May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்துக்காக மனைவி கேட்டவரம்/ நகைச்சுவை கதை

1 min read

Blessing asked by kannayiram wife

11/10/2021

கண்ணாயிரத்தை தேடி வந்த பெண் கவுசல்யா தன் கணவர் பெயர் கண்ணாயிரம் அவர் மகன் பெயர் சுரேஷ் என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் விசாரித்தபோதும் கண்ணாயிரம் இதை ஏற்றுக்கொண்டார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த கண்ணாயிரம் மனைவி பூங்கொடி பஞ்சாயத்துபேச தன் அப்பாவை அழைத்துவருவதாக பஸ்சில் ஏற சென்றார். இதனால் கண்ணாயிரம் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். ஏழரை மணி ராகு காலம் பிறக்கிறதுக்கு முன் வாக்கிங் போயிட்டு வந்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது என்று நினைக்கிறேன். என்ன செய்யிறது. நாயை கண்டுபயந்து நின்னுட்டேன். இல்லன்னா சரியான நேரத்துக்கு வந்திருப்பேன். எல்லாம் இந்த நாயால் வந்தவினை என்று தனக்குதானேசொல்லிக்கொண்டார்.
ஊர்மக்கள் என்ன நடக்கிறது என்றுபார்ப்போம் என்று காத்திருந்தனர்.
கண்ணாயிரம் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் அவர் மனைவி பஸ்சில் ஏறி அருகில் உள்ள தனது தந்தை ஊருக்குசென்றார்.
தனது அப்பாவிடம் நடந்த விவரங்களை அழுது கொண்டே சொன்னார். அதை கேட்டதும் அவர்கண் சிவந்தது. கண்ணாயிரமா அப்படி பண்ணுனான் இன்னைக்கு இரண்டில் ஒண்ணுபாத்துடுவோம் என்று அரிவாளைகையில் எடுத்தார்.
புறப்படும்மா.. ஊருக்கு என்றார். அரிவாளை பார்த்ததும் அரிவாள் வேண்டாம். அவர் ரொம்ப பயப்படுவார். அரிவாளை வைச்சுட்டுவாங்க என்று பூங்கொடி கூறினார்.
அதற்கு அவரது அப்பா, அரிவாள் இல்லாட்டி எனக்கு பயமா இருக்குமே என்றார்.
உடனே பூங்கொடி அப்பா அரிவாளை கொண்டு வாங்க. ஆனா இரண்டு முறைக்கு மேல் அவரை அரிவாளை காட்டிமிரட்டக்கூடாது. சரியா என்று கேட்டார். அவரது தந்தையும் சரிம்மா. நீசொல்லுறபடி கேட்கிறேன் என்றார்.
வீட்டைவிட்டுவெளியேவந்தார்கள். பூங்கொடியும் தந்தை தனக்கு தெரிந்த டாக்சியை வரவழைத்தார். எங்கே பஞ்சாயத்துக்கு போனாலும், இந்த டாக்சியிலெதான் போவார். அப்படி இந்த டாக்சியிலே அரிவாளுடன் போனால் அவர் பஞ்சாயத்து வெற்றிபெறும். யார் பஞ்சாயத்துக்கு கூட்டிட்டுபோறாங்களோ அவங்க டாக்சிவாடகையும் ஆயிரத்து ஒரு ரூபாயும் குடுக்கணும்.
அருவா பஞ்சாயத்து அமாவாசை என்றாலே ஊரெல்லாம் பிரபலம். அவர் கொஞ்சம் கறுப்பா இருப்பார். ஆறடி உயரம், நீண்ட மீசை அவருக்கு பிளஸ்பாயிண்டு. அவர்எலேய் என்று கத்தினால் அந்த ஊரே அரண்டு போகும்.
அப்படிப்பட்டவர் தன்மகளுக்காக பஞ்சாயத்துக்கு புறப்பட்டு வந்தார். கார் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்தது.

கண்ணாயிரம் வீட்டுக்குள் சென்று சட்டைபோட்டுட்டுவரலாம் என்று பார்த்தார் பூங்கொடி கதவை பூட்டிவிட்டு சென்றிருந்தார். அடடா காலையில் வாக்கிங் போயிட்டு வந்தால் சூடாக இட்லிகிடைக்கும் என்று பார்த்தால் சூடா ஏச்சுதான் கிடைச்சுது. என்ன நம்ம நேரம் இப்படிஇருக்கு என்று கன்னத்தில் விரல் வைத்தபடி நின்றார். அப்போது முதியவர் ஒருவர் ஏய் கண்ணாயிரம் எவ்வளவு நேரம் காத்திருக்கிறது. இந்த பிரச்சினைக்குதீர்வுதான் என்ன.. என்றார்.
கண்ணாயிரம் இப்ப எனக்கு வயிறு பசிக்கு அதுக்கு வழிசொல்லுங்க என்று வயிற்றை தடவினார். ஏய் நாங்க இப்ப வாழ்க்கை பிரச்சினைபற்றி பேசிக்கிட்டு இருக்கிறோம். நீ வயிற்றைபற்றிபேசுற என்று கோபப்பட்டார்.
ஏங்க எதைசொன்னாலும் கோபப்படுறீங்க. உங்களுக்கு ரத்தகொதிப்பு இருக்கான்னு செக்பண்ணுங்க என்றார் கண்ணாயிரம்.
அதை கேட்ட முதியவர் ஏய் உங்கிட்ட பேசிக்கிட்டு இருந்தா உண்மையிலே எனக்கு ரத்தகொதிப்பு வந்துடும்.. என்று சொல்லியவாறு ஒரு மரநிழலில் போய் அமர்ந்தார். மற்றவர்களும் அந்த மர நிழலுக்குசென்றார்கள். வெயில் அதிகமாகிகொண்டுபோனது.
சிறுவன் சுரேஷ் தண்ணி என்றான். கண்ணாயிரம் பக்கத்தில் உள்ள ஓட்டலுக்கு அழைத்துச்சென்று தண்ணீ வாங்கிகொடுத்தார். அங்கு இட்லி கிடைக்கும் இருப்பதை பார்த்து இங்கே சாப்பிடவேண்டியதுதான். காசு பிறகு கொடுத்துடலாம் என்று நினைத்தார்.
சுரேசு.. உட்காரு… சாப்பிடுவோம் என்றார். அவனுக்கும் பசி… சரி என்று தலையை ஆட்டினான்.பின்னர் இருவரும் ஓட்டலில் அமர்ந்து சாப்பிட்டார்கள்.
என்னப்பா இட்லி இவ்வளவு கல்லுமாதிரி இருக்கு. சின்னபையன் எப்படிசாப்பிடுவான்… என்று கண்ணாயிரம் ஓட்டல் தொழிலாளியை கண்டித்தார்.
அவர் சத்தம் போடாதீங்க.. நல்ல இட்லிகொண்டுவர்ரேன் என்று உள்ளே சென்று இட்லி கொண்டு வந்து சிறுவனுக்குவைத்தான். அந்த இட்லி மென்மையாக இருந்தது.
ம்.. சத்தம் போட்டாத்தான் நடக்குது. பாத்தியா சுரேசு என்று கண்ணாயிரம் தன் சாமார்த்தியத்தை சொல்லிபெருமைபட்டுக்கொண்டார்.
சாப்பிட்டபின் கண்ணாயிரம் அப்பாட.. இப்பதான் வயிறு நிரம்பி இருக்கு. என்று கையை கழுவியபடி சொன்னார். சிறுவன் சுரேசுக்கும் வாயைகழுவிவிட்டு கண்ணாயிரம் ஒரு டீ என்றார். தொழிலாளி டீ கொண்டு வந்து கொடுத்து விட்டு வேறு எதுவும் வேணுமா என்று கேட்டார். கண்ணாயிரம் அவ்வளவுதான் என்று சொன்னதும் தொழிலாளி எழுபது ரூபாய்க்கு பில்போட்டுகொண்டுவந்து கொடுத்தார். கண்ணாயிரம் வாங்கி பார்த்துவிட்டு டீயை குடித்தார். பின்னர் ஓட்டல் முதலாளியிடம் பில்லை கொடுத்து விட்டு நாளைக்கு கொடுக்கிறேன் என்றார். ஓட்டல் முதலாளி பணம் வேண்டாம். அந்த கள்ள நோட்டு வாலிபனை கண்டுபிடிக்கிற குழுவில் நீங்க இருக்கிறதா சொன்னாங்க.விரைவில் அவனை கண்டுபிடிங்க. எங்க ஓட்டலில் அவன் ஏமாத்திட்டான் என்று சொன்னார். கண்ணாயிரம் அவரிடம் மெல்ல பேசுங்க. இந்த ரகசியம் யாருக்கும் தெரியக்கூடாது. நமக்குள் இருக்கட்டும். விரைவில் அவனை பிடித்துவிடுவேன் என்றார். ஓட்டல் முதலாளி சிரித்தபடி போயிட்டு வாங்க என்றுகண்ணாயிரத்தைவழி அனுப்பிவைத்தார்

(தொடரும்)

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.