மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்க அனுமதி இல்லை
1 min readMadurai Kallazhagar is not allowed to go down the river
19.4.2021
மதுரை கள்ளழகர் வைகை இறங்கும் விழாவிற்கு அனுமதி இல்லை என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு உள்ளது.
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவும் உலக அளவில் புகழ் செய்யது. தற்போது கொரோனா பரவல் காரணமாக சித்திரை விழாவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன்கோவில் வளாகத்திற்குள் சாமி உலாவும் திருக்கல்யாணமும் நடைபெறும் என்றும் அதற்கு பக்தர்கள் அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த அருண் போத்திராஜ் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:&
மதுரை சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன் ஒரு பகுதியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றைக் காரணம் காட்டி திருவிழாக்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மனமகிழ் மன்றங்கள், திரையரங்குகள் போன்றவை 50 சதவிகிதத்துடன் இயங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருவிழாக்களுக்கு மட்டும் முழுமையாகத் தடை விதிப்பது ஏற்கத்தக்கதல்ல.
இதன் காரணமாக அதன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பெரும்பாலானவர்கள் ஏமாற்றமடைவார்கள். ஆகவே பக்தர்கள் இன்றி, அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்த அனுமதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
அனுமதி மறுப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு, மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி அளிக்க இயலாது என கூறி உள்ளது.
கொரோனா பரவி வரும் நிலையில் விழாவிற்கு அனுமதி அளிப்பது எப்படி சாத்தியம்? வைகை ஆற்றில் தண்ணீரே இல்லை, வெறும் குப்பைகளே நிறைந்துள்ளன.கொரோனா மிகத்தீவிரமாக பரவி வரும் சூழலில், கட்டுப்பாடுகள் மேலும் அதிகப்படுத்தப்படலாம் என நீதிபதிகள் கூறினர்.