கோர்ட்டில் ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
1 min read
Armed policeman shot dead in court
22/4/2021
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆயுதப்படை போலீஸ்காரர்
கிருஷ்ணகிரியில் உள்ள ராயக்கோட்டை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இங்கு கிருஷ்ணகிரியில் உள்ள பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த, ஆயுதப்படை போலீஸ்காரர் அன்பரசன் என்பவர், நீதிபதியின் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று (புதன்கிழமை) இரவு வழக்கம்போல நீதிமன்ற வளாகத்துக்கு பணிக்காக வந்தார். இந்த நிலையில் அன்பரசன் இன்று காலை நீதிமன்ற வளாகத்திலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்குக்காக நீதிமன்றத்திற்கு வந்த பொதுமக்கள் அங்கு பெரும் கூட்டமாக கூடினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். தற்கொலை செய்துகொண்ட ஆயுதப்படை காவலர் அன்பரசுக்கு மூன்று மாதங்கள் முன்புதான் திருமணம் நடைபெற்றது.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணியில் மன அழுத்தமா? அல்லது குடும்பத்தில் ஏதேனும் பிரச்னையா? வேறு ஏதேனும் காரணங்களா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.