150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு; மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை
1 min readFull curfew in 150 districts; Health Department recommendation to the Central Government
28/4/2021
இந்தியாவில் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்ை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
150 மாவட்டங்கள்
இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக மராட்டியம், உத்தரபிரதேசம், கர்நாடகம், குஜராத், அரியானா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது. அங்கு கடந்த 2 வாரங்களை ஒப்பிடும்போது 15 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிப்பு உயர்ந்து உள்ளது.
முழு ஊரடங்கு
கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று முன்தினம் மத்திய சுகாதாரத்துறை, உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அப்போது தொற்று பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை கொண்டு வரலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
அதாவது 15 சதவீதத்துக்கும் மேல் பரவல் உள்ள 150 மாவட்டங்களிலும் சில தளர்வுகளை மட்டும் அறிவித்து விட்டு முழுமையான ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று கூறினார்கள்.
எனவே அந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசிடம் சுகாரத்துறை சிபாரிசு செய்து உள்ளது.
முடிவு அறிவிக்கும்
மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோடு கலந்து ஆலோசித்து விட்டு முடிவு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது சம்பந்தமாக மத்திய சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, “தொற்று பரவல் மிக அதிகளவில் உள்ள மாவட்டங்களில் அதன் பரவல் சங்கிலி தொடரை துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. சில வாரங்களுக்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே தான் குறிப்பிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறோம். மத்திய அரசு இதுபற்றி முடிவு எடுக்கும்” என்று கூறினார்.
இந்தியா முழுவதும் கடந்த ஒரு வாரமாகவே தினசரி பாதிப்பு 3 லட்சத்துக்கு மேல் உள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அது பெரிய ஆபத்தாக முடியும். எனவே தொற்று பரவலை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.