கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் சாவு; 3 அதிகாரிகள் சஸ்பெண்டு
1 min read22 killed after drinking counterfeit liquor; 3 officers suspended
29/5/2021
உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் இறந்தனர். இது தொடர்பாக மாவட்ட கலால் அதிகாரி உள்ளிட்ட 3 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாரயத்துக்கு 22 பேர் சாவு
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் ஒரு வியாபாரி திருட்டுத்தனமாக நாட்டு சாராயம் காய்ச்சினார். அந்த கள்ளச்சாரத்தை வாங்கி குடித்த பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக லோதா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்சுவா, அண்ட்லா கிராமங்கள், ஜவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேரத் கிராமத்தைச் சேர்ந்த பலர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கடந்த வியாழக்கிழமை முதல் நேற்று வரை கர்சுவா, அண்ட்லா, சேரத் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 28 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பல்வேறு கிராமங்களில் இருந்து பாதிக்கப்படுவோர் குறித்த தகவல் வெளியாகின்றன. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கைது
அங்கீகரிக்கப்பட்ட அளவை விட அதிக போதை தரும் போலியான மதுபானதை குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளச்சாராய தொழில் நடத்தி வரும் முக்கிய புள்ளியாக கருதப்படும் அனில் சவுத்ரி உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 2 முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு கலாநிதி நைதானி அறிவித்துள்ளார்.
3 அதிகாரிகள் சஸ்பெண்டு
இதுதவிர துறைரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. கலால் துறையைச் சேர்ந்த மாவட்ட கலால் அதிகாரி உள்ளிட்ட 3 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட கிராமங்களின் அருகில் உள்ள லைசென்ஸ் பெற்ற மதுக்கடைகளும் சீல் வைக்கப்பட்டன. அந்த கடைகளில் உள்ள மதுபானங்கள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அலிகார் மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் செயல்படும் சுமார் 500 மதுபானக்கடைகளும் மூடப்பட்டன. போலி மதுபானம் தொடர்பான விசாரணை முடியும் வரை அந்த கடைகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.