திருப்பத்தூரில் இறந்த 5 பேர் கொரோனா நோயாளிகள்? – மருத்துவ அதிகாரி விளக்கம்
1 min read5 corona patients who died in Tirupathur? – Medical Officer Description
6.5.2021
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 5 பேர் இறந்தனர். அவர்கள் கொரோனாவில் இறந்தார்களா என்பதற்கு மருத்துவ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா நோயாளிகள்
திருப்பத்தூர் வட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனாத் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு என தனி வார்டு அமைக்கப்பட்டு அதில் 220 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலைக்குள் கொரோனா தொற்று பாதித்த 5 நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, நிருபர்களிடம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி திலீபன் கூறியதாவது:-
ஆக்சிஜன்
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்சிஜன் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. 50 சிலிண்டர்கள் உள்பட 2 டேங்குகளில் ஆக்சிஜன் உள்ளது. இதன் அளவு சுமார் 250 ஆக்ஸிஜன் சிலிண்டர்களாகும்.மேலும், இறந்ததாகக் குறிப்பிட்ட விஷமங்கலத்தைச் சேர்ந்த மாது (63) மூளை சம்பந்தமான பிரச்சனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு 8.20 மணிக்கு உயிரிழந்தார்.
அதேப்போல் ஆரிப் நகரைச் சேர்ந்த ஷேக்அலியின் மனைவி சைரா(38) புதன்கிழமை இரவு 8.50-க்கும், சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த சக்திகுமார்(40) இரவு 9.45க்கும்,நாட்டறம்பள்ளி வட்டம், தகரகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர்(45) இரவு 10.55க்கும், திருப்பத்தூர் சின்ன மதார் தெருவைச் சேர்ந்த ஹக்கீம் (63) வியாழக்கிழமை அதிகாலை 3.20 மணிக்கும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு பல காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இவர்கள் யாருக்கும் கொரோனாத் தொற்று இல்லை. இவர்கள் இறப்பிற்கு அரசு மருத்துவமனை சிகிச்சை காரணமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.