“ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கியது பாரதீய ஜனதா”- பிரதமர் மோடி மதுரையில் பிரசாரம்
1 min read“Bharatiya Janata Party lifted the ban on Jallikattu” & Prime Minister Modi’s campaign in Madurai
2/4/2021
ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்தது பா.ஜ. அரசுதான் என்று பிரதமர் மோடி மதுரையில் பேசினார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக நேற்றே (வியாழக்கிழமை) மதுரை வந்தார். நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். இன்ற மதுரை பாண்டி கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில், நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். பேசத் தொடங்கும்போது, “வெற்றி வேல்.. வீர வேல்…. நல்லா இருக்கீங்களா… மதுரை வந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி ” என்று தமிழில் பேசினார். தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசினார். அவர் பேசியதாவது:&
இந்த மண் மீனாட்சி அம்மன் ஆலயம் அருள் புரியும் மண். நேற்று, மீனாட்சி அம்மனை சுந்தரேஸ்வரரையும் வணங்கி தரிசனம் செய்தேன். இனிவரும் நாட்களில் இந்த ஆன்மிக நிகழ்வை அடிக்கடி எண்ணி பார்ப்பேன்.
மதுரை மண், அழகர் பெருமாள் வீற்றிருக்கும் மண். கூடலழகர் வீற்றிருக்கும் மண். திருப்பரங்குன்றம் முருகன் வீற்றிருக்கும் மண். தமிழ்பண்பாட்டின் தொட்டிலாக மதுரை திகழ்கிறது. மகாத்மா காந்தியிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மண். தமிழுக்கும் மதுரைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மதுரை என்றால், தமிழ் சங்கம் இருப்பது நினைவுக்கு வருகிறது. அதனால், தமிழ் இலக்கியம், பண்பாட்டையும் பாதுகாக்கிறவர்களை பாராட்டி வணங்குகிறேன்.
இந்த பிராந்திய மக்கள் வலிமையான பலமும் பரந்த மனமும் கொண்டவர்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் சவுராஷ்டிராவில் இருந்து இங்கு வந்து வசிக்கின்றனர். தெலுங்கு பேசும் மக்கள் பல ஆண்டுகளாக இங்கு உள்ளனர். மதுரை நினைக்கும் போது ஒரே நாடு பெருமைமிகு நாடு என்பதன் வெளிப்பாடாக நான் பார்க்கிறேன்.
மதுரை வீரன் படம்
தென் தமிழகத்திற்கு எம்.ஜி.ஆருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. மதுரை வீரன் படத்தை யாராவது மறக்க முடியுமா. திரைப்படங்களில், எம்ஜிஆருக்கு குரல் கொடுத்தவர்களில் டி.எம்.சவுந்திரராஜன் குரலை மறக்க முடியுமா. ஆனால், மத்திய காங் அரசு, எம்ஜிஆர் அரசை கலைத்தது. மீண்டும் தேர்தல் நடந்தபோது மதுரை மேற்கு தொகுதியில் இருந்து எம்ஜிஆர் வெற்றி பெற்றார். அவர் பின்னால், பாறை போன்று மக்கள் கடுமையாக நின்றார்கள். எம்ஜிஆர். தென் தமிழகத்தில் இருந்து 3 முறை வெற்றி பெற்றார். அவரின் சமுதாயத்திற்கான நோக்கம், நமக்கு தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் கொடுக்கும்.
எல்லாருக்குமான வளர்ச்சி, எல்லாருக்கும் வளர்ச்சி என்ற மத்திய அரசின் நோக்கம் 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு, சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பேசும் போது 3 லட்சம் கோடி ரூபாயை உள்கட்டுமானத்தில் மத்திய அரசு செலவிடும் என தெரிவித்தேன். இதனால், எதிர்கால தலைமுறையினர் பயன் பெறுவார்கள்.
மத்திய பட்ஜெட்டில், பொருளாதார வழித்தடம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்றுதான் மதுரை கொல்லம் வழித்தடம். இது அமைக்கப்பட்டபிறகு தொழில்துறை வலுப்பெறும். தமிழகத்திற்கு ரெயில்வே கட்டுமானத்தில் 238 சதவீதம் அளவு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. பெரிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இனி வரும் நாட்களில், விமான திட்டங்கள், ரெயில்வே திட்டங்கள் வர உள்ளன. கிராமங்களில் அதிவேக இணைய வசதி வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வைபை வசதி அதிகரிக்கப்படும். உள்கட்டுமானங்களை அதிகரிப்பதன் மூலம், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தமிழகத்தின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது. இந்த மண், இறைவனின் சுந்தரேஸ்வரரின் திருவிளையாடல் நிகழ்ந்த மண். தண்ணீரை சேமிப்பதன் அவசியத்தை நாடு உணர துவங்கி உள்ளது.அதற்காக ஜல்ஜீவன் என்ற பெயரில் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2024க்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதனடிப்படையில், தமிழகத்தில் 16 லட்சம் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நிறைய குடிநீர் திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 24 மணிநேரமும் குடிநீர் கிடைக்கும். எதிர்காலத்தில் வைகையில் எப்போதும் தண்ணீர் ஓடும் என நம்புகிறேன். விவசாயிகளுடன் இணைந்து சொட்டுநீர் பாசனம் மூலம் அதிக மகசூல் கிடைக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போட்டால், அதிக தொழில் முதலீடு கிடைக்கும் என அர்த்தம். அதற்காக விவசாயம் சார்ந்த தொழில்கள், அவர்களுக்குலாபம் கிடைக்கும் தொழிலுக்கு முக்கியத்துவம். அதிக தொழிற்சாலைகளை கொண்டு வருவதறக்கான செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
தமிழக இளைஞர்கள் தொழில்உருவாக்குபவர்களாக உருவாக்க நடவடிக்கை எடுக்கிறோம். புதிய தொழில் துவங்க வருபவர்களுக்கு உதவி செய்கிறோம். வரி என்ற பெயரில், கொடுமை நடக்கக்ககூடாது என நடவடிக்கை எடுத்துள்ளோம். ஜவுளி துறைக்கு அதிக கடன்களையும், புதிய இயந்திரங்களை கண்டுபிடிக்க திட்டம் உதவி வருகிறோம். தமிழகத்தில், மித்ரா திட்டம் மூலம் 3 ஆண்டுகளில் 7 ஜவுளி திட்டங்கள் வர உள்ளன
திமுக, காங்கிரஸ் கட்சியிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அவர்கள் பொய் சொல்வதில் கெட்டிக்காரர்கள். இவர்கள் பொய் சொல்வதை கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் முட்டாள்கள் இல்லை. தமிழகத்தின் பண்பாடு, கலாசாரத்தின் பாதுகாவலர்களாக சித்தரிக்கிறார்கள். ஆனால், 2011ல் திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. காங்கிரஸ் அமைச்சர் ஒருவர், சுற்றுச்சூழல் துறையை கவனித்தவர், ஜல்லிக்கட்டு என்பது காட்டுமிராண்டிதனமான விளையாட்டு எனக்கூறினார். பல நூற்றாண்டுகளாக இருந்த ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டி எனக்கூறினால் என்ன அர்த்தம்.
ஜல்லக்கட்டு
காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், ஜல்லிக்கட்டை முழுமையாக தடை செய்வோம் எனக்கூறியது. இதற்காக திமுக காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும். தமிழக மக்கள் ஜல்லிக்கட்டு வேண்டும் எனக்கூறிய போது, அதிமுக கொண்டு வந்த சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கிடைக்க மத்திய அரசு உதவி செய்தது.
மருத்துவ கட்டமைப்புக்காக நிறைய திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். மருத்துவ படிப்பில், பட்டமேற்படிப்புக்கான இடங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. பொறியியல், மருத்துவ கல்வியில் தாய்மொழி வழியில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வேலை செய்யாமல் இருப்பது, அடுத்தவர்கள் வேலை செய்தால் அதனை குறை கூறி இட்டு கட்டுவதில் காங்கிரசும், திமுகவும் பயிற்சி பெற்றுள்ளன. மதுரையில் எய்ம்ஸ் கொண்டு வருவது குறித்து காங்கிரஸ், திமுக சிந்திக்கவில்லை. அதனை கொண்டு வந்தது பா.ஜ.,உலக தரம், தொற்றுநோய்க்கு ஒரு பிரிவுடன் சர்வதேச தரத்துடன் அமைய உள்ளது. இந்த திட்டம், விரைவாக நிறைவேற்றப்படும்.
இதன் மூலம், இப்பகுதி மக்கள் சர்வதேச சிகிச்சை கிடைக்க உறுதி செய்வோம். திமுக.,வும் காங்கிரசும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு எந்த விஷயமும் செய்யாத கட்சிகள். அவர்களின் கண்ணியத்தை மீட்டெடுத்தது அதிமுகவும் பா.ஜ.,வும் தான்.
சட்டம் ஒழுங்கு
திமுக காங்கிரசார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். மதுரை மக்கள் அமைதியை விரும்பியபோது. அவர்களின் குடும்ப பிரச்னை காரணமாக மதுரையை வன்முறை நகரமாக, கொலைநகராமாக மாற்றினார்கள். இந்த மதுரை மண்ணில் தான், பெண்களுக்கு அளிக்கும் மரியாதையை பார்க்கிறோம். திமுக.,வும் காங்கிரசும் மதுரையின் மதிப்பீடுகளை புரிந்து கொள்ளாத கட்சிகள். மீண்டும், மீண்டும் பெண்களை அவமானப்படுத்துவது காங்கிரஸ், திமுக.,வின் இயல்பு.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.