கவச உடை அணிந்து மு.க.ஸ்டாலின் கொரோனா வார்டுக்குள் சென்றார்
1 min readDressed in armor, MK Stalin marched into the corona ward
30.5.2021
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவச உடை அணிந்து, கொரோனா வார்டுக்குள் சென்றார். அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அங்குள்ள மருத்துவ கட்டமைப்புகள் குறித்தும், தினசரி பயன்படுத்தப்படும் ஆக்கிஜன் அளவு குறித்தும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு மருத்து சிகிச்சைகள் குறித்தும், அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் கேட்டறிந்தார்.
இம்மருத்துவமனை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 382 சாதாரண படுக்கை வசதிகள், 678 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள், 213 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகள், என மொத்தம் 1273 படுக்கை வசதிகளுடன் தற்போது செயல்பட்டு வருகிறது.
கவச உடை அணிந்து…
பின்னர்,முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பிரிவுக்கு நேரில் சென்று நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கும் சென்று நோயாளிகளின் நிலை குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்தியாவிலேயே முதல் முறையாக முதலமைச்சர் ஒருவர் கொரோனா நோய் தொற்று சிகிச்சைப் பிரிவிற்கு நேரில் சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரிப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிகழ்வுகளின்போது, அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் எம்.ஏ.சித்திக், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.நாகராஜன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழக செயல் இயக்குநர் ப.கார்த்திகேயன், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்பாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
==