சிசு கொலை/ சிறு கதை/ கடையம் பாலன்
1 min read
Sisu Kolai/ Short story by Kadayam Balan
15/10/2021
துப்பு துலக்குவதில் கில்லாடியான போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை பாண்டியனுக்கு வந்த செய்தி மூளை உந்துதலை ஏற்படுத்தியது. பிறந்து ஐந்து மாதமே ஆன பெண் குழந்தை பெரிய பிளாஸ்டிக் பக்கட்டுக்குள் விழுந்து இறந்து போனதாம். அது எப்படி முடியும்? எப்படியும் சிசு கொலையாகத்தான் இருக்கும்? விரைந்தார் துரைபாண்டியன்.
அங்கே பக்கெட் அல்ல… உயரம் குறைவான அகலமான பெரிய பேசனில் முக்கால் அளவு தண்ணீர்… குழந்தை விழுந்து இறக்க வாய்ப்பு உண்டு என்று யூகித்துக் கொண்டார்.
தரையில் கிடைந்த குழந்தை அருகே.. இளம் தாய் துர்க்கா அழுது கொண்டிருந்தாள். “அய்யா என் குழந்தை என்னைவிட்டு போயிட்டாளே…” என்று கதறினாள்.
“என்னம்மா பிள்ளைய கவனமாக பாத்துக்க வேண்டாமா?”
“இவா தூங்கிக்கிட்டு இருந்தாள். நான் துவைச்ச துணிய காய போட போனேன். அதுக்குள்ளாற விழிச்சி இப்படி விழுந்து இறந்துட்டாளே..”
குழந்தையின் முகத்தை பார்க்க துரைபாண்டியன் தன் கைகளால் தொட்டபோது அதிர்ச்சி அவரை தாக்கியது. ஆம் குழந்தையின் உடல் ஜில் என்று இருந்தது. அதன்பின் பேஷனில் இருந்த தண்ணீரிலும் கை வைத்தார். அதுவும் ஓரளவு குளிர்ந்த நிலையில் இருந்தது. அந்த தாய் முன் பரிதாபமாக முகத்தை காட்டியபடி மூளைக்கு வேலை கொடுத்தார்.
சற்று தொலையில் ஃபிரிட்ஜ் இருந்தது. அதை திறந்து பார்த்தபோது ஒரு அடுக்கு காலியாக இருந்தது. அங்கே இருக்க வேண்டிய பொருட்கள் எல்லாம் கிச்சன் மேடையே ஆக்கிரமித்து இருந்ததோடு ஒழுங்கற்ற நிலையில் கிடந்தன.
போலீஸ் அதிகாரியின் இந்த நடவடிக்கையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். பதற்றத்தின் எல்லைக்குச் சென்றுவிட்டாள், துர்க்கா.
“துர்க்கா.. உனக்கு எத்தனை பிள்ளை?”
“ரெண்டு பிள்ளைங்க. இது ரெண்டாவது மகள்.”
“இந்த வீட்ல யாரெல்லாம் இருக்கீங்க?”
“என் கணவர் வேலைக்காக வெளியூர்ல இருக்கிறாரு. வாரம் ஒருநாள்தான் வருவாரு. எங்கூட எம்மாமியார் இருக்காங்க.”
“இப்போ அவங்கள எங்க?”
“அவங்க பக்கத்து ஊர்ல உள்ள மகள் வீட்டுக்கு போயிருக்காங்க.”
“துர்க்கா.. இந்தக் குழந்தை.. இன்னிக்கு சாகல… நேற்று காலையிலயே இறந்துட்டுது அப்படித்தானே?”
இன்ஸ்பெக்டரின் கேள்வி எங்கோ சுற்றி வளைக்கிறது என்பதை உணர்ந்த துர்க்கா தன்னையும் அறியாமல் சில நொடிகள் யோசிக்க ஆரம்பித்தாள்.
“ம்.. ம்… ஆமா சார்… உங்ககிட்ட உண்மைய மறைக்கவிரும்பல.. நேத்தே இந்த குழந்தை தண்ணிக்குள்ளாற விழுந்துட்டுது. நான் தனியா இருந்தேனா… என் வீட்டுக்காரர் வந்தவுடன் சொல்லாம்ன்னு நினைச்சேன். அதுக்குள்ள உங்க வரைக்கும்போய் பிரச்சினை தெரிஞ்சிட்டுது.
“ஏம்மா ஒரு பொய்ய மறைக்க.. இத்தனை பொய் சொல்லவேண்டுமா?”
“சார்… இல்ல சார்…” கண்கள் தாரைதரையாக கொட்டின.
பிள்ளையை பறிகொடுத்தவள் மீது பட்சாதாபம் வரத்தான் செய்தது. ஆனாலும் கடமை என்ற திரையை போட்டு அதை மறைத்துக்கொண்டார், துரைபாண்டியன்.
“உங்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கு.. இது ரெண்டாவது.. அதனால் இந்தக் குழந்தைய கொன்னுட்டீங்க.. சாரி இந்த கொலைய நீங்க செய்யல… உங்க மாமியார்தான் செஞ்சிருக்கணும். உங்க மாமியார் தலைமறைவா ஆயாச்சு… ஒரு கொலைய மறைக்க எத்தன நாடகம்? ம்…”
“இல்ல சார்… எம் மாமியார் கொல்லல”
“ஏம்மா மாமியாரை காப்பாத்த பாக்குற.. அவா உன் பிள்ளைய கொலை செய்தவா.. இதோ பாரு… நாங்க வச்சக்குறி தப்பாது”
துர்க்காவில் பதிலை எதிர்பார்க்காமல் அந்த அறையை ஆராய்ந்தார்… அங்கே சில தடங்கள் அவர் கண்ணுக்கு பட்டன. அங்கே கிடைந்த குழந்தைகளின் ஆடைகளை லத்திக் கம்பால் தூக்கியபடி வந்தார். திரும்பி வந்து துர்க்காவை கோபக்கணலோடு வெறித்துப்பார்த்தார்.
துர்க்கா தலையில் அடித்து அடித்து ஓவென்று அழுதாள்
“சார்… என்னை மன்னிச்சிடுங்க.. என் குழந்தைய நான்தான் கொன்னேன்.. இந்த பாவிதான் கொன்னது… என் புருஷன் சம்பளம் எங்களுக்கு போதல… இதுலவேற இரண்டாவதும் பொண்ணு பிறந்துட்டா-.. எங்களால வளக்க முடியாதுய்யா… பிறந்து கஷ்டப்படுவதோட… நிம்மதியாக இறக்கட்டும்ன்னுதான் கொன்னுட்டேன் ஐயா.. யாரும் செய்யாத பாவத்தை செஞ்சுட்டேன் ஐயா.. என்ன நீங்க இல்ல.. அந்த ஆண்டவனே மன்னிக்க மாட்டாரு…. என்னை கைது பண்ணுங்க… அப்பத்தான் நான் செஞ்ச காரியத்துக்கு கொஞ்சமாவது மன்னிப்பு கிடைக்கும்.
துரைபாண்டி நக்கலாக சிரித்தார். அந்த நேரத்தில் அவருடன் வந்திருந்த போலீசார் அவளை கைது செய்ய விலங்குடன் நெருங்கினார்கள். அவர்களிடம்
“துரைபாண்டியன்… நீங்க கொஞ்சம் வெளியில நில்லுங்க.. இவக்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.”
போலீசார் வெளியே செல்ல.. அந்த அறையில் துர்க்காவும் துரைபாண்டியனும் மட்டும் இருந்தார். குழந்தை உயிரற்ற நிலையில்.. அதன் கண்கள் இவர்களை வெறித்து பார்த்த கோலத்தில் இமைக்காமல் கிடந்தது.
குழந்தையின் பிணத்தை எடுக்க துர்க்காவின் கைகள் துடித்தன. அதை லத்திகம்பு தடுத்தது.
“என்னை முறைச்சி பார்க்காதம்மா… நாங்க செஞ்ச பாவத்தை மன்னிச்சிடும்மா…” என்று குழந்தையின் பிணத்தைப் பார்த்து அழுதாள்.
“இதோ பாரும்மா… வீணா அழுவாதே… உண்மைய சொல்லி தண்டனைய குறைக்க பாத்துக்கோ…”
“இல்ல சார் என் மாமியார் கொல்லல… அவங்க ஒரு அப்பாவி. அவங்க மேல பழிபோடக்கூடாது..”
“அப்படின்னா…”
“சார் சத்தியமா சொல்றேன் சார்… என் வீட்டுக்காரருக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல. அவரு வெளியூர்ல இருந்தாரு… அவரு இந்தக் குழந்தைய கொல்லக்கூட சொல்லல… அவரு மேல சந்தேகப்படாதீங்க.. சந்தேகப்படாதீங்க.. இந்தக் குடும்பத்துல.. நான்தான் கொலைகாரியா வந்து சேர்ந்துட்டேன்.”
மீண்டும் துரைபாண்டி அவளையே பார்த்தார்.
“இதோ பார்… இந்த துணிகள் யாருடையது?”
“இது செத்துப்போன பாப்பாவோடது.”
“சரி.. இந்த கவுண்…?”
“என் பெரிய பொண்ணோடது”
“இந்த ரெண்டு துணியையும் துவைச்சி காயப்போட மறந்துட்ட.. என்ன?”
“ஆமா சார் ஆமா சார்.”
“நீ துவைச்சப்பிறகும் இந்த கவுண் ஏன் அழுக்கு இருக்கு?”
“அது.. அது.. நான் சரியா துவைக்கல.. இல்ல சார்…”
“ஆமா இந்த ரெண்டு துணியும் ஏன் அடுப்பங்கரைக்கு போனது?”
“இல்ல…சார் குழந்தை தண்ணிக்குள்ள விழுந்ததும். அந்த பதட்டத்துல இந்த ரெண்டு துணிய மட்டும் அங்கேயே வச்சிட்டேன்..”
இப்போது துரைபாண்டியனுக்கு உண்மையிலேயே கோபம் வந்தது.
“என்ன உளருற… குழந்தைய கொன்னேன்னு ஒப்புக்கிட்டு இப்போ.. தண்ணியில விழுந்துட்டுன்னு சொல்ற…” லத்திக்கம்பை ஓங்கினார்.
“இல்லய்யா… இப்போ மூளையே குழம்பி போன மாதிரி இருகுய்யா”
“இதோ பாரு… நீ என்ன நாடகம் ஆடினாலும்.. போலீஸ்காரங்கிட்ட பலிக்காது.. இந்த குழந்தைய கொன்னது நீயோ.. உன் மாமியாரோ… உன் புருஷனோ கொல்லல… கொன்னது யார் தெரியுமா? உன்னோடு மூத்தப் பொண்ணுதான்.”
“அய்யய்யோ… அய்யய்யோ…”
“அழாத… கொஞ்சம் அமைதிய இரு… உன் பெரிய பொண்ணு நேற்று வரைக்கும் இங்கத்தான் இருந்திருக்கு… அதுக்கான தடங்கள் எனக்கு கிடைச்சிருக்கு… இனிமேயும் உண்மைய மறைக்காத”
“என்னை மன்னிச்சிடுங்க… இந்தக் குழந்தை சாவுக்கு பெரியவாத்தான் காரணம். இந்தக் குழந்தக்கூட அவா விளையாடும்போது குளிப்பாட்றதா சொல்லி தண்ணிருக்குள்ள போட்டுட்டா… சார் அவள ஒண்ணும் பண்ணிடாதீங்க.. அவளை ஒண்ணும் பண்ணிடாதீங்க சார்… அவா வாழ்கையே நாசமாயிடும்.. அவளுக்காகத்தான் நான் இவள கொன்னதா சொன்னேன்.”
துரைபாண்டியனினங கண்களில் இரக்கம் பனித்தன. அவள் சொல்வதை மனம் ஏற்றுக்கொண்டது.”
வெளியே வந்த துரைபாண்டியன், கண்களால் போலீசாருக்கு சாடைக்காட்ட அவர்கள் விரைந்து சென்று துர்க்காவை கைது செய்தனர்.
இப்போது விலங்குடன் துர்க்காவுக்கு கண்ணீர் வரவில்லை. சோகத்துக்குள்ளும் மனம் ஒருவித மகிழ்ச்சியை கண்டிருந்தது.