பண்டிகை காலங்களில் கூட்டங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை; மத்திய அரசு கடிதம்
1 min readAction to control crowds during festive periods; Federal Government Letter
24-/3/2021
பண்டிகைகளின் போது மக்கள் பொது இடங்களில் கூடுவதை தடுக்க உள்ளூர் கட்டுப்பாடுகள் அவசியம் என மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அர்சுகளுக்கு கடிதம் எழுதி உள்ளது.
பண்டிகை
உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா எடுத்த நடவடிக்கையால் தினமும் 10 ஆயிரத்துக்குள் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,17,34,058 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,60,441 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 23,907 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,12,05,160 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,68,457 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 5,08,41,286 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கட்டுப்பாடு
நாட்டின் சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வரவிருக்கும் பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்க பரிசீலிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தொழிற்சங்க மாநில நிர்வாகிகளுக்கு சுகாதார அமைச்சின் கூடுதல் செயலாளர் ஆர்டி அஹ§ஜா, எழுதிய கடிதத்தில், கொரோனாவுக்கு எதிரான போர் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது, அண்மையில் பல பகுதிகளிலிருந்து கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புகள் அதிகம் பதிவாகியுள்ளன.
கட்டுப்பாடுகள்
ஹோலி, ஈஸ்டர், பெருநாள் போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தடுக்க, உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி ஆலோசிக்குமாறு மாநில தலைமைச்செயலாளர்களுக்கு சுகாதார அமைச்சக கூடுதல் செயலாளர் கடிதம் அனுப்பி உள்ளார்.பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 இன் பிரிவு 22 இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி கூட்டம் கூடுவதை கட்டுபடுத்துங்கள் என கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது
இது போன்ற கொண்டாட்டங்களின் போது ஆட்கள் கட்டுபாடு இன்றி கூடுவதை அனுமதித்தால், கடந்த ஒரு ஆண்டு காலமாக, கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுத்த முயற்சிகளும், அதனால் கிடைத்த பலன்களும் வீணாகி விடும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.