Rs 1,000 crore for storm relief to Gujarat; Prime Minister Modi's announcement20/5/2021-
20/5/2021
குஜராத்தில் புயல் பாதித்த பகுதிகளில் உடனடி நிவாரண நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
குஜராத்தை தாக்கிய புயல்
அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல், கடந்த திங்கட்கிழமை இரவில் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடந்தது. அப்போது அது அந்த மாநிலத்தின் கடலோரப்பகுதிகளில் ருத்ரதாண்டவமாடியது.
அங்கு 16 ஆயிரம் வீடுகள் இடிந்தன. 40 ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 70 ஆயிரம் மின்கம்பங்களும் சாய்ந்தன. 5,951 கிராமங்களில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின. சாலைகள் உருக்குலைந்து போயின.
சமீபத்தில் இதுவரையில் இல்லாதவகையில் இந்தப்புயல் அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
சவுராஷ்டிரா பகுதியில் இருந்து வட குஜராத் வரையில் 46 தாலுகாக்களில் 100 மி.மீ. மழை கொட்டியது. 13 பேர் புயல்-மழை, வெள்ளத்தில் பலியானார்கள். இது அந்த மாநிலத்தை பெருத்த சோகத்தில் ஆழ்த்தியது.
மோடி பார்வையிட்டார்
இந்த நிலையில் புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட விரும்பினார்.
இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டு, குஜராத்தின் பாவ் நகரில் போய் தரையிறங்கினார். அங்கு அவரை மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி வரவேற்றார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஏறி புயலால் பெரும் சேதம் அடைந்த கிர்-சோம்நாத், பாவ்நகர், அம்ரேலி, உனா, டையு யூனியன் பிரதேசம், ஜபாராபாத், மகுவா உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி இருந்தார்.
ஆய்வு
இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ ‘டவ்தே’ புயல் பாதிப்புக்குள்ளான குஜராத் மற்றும் டையு பகுதிகளை வான்வழியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் புயல் பாதித்த அனைத்து மாநிலங்களுடனும் மத்திய அரசு நெருக்கமாக பணியாற்றி வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து ஆமதாபாத்துக்கு வந்த பிரதமர் மோடி அங்கு உயர் அதிகாரிகளின் கூட்டத்தைக்கூட்டி ஆய்வு நடத்தினார்.
விமான நிலையத்தில் உள்ள குஜ்சைல் வளாகத்தில் நடந்த இந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்-மந்திரி விஜய் ரூபானி, மாநில அரசு தலைமைச்செயலாளர் அனில் முகிம், கூடுதல் தலைமைச்செயலாளர் (வருவாய்) பங்கஜ் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இதில் பிரதமர் ேமாடியிடம் புயல் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
ரூ.1000 கோடி
ஆய்வுக்கூட்டத்தையடுத்து குஜராத்தில் புயல் பாதித்த பகுதிகளில் உடனடி நிவாரண நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
புயல் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.