கண்ணாயிரத்தின்பஸ்பயணம்/ சிறுகதை/ தபசுகுமார்
1 min read
Kannayiram bus payanam/ short story by thabasukumar
13.6.2021
வாக்கிங் சென்ற கண்ணாயிரத்தைகோபமாக நாய்கடித்துவிட்டது. அவர்வீட்டில் தங்கியிருந்து சிகிச்சைபெற்றார். தன்னை கடித்த நாயும் சுகமாக இருக்கிறதா என்று விசாரித்து கொண்டார். அவருக்கு உடல் குணமாகியது. குரலில் மாற்றம் எதுவும் இருக்கிறதா என்று பரிசோதித்து பார்த்தார். அம்மா, அப்பா. பாட்டி, தாத்தா. தமிழ், மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லிபார்த்தார். நன்றாகவேகுரல்வந்தது. அப்பாட.. நாய்கடித்ததால் குரல் மாறவில்லை. தப்பித்தேன் என்று நினைத்தார். வீட்டில் ஓய்வு எடுத்தார். கொரானா தடைஉத்தரவு போட்டிருந்ததால் வெளியே செல்லமுடியாமல் வீட்டுக்குள்ளே சுற்றிசுற்றி வந்தார். நேரம் போகவில்லை. அவருக்கு போரடித்தது. ஒருவாரம் கடந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டது. பஸ்கள் ஓடின. கண்ணாயிரத்துக்கு கடலூரில் உள்ளதன் நண்பனை பார்க்க விரும்பம் ஏற்பட்டது. மனைவியிடம் சொன்னால் விடமாட்டார் என்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்தார். மனைவியிடம் பக்கத்தில் உள்ள கடைவரைக்கும் போயிட்டு வர்ரேன் என்றார். அவர் மனைவி அவரிடம் சும்மா வீட்டில் இருங்க என்றார். அவரை சமாதானம் படுத்திவிட்டு வீட்டில் இருநூறு ரூபாய் வாங்கிக்கொண்டார். முழுநூறு ரூபாய் நோட்டாக இருக்கிறதே சில்லறை இல்லையா என்றுகேட்டார். அதற்கு அவரது மனைவி கடைக்குதானே போறீங்க சில்லறை மாத்ததெரியாதா என்று சத்தம் போட்டார். உடனே கண்ணாயிரம் சரி, சரிநான் பார்த்து கொள்கிறேன். என்றுகூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேவந்தார். அப்பாட.. இப்பதான் சுதந்திர காற்றை சுவாசிச்ச மாதிரி இருக்கு என்று மனதுக்குள் சொல்லிவிட்டு புதுச்சேரி பஸ் நிலையத்துக்கு நடந்தார். அங்கு கடலூருக்கு செல்லும் தனியார் பஸ் தயாராக நின்றது. கண்ணாயிரம் பஸ்சில் இடம் பிடிக்க தாவி ஏறினார். ஜன்னலோர இருக்கை பார்த்து அமர்ந்துகொண்டார். நல்லா காற்று வரும் இயற்கை காட்சிகளை ரசித்து கொண்டே போகலாம் என்று நினைத்தார். அவருக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. பஸ்சில் கூட்டம் நிரம்பியது. கண்டக்டர் டிக்கெட் போட்டார். டிக்கெட், டிக்கெட் என்று பயணிகளிடம் கேட்டார். கண்ணாயிரம் நக்கலாக டிக்கெட்டை அவர் வைச்சிக்கிட்டு நம்ம கிட்ட டிக்கெட் கேட்கிறாரே என்று சிரித்துகொண்டார். கண்டக்டர் வேகமாக டிக்கெட்டு போடதொடங்கினார். எல்லோரும் இருபது ரூபாய் சில்லறையாக குடுங்க, என்னிடம் சில்லறை இல்லை என்றார். சிலர் ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினார்கள். கண்டக்டர் கடுப்பாகி என்ன இப்போதான சொன்னேன் எல்லாரும் ஐம்பது ரூபாயை நீட்டினால் சில்லறைக்கு எங்கே போவேன் என்று கத்தினார். கண்ணாயிரத்துக்கு வியர்த்தது. ஐம்பது ரூபாய்க்கே இப்படி கத்துறான். நம்மக் கிட்டே நூறு ரூபாய் அல்லவா இருக்கிறது. என்னசத்தம் போடப் போகிறாரோ என்று நினைத்தார். சரி சமாளிப்போம் என்று மனதை தேற்றிக்கொண்டார். அப்போது ஒருவர், ஏம்பா பஸ்சை எடுங்க புழுக்கம் தாங்க முடியல என்று கத்தினார்.
அடுத்த வினாடி பஸ் நிலையத்திலிருந்து பஸ் புறப்பட்டது. பஸ் முதலியார் பேட்டை வந்த போது கண்ணாயிரத்திடம் கண்டக்டர் எங்கே போகணும் என்று கேட்டாள். கண்ணாயிரம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கடலூர் என்றார். உடனே இருபது ரூபாயை எடுங்க என்று சொன்னரர். கண்ணாயிரம் தன்பையிலிருந்து நூறு ரூபாயை எடுத்து கொடுத்தார். அதைபார்த்ததும் கண்டக்டர் நெற்றிக் கண்ணை திறத்தார்.
ஏங்க தமிழில்தானே சொன்னேன் நான்சில்லறைக்கு எங்கே போவேன் என்று கத்தினார்.
பின்னர் ரூபாயை வாங்கிக்கொண்டு கடலூருக்கு டிக்கெட்டை கிழித்து கொடுத்தார். அதை வாங்கிய கண்ணாயிரம் மெல்லிய குரலில் சில்லறை என்றார். கண்டக்டர் அதட்டலாக கடலூர் வந்ததும் வாங்கிக்க என்று சொல்லிவிட்டு கடைசி பகுதிக்கு போனார். என்ன எல்லோரும் இங்கே நின்னுக்கிட்டா எப்படிபோவது…முன்னுக்கு போங்க, முன்னுக்கு போங்க என்றார். இதுக்கு மேலே எப்படி முன்னுக்குபோவது என்று பெண்கள் பதிலுக்குசத்தம் போட்டார்கள். கண்டக்டரோ கண்டு கொள்ளவில்லை.
படுவேகமாக பஸ் சென்றது. கண்டக்டர் அருகில் வந்த போது கண்ணாயிரம் மெல்ல சார் அந்த சில்லறை என்று கேட்டார். உடனே கண்டக்டர், கடலூரில் வாங்கிக்க என்று ஏற்கனவே சொன்னது மறந்துட்டா என்று கேட்டார். கண்ணாயிரம் மெதுவாக, நீங்க மறந்திடக்கூடாது என்று நினைவு படுத்தினேன் என்றார். அது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. லேடீஸ் எல்லாம் நின்னுக்கிட்டு வர்ராங்க.. எந்திரங்க கடைசி சீட்டுக்கு போங்க என்று கண்ணாயிரத்திடம் கத்தினார். அவர் இது என்னடாவம்பா போச்சு என்று முணங்கிக் கொண்டே எழுந்தார். தட்டுதடுமாறி கடைசி சீட்டுக்கு போனார். அவர் ஏற்கனவே இருந்த இருக்கையில் பெண்கள் இருந்தார்கள். கடைசி சீட்டில் ஜன்னலோரம் உள்ள இருக்கையில் கண்ணாயிரம் அமர்ந்தார். அப்போது பஸ் போன வேகத்தில் தூக்கிபோட்டது. கடைசி இருக்கையில் இருந்த கண்ணாயிரம் பின்பக்கத்தில் விழுந்த அடியில் அம்மாடி என்று கத்தினார்.
மெதுவா போகக் கூடாதா என்று எரிச்சலுடன் கூறினார். அப்போது அருகில் இருந்த டிப்டாப் உடை அணிந்த வாலிபர் கண்ணாயிரத்தை பார்த்து கவலைப்படாதே சகோதரா, கவலைப்படாதே என்று பாடினார். அது கண்ணாயிரத்துக்கு ஆறுதலாக இருந்தது. சிறிது நேரத்தில் அந்த வாலிபர் குடிமகனே, பெருங் குடிமகனே நான் கொடுக்கட்டுமா கொஞ்சம் உனக்கு, கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு என்று பாடினார். அப்போதுதான் அந்த வாலிபர் நன்றாக குடித்திருப்பது தெரிந்தது. கண்ணாயிரம் மூக்கை பொத்திக்கொண்டார். கண்டக்டர் அந்த வாலிபரிடம் டிக்கெட் என்று கேட்டா ர். அதற்கு அந்த வாலிபர் பஸ் எங்கே போகுது என்று கேட்டார். அதற்கு கண்டக்டர் நீ எங்கய்யா போகணும் என்றார். நான் விழுப்புரம் போவணும் என்று குளறியபடி கூறினார். கண்டக்டர் கோபத்தில் இது கடலூருக்கு போகுதய்யா. விழுப்புரம் போகாது. கடலூரில் இறங்கிபோய்யா, இருபது ரூபாய் எடு என்று கேட்டார். அந்த வாலிபர் கண்ணாயிரத்திடம் சார் ஒரு டொன்றி இருக்குமா என்றார். கண்ணாயிரம், மெல்ல நானே நூறு ரூபாயை கொடுத்திட்டு சில்லறை கிடைக்காம அவதிப்பட்டுக் கொண்டிருக்கீறேன். நீவேற என்னை அவதி படுத்திர என்றார் கோபமாக. மீண்டும் பஸ்தூக்கிப் போட்டது. கண்ணாயிரம் அம்மாடி என்று அலறினார். சீட்டில் உள்ள முன்கம்பியில் நெற்றி மோதி காயம் ஏற்பட்டது. அதை தடவி கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த வாலிபர் குடிபோதையில் குபுக்கென்று வாந்தி எடுத்தார். கண்ணாயிரம் உஷாராக விலகிகொண்டார். அதனால் அவர் மீதுபட வில்லை. ஆனால் இருக்கையின் கீழே அதுபரவி ஓடியது. கடைசி சீட்டில் இருந்த அனைவ ரும் மூக்கை பொத்திக்கொண்டு எழுந்து வேறு இடத்தை நோக்கிநகர்ந்தனர்
கண்ணாயிரமும் இதுஎன்னடா அவஸ்தை என்று புலம்பியவாறு வெளியே நகர்ந்து வந்தார். கடைசி சீட்டில் இவ்வளவு பிரச்சினை இருக்குதா, சில்லறை கேட்டதால கண்டக்டர் நம்மளை மாட்டி விட்டுட்டார் என்று நினைத்தார். அப்போது கண்டக்டர் அங்கு வந்தார்.
என்னவாமீட் பண்ணீட்டானா காலையிலே வந்து உயிரை வாங்குறாங்கய்யா என்று புலம்பினார். பின்னர் அங்குள்ள டப்பாவில் இருந்த மண்ணை எடுத்து அந்த இடத்தில் கொட்டினார். கண்ணாயிரத்தைபார்த்து என்னைய்யா உன்கூட வந்த ஆளா அவன். இப்படி தண்ணீ அடிச்சுட்டு சேட்டை பண்ணுகிறான், என்றார்.
கண்ணாயிரம் வேகமாக, அந்த பையன் என்கூடவந்த ஆள்இல்லை. என்கூட இருந்த ஆள் என்றுசொன்னார். கண்டக்டர் அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவர் அவரது இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார்.
பஸ்வேகமாகசென்றது. கண்ணாயிரம் நின்று கொண்டே பயணம் செய்தார். குடிபோதையில் இருந்த வாலிபர் அப்படியே கடைசி இருக்கையில் படுத்து கொண்டார். நாளை முதல் குடிக்கமாட்டேன் என்று பாடலை வேறு முணுமுணுத்துக் கொண்டு இருந்தான். பஸ் தவளக்குப்பத்தில் நின்றது. சிலர் இறங்கினர். பலர் ஏறினர். பஸ் சிறிய குலுக்கலுடன் மீண்டும் புறப்பட்டது. கண்ணாயிரத்துக்கு சில்லறை காசை எப்படிவாங்குவது என்ற எண்ணமே அதிகமாக இருந்தது. சில்லறையை தருவானா, தரமாட்டானா ஒண்ணும் எழுதியும் தரல. அடபோய்யா சில்லறையை அப்போதே கொடுத்திட்டேன் என்று சொன்னால் என்ன செய்வது என்று எண்ணினார். பயம் மனதில் ஏற்பட்டது. கண்டக்டர் அருகில் வந்தபோது பரிதாபமாக பார்த்தார். சில்லறையை கேட்கவும் பயம். கண்டக்டர் திடீரென்று எல்லாரும் டிக்கெட் எடுத்தாச்சா. கடலூரில் இறங்கும் போது எல்லோர் கையிலும் டிக்கெட் இருக்கணும் என்றார். கண்ணாயிரம் கால்சட்டை பாக்கெட்டில் வைத்த டிக்கெட் பத்திரமாக இருக்கிறதா என்றுபார்த்து கொண்டார். பஸ் சீறிபாய்ந்தது. ஆல்பேட்டை செக் போஸ்ட் வந்ததும் போலீசார் பஸ்சை நிறுத்தி சோதனை போட்டார்கள். மதுபாட்டில் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு கடத்தப்படுகிறதா என்று ஒவ்வொரு பையாக சோதனையிட்டனர். எந்தபாட்டிலும் சிக்கவில்லை. கடைசி சீட்டில் படுத்திருந்த வாலிபரை தட்டி எழுப்பி சோதனை செய்தனர். அவனது மேல்சட்டையை தடவிய போலீசாரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பனியனுக்குள் மதுபாட்டில்கள் பதுக்கிவைத்திருப்பது தெரிந்தது. முதுகில் இரண்டு போடுபோட்டு அவனை பஸ்சைவிட்டு இறக்கி புறக்காவல் நிலையத்துக்கு இழுத்து சென்றனர். அவன் அவரை தெரியும் இவரை தெரியும் என்று சொல்லியபடி சென்றான். அடப்பாவி மதுபாட்டிலா கடத்தி வந்தான் என்று கண்ணாயி ரம் கன்னத்தில் விரல் வைத்தபடிபார்த்தார்.
மீண்டும் பஸ் புறப்பட்டது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் பயணிகள் இறங்கினார்கள். இருக்கைகள் காலியாகின. கண்ணாயிரம் ஓடிபோய் ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டார். அப்பாட என்ன கால் வலி என்று காலை அமுக்கிவிட்டுக் கொண்டார். சில்லறை வாங்கணுமே என்று நினைத்து கண்டக்டரை தேடினார். கண்டக்டர் பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார். அவர் அருகில் வருவார் கேட்கலாம் என்று எண்ணினார். ஆனால் அவர் அசையவே இல்லை. பஸ் கடலூர் பஸ் நிலையத்துக்குள் நுழைந்தது. கண்ணாயிரம் எழுந்து நின்று கொண்டார். கண்டக்டர் என்ன பண்ணுகிறார் என்று பார்த்தார். பஸ் நிலையத்துக்குள் வந்ததும் கண்டக்டர் பஸ்சைவிட்டு இறங்கினார். கண்ணாயிரம் பஸ்சைவிட்டு இறங்க முயன்றார். உடனே கண்டக்டர் கோபமாக யாரும் பஸ்சை விட்டு இறங்காதீங்க. பஸ்நின்றதும் இறங்குங்க என்றார். பஸ்சை டிரைவர் ரிவர்ஸ் எடுத்தார். கண்டக்டர் வரலாம், வரலாம் என்றார். பஸ்புதுச்சேரிபஸ்கள்நிற்கும்இடத்தில்வந்துநின்றது. உடனே பஸ்சில் இருந்து எல்லோரும் ஒரே நேரத்தில் இறங்க முயன்றார்கள். அதேநேரத்தில் புதுச்சேரிக்கு போகிறவர்களும் வேகமாக பஸ்சுக்குள் ஏறினார்கள். கண்ணாயிரம் இடையில் சிக்கிக் கொண்டார். அவரால் கீழே இறங்க முடியவில்லை. ஏங்க ஏன் இப்படி அவசரப்படுறீங்க ஆட்கள் இறங்கின பிறகு ஏறுங்க என்றார். யாரும் கேட்க வில்லை. கண்ணாயிரம் தன் முழுபலத்தையும் பயன்படுத்தி ஆட்களை விலக்கி விட்டுவிட்டு வேகமாக கீழே இறங்கினார். அவரது சட்டை வியர்வையால் நனைந்திருந்தது. நெற்றி வியர்வையை துடைத்தபடி கண்டக்டரை தேடினார். காணவில்லை. அவருக்கு நெஞ்சு அடைப்பது போலிருந்தது. பஸ்சின் அருகில் நின்ற டிரைவரிடம் கண்டக்டரை எங்கே சில்லறை வாங்க வேண்டும் என்றார்.
உடனே அவர், கண்டக்டரா அவர் அந்த டீக்கடை பக்கம் நிற்பார். போய்பாருங்க என்று கூறினார். கண்ணாயிரம் வேகவேகமாக அங்கு ஓடினார். அங்கு ஒருபத்து பேர் கூடி நின்று கண்டக்டரிடம் டிக்கெட்டை காட்டி சில்லறை வாங்கிக் கொண்டிருந்தனர். கண்ணாயிரம் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. பையிலிருந்த டிக்கெட்டை எடுத்து கண்டக்டரிடம் நீட்டினார். யாருய்யா அது தண்ணி வண்டி பார்ட்டி பிரண்டா. எவ்வளவு கொடுத்த என்றுகேட்டார். நூறு ரூபாய் என்றார் கண்ணாயிரம்.
உடனே கண்டக்டர் தன் பையிலிருந்து பழையதும் புதியதுமாக அறுபது ரூபாய்க்கு உரிய நோட்டுகளை கண்ணாயிரத்திடம் கொடுத்தார்.
அதை எண்ணிப்பார்த்த அவர் திடுக்கிட்டார்.
சார் ஒரு டிக்கெட்டு இருபது ரூபாய்தானே, நான் நூறு ரூபாய் கொடுத்தேன் மீதி சில்லறை எண்பது ரூபாய் கொடுங்க என்றார்.
கண்டக்டர் கோபமாக யோவ் தண்ணி வண்டி பார்ட்டி உன்பிரண்டு அவன் உங்ககிட்டதான் ரூபாய் வாங்கிக்கிங்க என்று சொல்லிவிட்டு இறங்கினான். அவன் தலையை ஆட்டுனான். நீங்களும் அவனை பார்த்து கையை அசைச்சிங்க என்றார்
. கண்ணாயிரத்துக்கு கண்ணைகட்டியது. அவன் போயிட்டு வரேன் என்று தலையை ஆட்டினான். நானும் தெரியாத்தனமாக கையை அசைச்சுப்புட்டேன். அவன் யாருன்னு எனக்கு தெரியாது என்று சொல்லிப் பார்த்தார். எடுபடவில்லை. கண்டக்டர் விசலை ஊதிக்கொண்டே அடுத்து புதுச்சேரிக்கு செல்லதயாரானார்
=
-வே. தபசுக்குமார், புதுவை