June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கோடாங்கியை மீட்ட கண்ணாயிரம்/ நகைச்சுவை சிறுகதை

1 min read

Kodangiyai meeta kannayiram / story by Thabasukumar

11/9/2021

பவுர்ணமி பூஜைக்கு சென்ற கோடாங்கி காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணாயிரம் கடத்தி சென்றதாக புகார் வந்ததால் அவரை அழைத்துகொண்டு காட்டில் எல்லாம் போலீஸ் தேடினர். அப்போது பவுர்ணமி பூஜை நடந்த இடத்தின் அருகே உள்ள பனைமரத்தில் கோடாங்கி கட்டி வைத்திருப்பதை போலீசார் பார்த்தனர். அவரை சவுக்கால் தாக்கிய வாலிபரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். கண்ணாயிரத்தை பார்த்து அந்த வாலிபர் கோபத்தில் கத்தினார். கண்ணாயிரத்துக்கு அந்த வாலிபர் யார் என்று தெரிந்தது. பவுர்ணமி பூஜைக்கு சென்ற போது பாதை மாறி சென்றதால் எதிரே வந்த ஒருதலைகாதல் வாலிபர் தன் கன்னத்தில் பளார் என்று அறைந்தது நினைவுக்கு வந்தது. கண்ணாயிரம் முகத்தை மூடிக்கொண்டார்.

போலீசார் அந்த வாலிபர் முதுகில் ஓங்கி இரண்டு அடிவிட்டனர்.அவன் கையிலிருந்த சவுக்கால் அடிக்க பாய்ந்தான். போலீசார் அதை பறித்து தூக்கிவீசினார்கள். பின்னர் அந்த வாலிபரின் கைகளை துணியால் கட்டினர். அவன் ஆ.. ஊ என்று கத்தினார்.
போலீசார் பனைமரத்தில் கட்டிவைத்திருந்த கோடாங்கியை மீட்டனர். சார், நல்லவேளையாக வந்து என்னை காப்பாத்தினீங்க இல்லைன்னா இவன் என்ன கொன்னிருப்பான் என்று கண்ணீர் விட்டார். அவர் முதுகில் சாட்டையால் அடித்ததால் ஏற்பட்ட காயம் இருந்தது. அவரிடம் நடந்தது என்ன என்று கேட்டனர்.
கோடாங்கி மெல்லிய குரலில் அவன் இருக்கும்போது ஒண்ணும் கேட்காதீங்க.அவன் என் மேலே பாய்ஞ்சிருவான் என்றார்.
சரி. முதலில் அவனை ஸ்டேசனுக்குகொண்டு போவோம். அங்கவைச்சு விசாரிச்சிக்கலாம் என்று போலீசார் முடிவுசெய்தனர்.
கோடாங்கி தன் பை மற்றும் சவுக்கு எடுத்துகொண்டு புறப்பட்டார். கோடாங்கியிடம் அந்த சேவக்கோழியை எங்கே என்று கண்ணாயிரம் கேட்டார். அந்த லூசுபய சேவக்கோழியை புடுங்கி காட்டுக்குள் விரட்டிவிட்டுட்டான் என்று கண்ணாயிரத்திடம் மெல்லகூறினார்.
கண்ணாயிரம் அப்படியா , அது எங்க வீட்டுக்கு வந்திடுமா என்று அப்பாவியாக கேட்டார். கோடாங்கி கோபத்தில் அதா இப்ப முக்கியம். பேசாம நட என்றார். பின்னர் அந்த வாலிபரை தள்ளிக்கொண்டு போலீசார் நடந்தார்.
அவன் பின்னால் கோடாங்கியும் கண்ணாயிரமும் நடந்து வந்தனர். அந்தவாலிபர் திரும்பிபார்த்து கண்ணாயிரத்தை மீண்டும் முறைத்தார். போலீசிடம் கண்ணாயிரம் காட்டிகொடுத்துவிட்டதாக அந்த வாலிபர் நினைத்தார். கண்ணாயிரம் அவன் பார்வையில் படாமல் கோடாங்கியின் பின்னால் பதுங்கிகொண்டார். வேகமாக நடந்த அவர்கள் ஊரின் எல்லையை அடைந்தனர். அங்கே மோட்டார் சைக்கிள் வாலிபர் மற்றும் சிலர் நின்றுகொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிள் வாலிபரை பார்த்தும் கண்ணாயிரத்துக்கு மிக்க மகிழ்ச்சி. ஏண்டா எங்கடா போன என்றுகேட்டார். அதற்கு அந்த வாலிபர், மழைபெஞ்சுதா அடுத்த தெருதிண்ணையிலே படுத்திருந்தேன், தூங்கிட்டேன். காலையிலே வீட்டுக்காரர் எழுப்பிவிட்டபிறகுதான் வீட்டுக்கு போனேன். அப்பதான் தெரிஞ்சது கோடாங்கியை தேடி நீங்க போனது என்றான்.
கண்ணாயிரம் அவனைகட்டிபிடித்துகொண்டார். டேய், உன்னையும் நான் கடத்திட்டுபோயிட்டதா சொல்லிப்புட்டாக. நீவந்ததாலே நான் தப்பிச்சேன் என்றார்.
அந்தநேரத்தில் ஒருவாலிபர், கோடாங்கியை மீட்ட அண்ணன் கண்ணாயிரம் வாழ்க என்று கோஷமிட்டான். கண்ணாயிரம் ஓடிச்சென்று அந்த வாலிபரின் வாயை பொத்தினார். வேண்டாம் ராசா, வேண்டாம். இருக்கிற பிரச்சினை போதாதுன்னு நீவேற பிரச்சினையை கிளப்பாதே.அமைதியா இரு என்றார்.

அவர் அமைதியானார்.ஒருதலை காதல் வாலிபரை போலீசார் போலீஸ்நிலையத்துக்கு இழுத்து சென்றனர். கோடாங்கி மற்றும் கண்ணாயிரம் பின்னால் சென்றார்கள். மோட்டார் சைக்கிள் வாலிபர் தன் நண்பர்களுடன் வெளியே நின்றார்.

கண்ணாயிரத்தை பார்த்ததும் இன்ஸ்பெக்டர் என்ன பிரச்சினை என்றார். உடனே ஒரு போலீஸ்காரர், சார், இந்த கோடாங்கியை இந்த வாலிபர் கடத்திட்டுபோயி பனைமரத்தில் கட்டிவைத்து சவுக்கால் அடிச்சான். கண்ணாயிரம் உதவியால் அவரை மீட்டோம் என்றார். இன்ஸ்பெக்டர் உடனே வெரிகுட், வெரிகுட். என்று கண்ணாயிரத்தை பாராட்டினார்.

கோடாங்கியை ஏன்டா கடத்தின என்று வாலிபரிடம் இன்ஸ்பெக்டர் அதட்டியபடி கேட்டார். உடனே அந்த வாலிபர் வீரப்பா பாணியில் ஹ… ஹ என்று பயங்கரமாக சிரித்தார். பின்னர், ஏன் கடத்தினேன் எதற்கு கடத்தினேன். விசித்திரமான கேள்வி. ஏன் கொல்லவில்லை என்று நீங்கள் கேட்டிருக்கலாம். பரவாயில்லை. எனக்கொரு காதலி இருந்தாள். அது ஒரு வசந்தகாலம். அவள் சேரநாட்டு இளம் பெண். அவள் பெண்ணல்ல தேவதை. அவள் தென்றல் செல்லும் சாலையில் கல்லூரிக்கு செல்லும் அழகே அழகு. பார்ப்பேன். பார்த்துக்கொண்டே இருப்பேன். என்று சொல்லிக் கொண்டு போனான்.
இன்ஸ்பெக்டர் இடைமறித்து நீ பார்த்த அந்த பெண்ணு பாத்துச்சா என்று கேட்டார். உடனே அந்தவாலிபர் இல்லையே இல்லையே என்ன செய்வேன். நான் அவளிடம் கேட்டேன். அவளுக்கு புரியவில்லை. மொழி பிரச்சினை. என்று புரிந்துகொண்டேன். மலையாளம் கற்றேன். அந்த மைவிழியாளை மலையாளத்தில் அழைத்தேன். சிரித்துக்கொண்டே போய் விட்டாள். என்ன செய்வேன். நான் என்ன செய்வேன். அவளை அழைத்தேன். திரும்பிபார்த்தாள். நான் உடனே, நான் உன்னை அழைக்கவில்லை என்று பாடினேன்.அவள் அப்படியா என்னை அழைக்கவில்லை என்று நடக்க தொடங்கிவிட்டாள். நான் மீதி பாட்டை பாடினேன். என்உயிரை அழைக்கிறேன் என்று தொடர்ந்து பெய்த பாடியபோது ஈவ்டீசிங் கேசில் என்னை போலீசார் கைது செய்துவிட்டார்கள். தெய்வீக காதலின் அருமை அவர்களுக்கு எப்படி தெரியும் என்றான்.
இன்ஸ்பெக்டர் கோபத்தில் லூசுப் பயல. நீவச்சது தெய்வீக காதல் அல்ல, ஒருதலை காதல். உன்னை கைது பண்ணாம என்ன செய்வாங்க. சரி கோடாங்கியை ஏன் கடத்தின அதை முதலில் சொல் என்றார் இன்ஸ்பெக்டர்.
அந்த வாலிபர் கண்ணீருடன் சொல்ல தொடங்கினார்.


வே. தபசுக்குமார். புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.