டாக்டர்கள் தடுத்தும் கொரோனா வார்டுக்குள் சென்றது ஏன்?; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
1 min readWhy did the doctors go into the blocking corona ward ?; Interpretation by First-Minister MK Stalin
30/5/2021
டாக்டர்கள் வார்டுக்குள் செல்ல வேண்டாம் என தடுத்தும் சென்றது ஏன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா
கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவையில் உள்ள வரதராஜபுரம் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பி.பி.இ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச அடை அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவிற்குள் சென்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
மேலும் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், உணவு வழங்கும் முறை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
இதுபற்றி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நம்பிக்கை ஊட்டும்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை பி.பி.இ கிட் அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!
கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர் தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.