இந்தியாவுடன் அரசியல், வர்த்தக உறவை பேண விருப்பம்; தலிபான் மூத்த தலைவர் தகவல்
1 min readWillingness to maintain political and trade relations with India; Taliban senior leader informed
30/8/2021-
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான பெருளாதார, வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை தொடர்ந்து பேண விரும்புவதாக, தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார்.
இந்தியா முதலீடு
ஆப்கனில் சுமார் 500 திட்டங்களை மேற்கொள்ள 3 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.22,000 கோடி) இந்தியா முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து ஷேர் முகமது அப்பாஸ் தெரிவித்து உள்ளதாவது:
வர்த்தக உறவு
தெற்காசியாவில் இந்தியா முக்கியமான நாடாக உள்ளது. அந்நாட்டுடன் ஆப்கனுக்கு உள்ள அரசியல், பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளுக்கு தலிபான்கள் மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம். அவற்றை தொடர்ந்து பேண விரும்புகிறோம்.
இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவை மேம்படுத்த நிர்மாணிக்கப்பட்ட வான் வழித்தடம் மீண்டும் திறக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் வழியாக இந்தியா – ஆப்கன் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக முக்கியம்.
இவ்வாறு ஷேர் முகமது அப்பாஸ் கூறியுள்ளார்.
இந்தியாவில் பயிற்சி பெற்றவர்
ஷேர் முகமது அப்பாஸ், உத்தரகண்டின் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில், கடந்த 1980ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் வெளிநாட்டு ராணுவ வீரர் என்ற முறையில் பயிற்சி பெற்றார். அவர் ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் இணைந்த நிலையில், பின் அந்தப் பணியில் இருந்து விலகி தலிபான்களுடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது.