பஞ்சாயத்தில் மயங்கிவிழுந்த கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை
1 min read
Kannayiram Fainting in Pachayath / story by Thabasukumar
20/10/2021
கண்ணாயிரம் தன்னை தேடிவந்த பெண் கண்ணாயிரம் மனைவி என்றும் அவள் அழைத்துவந்த சிறுவன் கண்ணாயிரத்தின் மகன் என்றும்கூறியதால் அவர்மனைவி தந்தையிடம் புகார் செய்தார். முதல்மனைவி இருக்கும்போது கண்ணாயிரம் இரண்டாவது திருமணம் செய்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். இதனால் கண்ணாயிரம் வீட்டுமுன்அவரது மாமனார் அருவா அமாவாசை தலைமையில் பஞ்சாயத்து நடந்தது. கவுசல்யா கண்ணாயிரத்தின் மனைவி இதில் என்ன தப்பு என்று கண்ணாயிரம் உறுதியாக கூறினார். ஆனால்அவளை திருமணம் செய்யவில்லை என்றார். திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தினியா என்று கண்ணாயிரத்தை பார்த்து அருவா அமாவாசை அரிவாளை காட்டி மிரட்டினார். இதைப்பார்த்து கண்ணாயிரம் அரண்டு போய் நின்றதால் அரிவாளை இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்ற வரத்தை அருவா அமாவாசைக்கு கண்ணாயிரம் மனைவி நினைவுபடுத்தினார். இதனால்அருவா அமாவாசை அமைதியாகி மீண்டும் விசாரணையை தொடங்கினார்.
கண்ணாயிரத்துக்கு தாகமாக இருந்தது.
மோட்டார் சைக்கிள்வாலிபரை பார்த்து டேய் தம்பி, இரண்டு சோடாவாங்கி வைத்திருக்கே. அது எதுக்கு என்று கேட்டார். அதற்கு அவன் பஞ்சாயத்தில் யாராவது மயங்கிவிழுந்தால் சோடா கொடுப்பாங்க என்றான். அப்படியா என்று சொன்ன கண்ணாயிரம் அடுத்த கட்ட விசாரணையை எதிர்கொள்ள தயாரானார். அருவா அமாவாசையும் செம்பில் இருந்த தண்ணீரை மெல்ல குடித்துவிட்டு , கண்ணாயிரம் நான் சொல்லுறதை அமைதியாக கேளு, இந்த பொண்ணை நீ திருமணம் பண்ணலைன்னு சொல்லுற.. அப்படின்னா இந்த பொண்ணு யாரு என்று மீண்டும் கேட்டார். உடனே இது கண்ணாயிரம் மனைவி என்று கண்ணாயிரம் சொன்னார். இதைக்கேட்டதும் அருவா அமாவாசை சூடாகி, அடேய், திருப்பி, திருப்பி அதேசொல்லுற. நீ திருமணம் பண்ணலைன்னு சொல்லுற, அப்புறம் அவா எப்படி உன்மனைவியாகமுடியும், என்று அழுத்தம் திருத்தமாக கேட்டார்.
கண்ணாயிரம் சற்று யோசித்தார்.
அருவா அமாவாசை, ஆ.. இப்பதான் யோசிக்கதொடங்கிஇருக்கிறான்… ஆ நல்லா யோசி. யோசிச்சிட்டியா, ஆ இப்பம் சொல்லு. நீ இந்த பொண்ணை திருமணம் பண்ணிக்கல, சரிதான, அப்புறம் எப்படி உன்மனைவியாக முடியும் சொல்லு என்று அமைதியாக கேட்டார்.
கண்ணாயிரம் நன்றாக யோசித்து, இது என் மனைவி இல்லை. கண்ணாயிரம் மனைவி என்றார். அருவா அமாவாசை வந்த கோபத்தைஅடக்கிகொண்டு, கண்ணாயிரம் அவா உன்மனைவி இல்லைன்னு சொல்லுற. அதோடு நிப்பாட்டிக்க மறுபடியும் கண்ணாயிரத்தை ஏன் இழுக்கிற என்று கேட்டார்.
கண்ணாயிரம் பதில் சொல்லாமல் நின்றார். அப்போது முதியவர் ஒருவர், கண்ணாயிரம் இந்த பொண்ணு உன்மனைவி இல்லைன்னுசொல்லிட்ட சரி, அப்போ இந்த பையனுக்கு அப்பா யாரு என்று கேட்டார். உடனே அவர் கண்ணாயிரம் என்றார்.
அருவா அமாவாசை பற்களை கடித்தார். கண்ணாயிரம், மறுபடியும்பிரச்சினையா, இந்த பொண்ணு உன்மனைவி இல்லைன்னுசொல்லிட்ட இந்த பையன்மேலமட்டும் ஏன் உரிமை கொண்டாடுற. இந்த பையன் பிறக்க யார் காரணம் என்று கேட்டார். கண்ணாயிரம் உடனே நான்தான் காரணம் என்றார்.
இதனால் அருவா அமாவாசை கோபத்தில், அடேய், நல்லா யோசிச்சு சொல்லுடா என்று கண்ணாயிரத்தைபார்த்து கெஞ்சும் குரலில் கேட்டார். கண்ணாயிரம் மெல்லிய குரலில் என்னதான் ஆனாலும் நான் விட்டுக்கொடுக்கமுடியாது. இந்த பையன் பிறக்க நான் காரணம். இதை நான் ஊர்காரர்களிடமே சொல்லி இருக்கிறேன். எங்க வேணும்னாலும் சொல்வேன் என்றார் கண்ணாயிரம்.
அதை கேட்டதும் அருவா அமாவாசை கோபத்தின் உச்சிக்கு சென்று, டேய், கெடுத்திட்டியடா உன்னை சும்மாவிடமாட்டேன் என்று கூறியபடி அரிவாளுடன் கண்ணாயிரத்தை நோக்கிசென்றார். அதை பார்த்ததும் கண்ணாயிரம் பயந்து நடுங்கி கீழே மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கண்ணாயிரம் மனைவி ஓடிசென்று அருவா அமாவாசை கையிலிருந்த அரிவாளை பறித்து வீட்டில் கொண்டு வைத்துவிட்டு மீண்டும் வந்தார். கண்ணாயிரத்தை அனைவரும் சுற்றிநின்றனர். அவர் மனைவி எல்லோரும் விலகுங்க என்றார். அருவா அமாவாசையை பார்த்து, அப்பா கொஞ்சம் அமைதியாக இருங்க. அவரை நான் மயக்கம் தெளியவைக்கிறேன் என்றபடி மேசையில் இருந்த செம்பு தண்ணியை எடுத்து கண்ணாயிரம் முகத்தில் பளீர், பளீர், என்று ஓங்கி அடித்தார். கண்ணாயிரம் மெல்ல கண்ணை விழித்து பார்த்தார். சோடா, சோடா, என்று முனங்கினார். கூட்டத்தில் இருந்த முதியவர், குற்றம்சாட்டப்பட்டவருக்கு சோடா கொடுக்காதீங்க, பச்சை தண்ணீ கொடுங்க போதும் என்றார். கண்ணாயிரம் மனைவி உடனே செம்பில் இருந்த தண்ணீரை எடுத்து கண்ணாயிரத்துக்கு குடிக்க கொடுத்தார். கண்ணாயிரம் வேறு வழியில்லாமல் குடித்தார்.
அருவா அமாவாசை அதை பார்த்தபடியே இருந்தார். கண்ணாயிரம் மயங்கிவிழுந்துவிட்டதால், அவருக்கும் ஒருமாதிரி ஆகிவிட்டது. வயிறும்பசிக்க தொடங்கியது. எனவே பஞ்சாயத்தை மதியம் இரண்டுமணிக்கு ஒத்திவைத்தார்
.
(தொடரும்)
- வே. தபசுக்குமார். புதுவை