"Importation of life-saving drugs should be tax-exempt" -cheef-Minister Stalin's letter to Union Finance Minister
13.7.2021
உயிர்காக்கும் மருந்துகளின் இறக்குமதிக்கு வரிவிலக்கு வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதம்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைகளுக்கு, மரபணு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மரபணு நோய் பாதித்த ஒரு நபருக்கு செலுத்த வேண்டிய மருந்தின் விலை ரூ.16 கோடியாக உள்ளது. இதுபோன்ற மருந்துகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் முதுகெலும்பு தசை செயலிழப்பு பாதிப்புக்கு ஆண்டுக்கு 90 முதல் 100 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய்க்கான மருந்துகளும், சிகிச்சையும் அதிக விலை கொண்டதாக இருப்பதால், இந்நோயால் பாதிக்கப்படுவோர் சிகிச்சைக்கான செலவை மேற்கொள்ள கடும் சிரமப்படுகிறார்கள்.
இந்த மருந்துகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும்போது, சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அண்மையில், ஒரு குழந்தைக்காக இறக்குமதி செய்யப்பட்ட இந்த மருந்து மீதான வரிகளை மத்திய அரசு விலக்கிக் கொண்டது.
வரிவிலக்கு
எனவே, நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர்காக்கும் மருந்துகள் இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளிலிருந்து விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு உரிய அறிவுறுத்தல்களைத் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.