“என் தாயை பற்றி இழிவாக பேசுவதா?” எடப்பாடி பழனிசாமி கண்ணீர்
1 min read“Speaking disparagingly of my mother?” Edappadi Palanisamy tears
28.3.2021
“என் தாயை பற்றி ஆ.ராசா இப்படி இழிவாக பேசுவதா? என்ற முதல் அமைச்சர் கண்ணீர் மல்க கூறினார்.
கண்ணீர்
ஆ.ராசா எடப்பாடி பழனிசாமி எப்படி பதவிக்கு வந்தார் என்று விமர்சிக்கும்போது பிறப்பை பற்றி எடுத்துகாட்டி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பதில் அளித்து பேசும்போது எடப்பாடி தன் தாயைப் பற்றி பேசுகிறாரே என்று கண்ணீல் மல்க கூறினார்.
சென்னை, திருவொற்றியூரில் அவர் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேச ஆரம்பிக்குமபோது, தனது தாயாரை ஆ.ராசா இழிவாகப் பேசியதாகக் குறிப்பிட்டு கண்கலங்கினார். கண்ணீரை வெளியே காட்டாமல் சிறிது நேரம் பேச முடியாமல் தலை கவிழ்ந்து நின்றார். அவர், பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-&-
அவதூறு
திமுகவினர் திட்டமிட்டு என் மீது அவதூறு பிரச்சாரம் செய்கிறார்கள். திமுகவினர் தாய்மார்களை மதிக்கவில்லை. சிந்தித்துப் பாருங்கள். நான் முதல்வராக இருக்கிறேன். இதை இங்கு பேசக்கூடாது என்றுதான் வந்தேன். ஆனால், இங்கு தாய்மார்களைப் பார்த்ததால் பேசுகிறேன்.
என் தாய்க்காக மட்டும் நான் இந்தப் பிரச்சினையைப் பார்க்கவில்லை. ஒரு குடும்பத்தில் ஒரு தாயாகப் பாருங்கள். எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசியிருக்கிறார். ஆக, ஒரு சாதாரண மனிதன் முதல்வராக இருந்தால் என்னென்னவெல்லாம் பேசுவார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு ஒரு முதல்வருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் சாதாரண மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது?
என் தாய் கிராமத்தில் பிறந்தவர், விவசாயி, இரவு பகலாகப் பாடுபட்டவர். அவர் இறந்துவிட்டார். அவரைப் பற்றி இழிவாக, தரக்குறைவாக எப்படியெல்லாம் பேசினார். ஒரு முதல்வருக்கே இந்த நிலைமை.
ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் தாய் என்பவர்தான் உயர்ந்த ஸ்தானம். யார் தாயை இழிவாகப் பேசினாலும் ஆண்டவன் நிச்சயமாகத் தகுந்த தண்டனை வழங்குவான். என் தாயை பற்றி இழிவாக பேசிய ஆ.ராசாவிற்கு இறைவன் தக்க தண்டனை வழங்குவார். தாய்மார்களை இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்திப் பேசுபவர்களுக்குத் தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.
பெண்கள் நிலை
இவர்கள் எல்லாம் ஆட்சி, அதிகாரத்துக்கு வந்தால் பெண்களுடைய நிலைமை என்ன ஆவது? தாய்மார்களின் நிலைமை என்ன ஆவது? சிந்தித்துப் பாருங்கள். இப்படிப்பட்டவர்கள் ஆட்சியில் வந்துவிட்டால் எப்படி அராஜகம் செய்வார்கள், எப்படிப் பெண்களை இழிவுபடுத்துவார்கள் என்பதை மட்டும் எண்ணிப் பார்க்க வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
ஆ.ராசா விளக்கம்
முதல்வர் இ.பி.எஸ்., தாய் குறித்து, தி.மு.க.,வின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்த ஆபாசமான கருத்தால், தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வின் மகளிர் அணி தலைவியும், கருணாநிதியின் மகளுமான கனிமொழியே உடனடியாக கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு, முதல்வரையும், அவரது அம்மாவையும், ராசா கொச்சையாக வர்ணனை செய்திருந்தார்.
நாடு முழுவதும் கட்சி தலைவர்களும் ராசாவின் ஆபாச பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நான் அப்படி என்ன முதல்வர் பழனிசாமி குறித்து பேசி விட்டேன் என்று கூறியுள்ளார். அவர் பெரம்பலூரில் பத்தரிக்கையாளர்கள் மத்தியில் கூறியதாவது:&
அப்படி பேசுவேனா
மு.கஸ்டாலினையும், இ.பி.எஸ்.,சையும் குழந்தைகளாக உருவகப்படுத்தி, நான் பேசியதை வேண்டுமென்றே சிலர் விரசமாக சித்தரித்து பரப்பி வருகின்றனர். ஸ்டாலின், கட்சியில் படிப்படியாக வளர்ந்து, தலைவராக வந்தார். அதனால் அவர் பரிணாம வளர்ச்சி பெற்ற முழுமையான குழந்தை என்று சொன்னேன். ஆனால், இ.பி.எஸ்., நேர்வழியில், மக்கள் தீர்ப்பால் முதல்வராக வரவில்லை. வேறு விதமாக, சசிகலாவின் காலைத்தொட்டு, குறுக்கு வழியில் வந்தார்.
அதனால் அவரை அப்படி வர்ணித்தேன். அதைப்போய் நான் ஏதோ முதல்வரை அவதூறாக பேசி விட்டேன், என்று சித்தரிக்கப்படுகிறது. ஒரு கட்சியில் பெரிய பதவியில் இருப்பவன் நான். மத்திய அமைச்சராக இருந்தவன். முதல்வரை அவதூறாக பேசவோ அவர் புகழுக்கு களங்கம் விளைவிக்கவோ எந்த எண்ணமும் கிடையாது.
ஒரு குழந்தை ஆரோக்கியமானது, இன்னொரு குழந்தை ஆரோக்கியமற்றது என்ற பொருளில் பேசினேன். ஆகவே, அந்த செய்தியை, யாரும் நம்ப வேண்டாம்.தேர்தல் ஆணையத்தில், அ.தி.மு.க., புகார் கொடுத்தால், சட்டப்படி சந்திப்பேன்.
இவ்வாறு ராசா தெரிவித்தார்.