பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 பதக்கம்
1 min readIndia won 3 medals in a single day at the Paralympics
29.8.2021
டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளி வென்றார். மேலும் பாராலிம்பிக் ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் வெண்கல பதக்கம் வென்றார். இதற்கிடையே பாராலிம்பிக்கில் வட்டு எறிதலில் வெண்கலப் பத்தகம் வென்ற இந்திய வீரர் வினோத் குமாரின் வெற்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில், டோக்கியோ பாராலிம்பிக் நடக்கிறது. இதில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் ‘டி 46-47’ பிரிவு பைனலில் இந்தியா சார்பில் நிஷாத் குமார் (‘டி-47’), ராம் பால் (‘டி-47’) பங்கேற்றனர். இதில், ராம் பால், அதிகபட்சமாக 1.94 மீ., தாண்டி 5வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் நிஷாத் குமார், அதிகபட்சமாக 2.06 மீ., உயரம் தாண்டி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அமெரிக்காவின் ரோடெரிக் டவுன்சென்ட் (‘டி-46’), அதிகபட்சமாக 2.15 மீ., தாண்டி உலக சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை கைப்பற்றினார். மற்றொரு அமெரிக்க வீரர் தல்லாஸ் வைஸ் (‘டி-46’) 2.06 மீ., தாண்டி 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.
இதன்மூலம் டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது பதக்கம் கிடைத்தது. டேபிள் டென்னிசில் இந்திய வீராங்கனை பவினா வெள்ளி வென்றார். தவிர, பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு 4வது பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்திய வீரர்களான கிரிஷா (வெள்ளி, 2012, ‘எப்-42’ பிரிவு), மாரியப்பன் (தங்கம், 2016, ‘எப்-42’ பிரிவு), வருண் சிங் (வெண்கலம், 2016, ‘எப்-42’ பிரிவு) பதக்கம் வென்றிருந்தனர்.
3வது பதக்கம்
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இன்று ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீரர் வினோத் குமார் இறுதிச்சுற்றில் 19.91 மீட்டர் தூரம் வட்டு எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். அத்துடன் ஆசிய சாதனையும் படைத்துள்ளார். இப்போட்டியில், போலந்து வீரர் கோஸ்விச் (20.02 மீட்டர்) தங்கப்பதக்கமும், குரோஷிய வீரர் வெலிமிர் சாண்டர் (19.98 மீட்டர்) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். வினோத் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியாவுக்கு 4 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என, 15 பதக்கம் கிடைத்துள்ளன.