மராட்டிய மாநிலத்தில் இன்னொரு ஆஸ்பத்திரிலும் தீ விபத்து; 4 பேர் பலி
1 min readFire at another hospital in Maratha state; 4 killed
28.4.2021
மராட்டிய மாநிலத்தில் இன்னொரு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்து 4 பேர் உடல் கருகி இறந்தனர்.
ஆஸ்பத்திரியில் தீவிபத்து
மராட்டிய மாநிலம் மும்பை பால்கார் மாவட்டத்தில் உள்ள விரார் ஆஸ்பத்திரியில் கடந்த 23-ந் தேதி தீவிபத்து ஏற்பட்டு 15 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே மாநிலத்தில் இன்னொரு ஆஸ்பத்திரியில் தீவிபத்து ஏற்பட்டு 5 பேர் பலியாகி உள்ளனர்.
தானே மாவட்டத்தில் உள்ள கவுசா என்ற இடத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று அதிகாலை 3.40 மணிக்கு இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த ஆஸ்பத்திரி பல அடுக்குகள் கொண்டதாகும். இதன் தரைதளத்தில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வந்தன.
அந்த இடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அது மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியது. தீவிர சிகிச்சை பிரிவிலும் தீ பற்றிக் கொண்டது.
4 பேர் கருகிச்சாவு
தீ பரவியதும் நோயாளிகள் படுக்கைகளில் இருந்து எழுந்து வெளியே ஓடினார்கள். அதிக நோய் பாதிப்பு உள்ள சிலரால் எழுந்து ஓட முடியவில்லை. அவர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர்.இதில் 4 பேர் கருகி உயிரிழந்தனர். பலருக்கு படுகாயம் ஏற்பட்டது.
தீவிபத்து பற்றி அறிந்ததும் 3 தீயணைப்பு வாகனங்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்தன. 5 ஆம்புலன்சுகளும் வந்தன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினார்கள். இதனால் மற்ற மாடிகளுக்கு தீ பரவவில்லை.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 6 பேர் உள்பட 22 பேரை மீட்டனர்.
ரூ,5 லட்சம்
இந்த தீவிபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணம் தெரியவில்லை. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.