அசாமில் பாரதீய ஜனதா வேட்பாளர் காரில் வாக்குப்பதிவு இயந்திரம்; 4 அதிகாரிகள் சஸ்பெண்டு
1 min readVoting machine in BJP candidate’s car in Assam; 4 officers suspended
2.4.2021
அசாமில் இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்த சில மணி நேரங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்று பாரதீய ஜனதா வேட்பாளர் காரில் இருந்ததாக வீடியோ வெளியானது. இந்த விவகாரத்தில் 4 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
அசாம் தேர்தல்
அசாமில் மூன்று கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிற. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் நேற்று (வியாழக்கிழமை) இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களில் கரீம்கஞ்ச் மாவட்டம் கனிசெயில் பகுதியில் வெள்ளை நிற பொலிரோ காரில் வாக்குப்பதிவு இயந்திரம் இருப்பதை சிலர் கண்டனர். அவர்கள் அந்தக் காரை முற்றுகையிட்டு இதுபற்றி டிரைவரிடம் கேட்டனர். ஆனால் அவர் பதில் ஏதும் சொல்லாமல் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதை உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் வீடியோவாக எடுத்து டுவிட்டரில் பதிவிட, அது நாடு முழுவதும் வைரலாக பரவியது. அந்த கார் பாரதீய தலைவர் கிருஷ்ணேந்து பாலுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
இவர் தற்போது எம்.எல்.ஏ. வாக இருக்கிறார். மேலம் தற்போது தேர்தலில் வேட்பாளராக உள்ளார். அவர் தனது வேட்புமனுவில் காரின் எண்ணைக் குறிப்பிட்டு இருந்தார். அதை வைத்து அந்தக் கார் அவருடையதுதான் என்று உறுதி செய்யப்பட்டது.
4 பேர் சஸ்பெண்டு
இந்த சம்பவம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அசாம் தலைமை தேர்தல் அதிகாரி விரிவான அறிக்கை கேட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 4 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி தேர்தல் அலுவலர்கள் சிலர் கூறும்போது, வாக்குச்சாவடியிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு வந்ததாகவும் வழியில் கார் பழுதானதால் இந்த காரில் லிப்ட் கேட்டு சென்றதாகவும், பின்னர் தான் அது பா.ஜ.க., வேட்பாளருக்கு சொந்தமானது என தெரியவந்ததாகவும் கூறியுள்ளனர்.