கண்ணாயிரத்தை தேடி வந்த மோகினி/ நகைச்சுவை சிறுகதை / தபசுகுமார்
1 min read
Mohini who came in search of Kannayiram/ story by Thabasukumar
10/7/2021
ரேடியோவில் பேய் பாட்டாக கேட்டதால் கண்ணாயிரம் பயத்தில் இருந்தார். ஆனால் கண்ணை இறுக்கி படுத்து கொண்டார்.
மோகினி வெள்ளை உடையில் வந்து போறது போல் கனவு வந்து போனது. இதனால் திடுக்கிட்டு விழித்தார். படுத்துக்கொண்டே கதவைப் பார்த்தார். கதவு பூட்டப்பட்டு இருந்தது. நிம்மதி பெருமூச்சு விட்டபடி திரும்பி படுத்தார். அப்போது அவருக்கு ஜன்னல் பட்டுவிட்டது. அங்கே வெள்ளை உடை அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தது. அய்யய்யோ ஜன்னல் திறந்து இருக்கிறதே…. அதோ மோகினிதான் வெள்ளை உடையில் வந்துவிட்டாள். ஜன்னலை அடைக்க பயம். மோகினி மாயக்காரி என்று சொல்வார்களே.. ஆம் ஜன்னல் வழியாக உள்ளே வரப்பார்க்கிறாள். அடுத்த நொடியில் ஜல்ஜல் என்று சத்தம் கேட்டது. மேலும் மல்லிகையின் மணம் வந்தது. ஆமா.. மோகினிதான் வந்துவிட்டாள்.. என்று பயம் தொற்றிக்கொண்டது.
அப்போதுதான் மனைவியின் நினைவு வந்தது. அவள்தான் காலில் புதுகொலுசு வாங்கிப்போட்டது நினைவுக்கு வந்தது. மேலும் தலைநிறைய மல்லிகைப்பூ வைத்திருந்தாள். ஜன்னலில் திரைச்சீலைதான் காற்றில் ஆடியது. இவைதான் தன்னை பயம்காட்டியது. நல்ல வேளை இரவு மோகினி ன்னு கத்தாம இருந்தேன். சந்தி சிரிச்சிருக்கும். நம்ம ரொம்ப பயந்த ஆளா இருக்கும் என்று மனதில் நினைத்து கொண்டார்.
செம்புல தண்ணி குறைஞ்சிருந்தா மோகினி வந்திருக்குன்னு சொன்னாரே.. போய் பார்ப்போம்… என்று எழுந்து தவழ்ந்து கொண்டே செம்பு இருக்கும் இடத்திற்குச் சென்றார். லேசாக கையை தொட்டுப்பார்த்தார். செம்பு லேசாக கவிழ்ந்து கொஞ்சம் தண்ணீர் சிந்திவி்ட்டது. அய்யய்யோ… என்ன செய்ய என்று நினைத்த கண்ணாயிரம் ஒரு தம்ளர்ல தண்ணீய கொண்டு வந்து ஊற்றினார். அப்பா மனைவி முழிக்கல… நைசா மீண்டும் வந்து படுத்துக் கொண்டார்.
பொழுது விடிந்தது. அவர் மனைவி சத்தம் போட்டார்.
ஏங்க.. இங்க வாங்க. செம்பில் உள்ளத ண்ணீ கீழே கொட்டிக்கிடக்குது. தண்ணிகுறைஞ்சா காத்துக் கருப்பு இருக்குன்னு கோடாங்கி சொன்னார். இப்போ. தண்ணிபொங்கி வழிஞ்சி கீழே ஓடியிருக்கே.. இதுக்கு என்ன அர்த்தமோ தெரியலையே என்று புலம்பினார். கண்ணாயிரம் செம்பு தண்ணீரை எலிதட்டிவிட்டிருக்கும். என்றார்.
அதற்கு அவர் மனைவி… ஏங்க அது எப்படி உங்களுக்கு தெரியும். நீங்க சமாளிக்கீங்க.. இரவு வரும் கோடாங்கி கிட்டே கேட்டுக்க வேண்டியதுதான். நீங்க எப்படியும் பவுர்ணமி பூஜைக்கு போய் தான் ஆகவேண்டும். ரெடியாகுங்க என்றார்.
கண்ணாயிரம் மெல்ல மறுபரீசிலனைக்கு இடமில்லையா என்று அப்பாவியாக கேட்டார். அவரது மனைவி வாய்ப்பே இல்லை என்றார்
.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்.. கண்ணாயிரம் அண்ணே பவுர்ணமி பூஜைக்கு ரெடியாகிட்டீங்களா. என்ன ஒருசுறுசுறுப்பே இல்லாம இருக்கீய..சேவக்கோழி வாங்கிட்டியளா. என்று கேட்டான். கண்ணாயிரம் அவனை முறைத்துபார்த்தார்.
நாம கஷ்டபடுவதில் இவனுக்கு எவ்வளவு ஆர்வம். இவனையும் கூட கூட்டிட்டு போயிட்டு வேண்டியதுதான். இவனுக்கும் இரண்டு சவுக்கடி வாங்கிட்டு க்க வேண்டியதுதான் என்று மனசுக்குள் நினைத்தார்.
-வே. தபசுக்குமார். புதுவை.