நீட் பற்றி பேச தி.மு.க.வுக்கு அருகதை இல்லை; பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
1 min readDMK has no qualms about talking about Need; Interview with Pon.Radhakrishnan
1.8.2021
நீட் பற்றி பேச தி.மு.க.வுக்கு அருகதை இல்லை என்று முன்னாள் ஒன்றிய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
முன்னாள் ஒன்றிய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது:-
நீட் தேர்வு
கொரோனா 3-வது அலை வருமா? வராதா? என்று தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
பொதுமக்கள் அனைவரும் அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்து நடக்க வேண்டும்.
நீட் தேர்வுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. ஒன்றிய அரசு மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீதம் ஒதுக்கீடு வழங்கி உள்ளது.
விரைவில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தனர்.
அப்போது ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்து காங்கிரஸ், தி.மு.க.வினர் பேசவில்லை. நீட் தேர்வில் மாணவர்கள் சாதிக்க தொடங்கி உள்ளனர். எனவே அவர்கள் வாழ்வில் மண்ணை வாரி தூற்ற வேண்டாம்.
56 சதவீதம் அதிகரிப்பு
பா.ஜ.க. ஆட்சிக்கு முன்னர் 2014-ம் ஆண்டு வரை 189 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 215 தனியார் மருத்துவக்கல்லூரிகளும் இருந்தது. தற்போது மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 289 அரசு மருத்துவக்கல்லூரிகளும், 269 தனியார் மருத்துவக்கல்லூரிகளும் அதிகரித்துள்ளது.
6 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 56 சதவீதம் அதிகரித்து உள்ளது.
அருகதை இல்லை
நீட் குறித்து பேசுவதற்கு தி.மு.க.வினருக்கு அருகதை இல்லை. பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி மோடி அரசின் திட்டங்களை வீடு தோறும் சென்று கூறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.