காற்றோட்ட வசதி கொரோனா பரவலை தடுக்கும்; மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறை
1 min readVentilation Facility The federa; l government’s new guideline to prevent corona spread
20/5/2021-
காற்றோட்டம் நன்றாக இருந்தால், பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும் அபாயம் குறையும் என புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது.
கொரோனா 2-வது அலை
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை, மோசமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினந்தோறும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அந்த கொலைகார வைரஸ் பலி கொண்டு வருகிறது. உயிரிழப்பு அதிகரிப்பது மக்களை சொல்லவொணா துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.
அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் 3,874 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து இருக்கிறார்கள்.
இதுவரை நாட்டில் கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 87 ஆயிரத்து 122 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 110 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதுவரை நாட்டில் 2 கோடியே 57 லட்சத்து 72 ஆயிரத்து 400 பேரை கொரோனா வைரஸ் தன் ஆக்டோபஸ் கரங்களுக்குள் கொண்டு வந்து இருக்கிறது.
புதிய வழிக்காட்டு நெறிமுறை
கொரோனா வைரஸ் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது, பொதுமக்கள் பாதிப்பில் இருந்து எப்படி தற்காத்துக்கொள்வது என்பது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறது. அவ்வகையில், தற்போது கொரோனாவின் 2வது அலை பரவலை தடுக்க மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில், வீடு, அலுவலகங்களில் காற்றோட்ட வசதி நம்மை பாதுகாக்கும், ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும், எக்ஸாஸ்ட் மின்விசிறியை பயன்படுத்த வேண்டும், வெளிகாற்று வரும் வகையில் வீடு, அலுவலக அறைகளை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
முககவசம், தனிநபர் இடைவெளி, கிருமி நாசினி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுடன் காற்றோட்ட வசதியையும் இணைத்து தற்போதைய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
பரவும் அபாயம் குறைவு
குறிப்பாக, காற்றோட்டம் நன்றாக இருந்தால், பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்கும் என கூறப்பட்டுள்ளது.