தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை திறக்க காவிரி நீர்மேலாண்மை ஆணையம் உத்தரவு
1 min readCauvery Water Management Authority orders to open water supply to Tamil Nadu
27.9.2021
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய செப்டம்பர் வரையிலான நீரை திறக்கும்படி காவிரி நீர்மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
காவிரி மேலாண்மை
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14வது கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தின் சேவா பவனில் நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை என தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. செப்டம்பர் 23 வரை 37.3 டி.எம்.சி. காவிரி நீர் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும் கர்நாடகா செயல்படுத்தவில்லை. கர்நாடகாவில் அதிகளவில் மழை பெய்து வரும் நிலையில் காவிரியில் நீர் திறக்கப்படவில்லை. அக்டோபர் மாதத்திற்கான நீர் பங்கீட்டையும் உடனே வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
உத்தரவு
இந்த நிலையில் செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.