சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மரணம்
1 min readDeath of social activist Tropic Ramasamy
4.5.2021
தமிழ்நாட்டில் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக தனி ஆளாக நின்று போராடியவர் டிராபிக் ராமசாமி. இவர் நீதிமன்றத்தில் பல பொதுநல வழக்குகளை தொடர்ந்து, அதன் மூலம் பல்வேறு சமுதாய பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த டிராபிக் ராமசாமி, சிகிச்சைப் பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 87. அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கல்வி
இவரது முறையான கல்வி பன்னிரெண்டாம் வகுப்புடன் முடிந்தது. பின்னர் பிரிட்டிஷ் இன்ஸ்ட்டிட்யூட், மும்பை கல்வி நிறுவனத்தில் அஞ்சல்வழி மூலம் துணித்துறையில் AMIE பட்டம் பெற்றார். ஊர்க்காவல் படையிலும் முன்பு பணியாற்றியுள்ளார்.
ஆரம்பத்தில் ராமசாமி தானே முன்வந்து சென்னை, பாரி முனையின் முன்னால் போக்குவரத்தை ஒழுங்குப் படுத்துவதில் உதவி செய்தார். ஆகவே காவல்துறை இவருக்கு ஓர் அடையாள அட்டையை வழங்கியது. அது முதல் ”டிராபிக் ராமசாமி” என்று அழைக்கப்பட்டார்.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2015 ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2015 ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் வேட்பாளராக தனித்து நின்றார். இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளே போட்டியில் இறங்கவில்லை.
2021 மார்ச் மாதம் இறுதி வாரத்தில், கொரோனா வைரசுத் தொற்றால் பாதிக்கப்பட்ட் இராமசாமி, சென்னை இராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், எளிதாக மூச்சு விட செயற்கைக் சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. இந்நிலையில் 4 மே 2021 அன்று அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிறகும் உடல் நிலை தேறாத நிலையில் டிராபிக் இராமசாமி இன்று மாலை மரணம் அடைந்தார்.