கண்ணாயிரத்துக்கு ஜோதிடர்சொன்ன புதியகண்டம்/ நகைச்சுவைசிறுகதை
1 min read
Jothidar with kannayiram/ short story by thabasukumar
19/6/2021
புதுச்சேரி பஸ்நிலையத்தில் டிப்டாப் வாலிபரிடம் செல்லாத பத்துரூபாயை தள்ளி விட்டார். அந்த வாலிபரிடம் புத்தம் புது நூறுரூபாய் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு போனார். அது கள்ள நோட்டு என்று அவர் மனைவி சொன்னதும் மயங்கி விழுந்தார்.
அவர் மனைவி பயந்துபோய் என்னங்க, என்னங்க என்று தட்டிஎழுப்பினார். கண்ணாயிரம் மெல்ல கண்திறந்துபார்த்தார். என்ன.. அந்த ரூபாயில் நடுவில் கம்பி தெரியுதா என்று பாரு என்று மனைவியிடம் கூறினார். அவர் நூறு ரூபாய் நோட்டின் நடுவில் கம்பி தெரிகிறதா என்றுபார்த்தார். கம்பி தெரியவில்லை. ஏங்க கம்பி தெரியலை என்று கத்தினார், கண்ணாயிரம்.
அவரை கத்தாதே என்று அதட்டினார். அப்போது டிவிசீரியலுக்கு இடையில் ஒருமுக்கிய செய்தி, புதுவையில் மர்ம வாலிபர் மதுக்கடை, மளிகைக்கடை, ஓட்டல் மற்றும் பஸ்நிலையத்தில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டிருந்தது தெரியவந்துள்ளது. எனவே கள்ள நோட்டை வைத்திருப்பவர்கள் உடனடியாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி வாசிக்கப்பட்டது. கண்ணாயிரத்துக்கு வியர்த்தது. ரூபாய் நோட்டில் கம்பி இல்லையா. அப்பம் போலீஸ்நிலையத்தில் கம்பி எண்ண வேண்டியதுதான் என்று புலம்பினார்.
அவரது மனைவி அவரை சமாதானப்படுத்தினார். பயப்படாதீங்க உங்களுக்கு எப்படி கள்ள நோட்டு கிடைத்தது என்று கேட்டார். கண்ணாயிரம் நடந்ததை சொன்னால் மாட்டிக்கொள்வார். டிப்டாப் வாலிபருக்கு ஏன் சில்லறை கொடுத்தீர்கள் என்றுகேட்பார். பதில் சொல்லமுடியாது என்று நினைத்தார். மயங்கி விழுவதை தவிர வேறுவழியில்லை என்று எண்ணினார். அடுத்த நிமிடம் ஆ என்று சத்தமிட்டபடி மீண்டும் மயங்கி விழுந்தார். அவர் அதிர்ச்சி அடைந்து, கள்ள நோட்டை பற்றி கேட்டாலே மயங்கி விழுந்துவிடுகிறார். இனி அதை பற்றிகேட்கக் கூடாது என்று நினைத்தபடி கண்ணாயிரம் முகத்தில் தண்ணீரை தெளித்தார்.
கண்ணாயிரம் திடுக்கிட்டு எழுந்தார். டீவி ஓடிக்கொண்டிருந்தது. ஏய் முதலில் அதை ஆப் பண்ணு. வேறு எதையும் சொல்லிடபோகிறான் என்று படபடத்தார். ஏய் என் நெஞ்சைதொட்டுபாரு… இதயம்ரொம்ப வேகமாக துடிக்குது.கள்ள நோட்டை பற்றிஎன்னிடம் கேட்காதே. இதயம் நின்றுவிடும் சரியா என்று பரிதாபமாக சொன்னார்.
சரிங்க, எனக்கு நீங்க தான் முக்கியம். கடைக்கு போகாதீங்க என்று சொன்னால் கேட்க மாட்டிக்கீறீங்க.. ஏதாவது ஒன்றில் மாட்டிக்கீறீங்க என்ன செய்யிறது என்று அலுத்துக்கொண்டார்.
சரி, இந்த கள்ள நோட்டை என்ன செய்யலாம் என்று கேட்டார். உடனே கண்ணாயிரம் அதைபற்றிநாளைக்கு யோசிப்போம். அதைஒரு பெட்டியிலேபோட்டு பூட்டு. யாருக்கிட்டேயும் செல்லாதே. நமக்கு நேரம் சரியில்லை. என்றார். அவர்மனைவியும் ஆமாங்க. நீங்கள்எவ்வளவு நல்லவரு, வல்லவரு. ஆனா ஒருமாசமா நீங்க. எதை தொட்டாலும் பிரச்சினையாக இருக்கு, நாளை நம்ம ஜோதிடருக்கிட்ட போய் கேட்போம். சாப்பிட்டு விட்டு பேசாம படுத்து தூங்குங்க என்றார் அன்புடன். கண்ணாயிரம் சாப்பாடு எல்லாம் வேண்டாம் என்றார். அவர் மனைவி ஒண்ணும் கவலைப்படாதீங்க. சாப்பிடுங்க, நாளைக்கு நூறு ரூபாய் நோட்டே செல்லாது என்று சொன்னால் என்ன செய்வீங்க என்றுகூறினார். மனைவியின் சமாதானத்தை ஏற்றுகண்ணாயிரம் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கினார்.
காலையில் கண்ணாயிரம் விழித்தார்.அவர் மனைவி வேகமாக போய் குளிச்சிட்டு வாங்க ஜோதிடர் வீட்டுக்கு போகணும்என்று அவசரப்படுத்தினார். கண்ணாயிரமும் சரி போ குளிச்சிட்டுவர்ரேன் என்று குளியலறைக்கு சென்றார். குளித்துவிட்டு வேட்டி சட்டை அணிந்து வெளியில் செல்ல தயாரானார். அவர்மனைவியும் குளித்துவிட்டு வந்தார். கண்ணாயிரத்தின் ஜாதக நோட்டை தேடிப்பிடித்து எடுத்தார். பின்னர் கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள ஜோதிடர்வீட்டுக்கு நடந்தார்கள்
ஜோதிடர்வீட்டுமுன் கூட்டம். காலணிகள் இங்கே இளைப்பாரட்டும் என்று ஓரிடத்தில் எழுதி போடப்பட்டிருந்தது. எல்லோரும் செருப்பை கழற்றி போட்டிருந்தார்கள்.
கண்ணாயிரம் புதுசெருப்பு போட்டிருந்தார். அதை அங்கு கழற்றிவிட்டு செல்ல யோசித்தார். அவர் மனைவி ஏங்க செருப்பை கழற்றி இங்கே போடுங்க பத்திரமாக கிடக்கும் என்று சொன்னார்.
கண்ணாயிரமும் மனைவி சொல்லியவாறு செருப்பை கழற்றி ஓரமாக போட்டார். அவர் மனைவியும் அதன் அருகில் செருப்பை கழற்றினார். அடையாளத்துக்கு அவைகள் மேல்நான்குகல்லை தூக்கி வைத்தார்.
அவர்மனைவி சத்தம்போட்டார் தலையில் அடித்துக்கொண்டு வாங்க உள்ளே என்று கண்ணாயிரத்தை அழைத்து சென்றார்.
இரு.. இரு வாரேன் என்ற கூறி… காலடி எடுத்து வைத்தவருக்கு இதற்கு முன்பு செருப்பால் தான் பட்ட கஷ்டம் நினைவுக்கு வந்தது. மீண்டும் வெளியே வந்து.. சுற்றும்முற்றும் பார்த்தார். தன்னுடைய செருப்பையும், மனைவியின் செருப்பையும் ஏற்கனவே இருப்பில் மறைத்து வைத்திருந்த மஞ்சப்பையில் திணித்து சுருட்டி வைத்துக்கொண்டார்.
கண்ணாயிரத்தை பார்த்ததும் ஜோதிடர் வாங்கோ என்று வரவேற்றார். கண்ணாயிரத்தின் மனைவி ஜாதக நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்தார். சாமி,வீட்டிலே ஒரே குழப்பம். வீட்டுக்காரர் எதை செய்தாலும் பிரச்சினை. இதற்கு தீர்வு கிடைக்குமா என்று கேட்டார். ஜோதிடர் நோட்டில்ஜாதக கட்டங்களை பார்த்தார். என்ன மகர ராசி, சிம்ம லக்னம். ஏழைரை சனி நடக்குது. அதுதான்ஆட்டிப்படைக்குது. இவர் பேசினாலும் குற்றம். பேசாவிட்டாலும் குற்றம். நாக்குல சனி. ஏதாவது ஏடாகூடமாபேசி மாட்டிக்குவார்.வீட்டை விட்டு செல்லும் நிலை கூட வரலாம். அப்புறம் கேளுங்கோ, இவாளுக்கு தண்ணியிலே கண்டம் என்று அடிக்கினார்.
உடனே கண்ணாயிரம் தண்ணியிலே கண்டமா ஆசியா கண்டமா, ஆப்பிரிக்கா கண்டமா, பாதிகண்டம் தண்ணியிலே தானே இருக்கு நீங்க எந்த கண்டத்தை செல்லுறீங்க என்று சிரித்தார்.
அவர் மனைவி முறைத்து பார்த்தார்.
ஜோதிடரிடம் இதற்கு பரிகாரம் உண்டா என்று கேட்டார். அவர், கண்ணாயிரம் தண்ணீ பக்கம் போகாம இருப்பது நல்லது. பாத சனி இப்போஎன்னசெய்யுறது. இது முடிந்தபிறகு கண்ணாயிரம் ஓகோ என்று இருப்பார். எல்லாம் சேமம்தான். என்று கூறினார்.
கண்ணாயிரத்தின் மனைவி அவரிடம் நூறு ரூபாயை கொடுத்தார். ஜோதிடர் அதிர்ச்சியுடன் லோகத்திலெ என்ன நடக்குது என்று உங்களுக்கு தெரியாதா நூறு ரூபாய் கள்ள நோட்டு நடமாடுதாமே. நோக்கு தெரியாதா. ஐம்பதுரூபாய் நோட்டா குடுங்க என்றார். கண்ணாயிரம் அதிர்ச்சி அடைந்தார். அவரது மனைவி நூறுரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். ஜோதிடர் பெற்றுக்கொண்டு சந்தோசமா போயிட்டு வாங்கோ என்று அனுப்பிவைத்தார்.
கண்ணாயிரமும் சரிபோலாம் வா என்று மனைவியை அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.
முன் வாசலில் கிடந்த செருப்பை காணமால் திடுக்கிட்டு கத்திய மனைவியின் வாயை பொத்தினார். பின்னர் மனைவியை கரகரவென்று தெரு முனைக்கு இழுத்துவந்தார்.
என்னங்க… என்று மனைவி கேட்க… பைக்குள் ஒளித்து வைத்திரந்த செருப்புகளை எடுத்து கொடுத்தார்.
இந்த செருப்ப பைக்குள்ள வச்சதாலேத்தான்… ஜோசியர்ட்ட நிம்மதியாக கேட்டேன் என்றார்.
கணவரை நினைத்து மனைவி தலையில் அடித்துக் கொண்டாள்.
இருவரும் நடந்தார்கள். ஏங்க, நூறு ரூபாய் கள்ள நோட்டைஜோதிடரிடம் தள்ளிவிடலாமுன்னு பார்த்தா முடியாம பேச்சு. கள்ள நோட்டு விவகாரம் ஊரெல்லாம் பரவி போச்சு இனி எங்கும் மாற்ற முடியாது என்று முணங்கியபடிவந்தார். கண்ணாயிரம் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.
அப்போது ஒருவர், வாழ்க்கையில் கலக்கமா, வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லையா, தொழிலில் லாபம் இல்லையா. கவலைப்படாதீர்கள். என்னை பார் யாகம் வரும் என்ற பஞ்சகல்யாணி படம் போட்ட போர்டை உங்கள் வீட்டு முன் உங்கள் கடையின் மாட்டுங்கள். கண்திருஷ்டி கழியும். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும், வரும் ஐம்பது
ரூபாய்தான், பஞ்சகல்யாணி போர்டை வாங்கிட்டு போங்க என்றுகூறினார்.
கண்ணாயிரம் மனதில் சபலம்ஏற்பட்டது. தன்மனைவியிடம் மெல்ல, வீட்டுமனை கண்திருஷ்டி அதிகமாக இருக்கு ஒரு பஞ்சகல்யாணி போர்டை வாங்கி மாட்டுவோம் என்றார். அவரது மனைவியும் சரி என்றார். ஐம்பது ரூபாய் பணம் கொடுத்து ஒரு பஞ்சகல்யாணி போர்டை வாங்கிக்கொண்டு இருவரும் வீட்டுக்கு நடந்தார்கள்.
-வே. தபசுக்குமார். புதுவை