஞ்சாயத்துகள், பல அரசியல்சாசன அமைப்புகளால் ஆனது. கடந்த 6 ஆண்டுகளாக இந்த அமைப்புகள் மீது மத்திய அரசு திட்டமிட்ட தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டின் அரசியல் சாசன அமைப்புகள் அனைத்தையும் பா.ஜ., சீரழித்து வருகிறது. நாட்டில் ஜனநாயகம் அழிந்துவிட்டது என்பதை வேதனையுடன் தெரிவிக்கிறேன். இந்தியா பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. ஆனால், இன்று மாநிலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
நீதித்துறை மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் முழு ஆதரவு அளிக்கிறேன். அனைத்து துறையிலும் இந்திய ஆண்கள் தங்களை தாங்கள் எவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்களோ அதே கண்ணோட்டத்தில் இந்திய பெண்களையும் பார்க்கவேண்டும்.
விலைக்கு வாங்கிறது
என்மீது எந்த ஊழல் புகாரும் இல்லாததால், சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் என்னை அச்சுறுத்த முடியாது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எம்.எல்ஏ.க்களை பாரதீய ஜனதா விலை கொடுத்து வாங்குகிறது. அதிகார பலத்தால் கட்சி மாற வைக்கிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்துடன் தேர்தலை சந்திக்கிறது. மதச்சார்பின்மையை பாரதீய ஜனதா சிதைத்து விட்டது. விவசாயிகள் போராட்டம், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை ஒடுக்குவதன் மூலம் ஜனநாயகத்தை நெரிக்கிறது.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
அதன்பின் தூத்துக்குடி மீன்பஜார் அருகே நடந்த கூட்டத்தில் ராகுல் பேசும் போது, டிவியை ரிமோட் மூலம் இயக்குவது போல், தமிழக அரசை, மோடி இயக்கி வருகிறார். விரைவில், அந்த ரிமோட்டின் பேட்டரியை மாற்ற வேண்டும் என்றார்.