'Need' selection on September 12; Announcement by the Union Minister of Education
12/7/2021-
வருகிற செப்டம்பர் 12-ந் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வு
எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத, லட்சக்கணக்கான மாணவர்கள் நாடு முழுதும் காத்திருக்கின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி குறித்து, மத்திய கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:-
நாடு முழுவதும், மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு வரும் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும். கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிமுறைகளை பின்பற்றும் விதமாக தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155 லிருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் முகக்கவசம் வழங்கப்படும். தேர்வு முகமை இணையதளத்தில் நாளை மாலை 5 மணி முதல் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
வழக்கு
இது குறித்து தமிழக நல்வாழ்வுதுறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- நீட் தேர்வு ஆய்வுக்குழுவுக்கு எதிராக பாஜக., வழக்கு தொடர்ந்து உள்ளது. அந்த வழக்கு ஜூலை13-ந் தேதி (நாளை) கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாடு அரசு, மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கி வருகிறது. நீட் தேர்வு வேண்டாம் என்பதே திமுகவின் நிலைப்பாடு. மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராவதில் தவறு இல்லை.
இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.