சோடா போச்சே.. கலங்கிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை
1 min readSoda poochee Said Kannayiram/ Story by Thabasukumar
23/10/2021
கண்ணாயிரத்தை தேடி வந்த பெண் மற்றும் சிறுவனால் ஏற்பட்ட பிரச்சினை குறித்து கண்ணாயிரத்தின் மாமனார் அருவா அமாவாசை தலைமையில் பஞ்சாயத்து நடந்தது. தன்னை தேடிவந்தபெண் தனது மனைவி இல்லை என்று கூறிய கண்ணாயிரம் அவள் மகன் பிறக்க தானே காரணம் என்று சொன்னால் அருவா அமாவாசை கோபம் அடைந்து அரிவாளைகாட்டிமிரட்டினார்.
கண்ணாயிரம் மயங்கிவிழுந்தார். இதனால் பதட்டம் அடைந்த அருவா அமாவாசை பஞ்சாயத்தை மதியம் இரண்டு மணிக்கு ஒத்திவைத்தார். இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் வீட்டுக்கு போய்சாப்பிட்டு விட்டுவருவோம் என்று புறப்பட்டார்கள்.
அருவா அமாவாசை தன் மகள் பூங்கொடியுடன் வீட்டுக்குசென்றார். கண்ணாயிரம் மேசையில் இருந்த இரண்டு சோடாக்களை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். கவுசல்யா தன் மகனை அழைத்துகொண்டு அருகில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிடசென்றாள்.
கண்ணாயிரம் மனைவி தன் தந்தை அருவா அமாவாசை யுடன் வீட்டுக்கு சென்றதும் கதவை பூட்டிவிட்டார். கண்ணாயிரம் தன்மனைவியிடம் பூங்கொடி கதவை திற என்றார். அவர் கோபமாக பஞ்சாயத்தில் நீங்க குற்றம் இல்லாதவர் என்று தீர்ப்பு வந்தால்தான் நீங்க வீட்டுக்குள்வரலாம். இல்லை என்றால் வீட்டுக்குள் வரக்கூடாது என்று திட்டவட்டமாக கூறினார்.
அதை கேட்டதும் கண்ணாயிரத்துக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. பூங்கொடி வயிறு பசிக்குது.
சாப்பிட்டாதான் நான் பஞ்சாயத்தில் நின்று பேசமுடியும் என்று கண்ணாயிரம் சொன்னார். உடனே பூங்கொடி யோசித்தார். மீண்டும் அவர் மயங்கிவிழுந்து பஞ்சாயத்தை நடக்கவிடாம பண்ணிவிடுவாரு. அதனால சாப்பாடு கொடுப்போம் என்றுமுடிவுசெய்தார்.
இதையடுத்து ஏங்க வீட்டுக்கு வெளியிலே இருங்க. அந்த மேசை, நாற்காலியை யாரும் தூக்கிட்டு போகாம பாத்துக்குங்க. சமைச்சதும் சோறுகொண்டுவர்ரேன். அங்கே உக்காந்து சாப்பிடுங்க என்றார்.
கண்ணாயிரம் உடனே சரி என்று கூறிவிட்டு அங்கேயே இருந்தார். அப்பத்தான் அவருக்கு கவுசல்யா, அவரது மகன் ஆகியோரைபற்றி நினைவு வந்தது. என்ன ஆளை காணோம். ஊருக்கு போயிட்டாங்களா. பஞ்சாயத்து முடியுமுன்னே போனா அது ஒரு பஞ்சாயத்தாகிவிடுமே. நாம போய் தேடிபாக்கலாம். ஆனா மேசை நாற்காலியை பாக்கும்பொறுப்பை நமக்கு பூங்கொடி குடுத்துட்டா. இதைவிட்டுட்டு கவுசல்யாவை தேடிபோகும்நேரத்தில் எவனாவது மேசை, நாற்காலியை தூக்கிட்டுபோயிட்டான்னா என்ன பண்ணுறது. இங்கே இருப்போம் என்று கண்ணாயிரம் அங்கேயே இருந்தார்.
சோடாபாட்டில்கள் இருக்கா என்று அடிக்கடிபார்த்துக்கொண்டார். நம்ம காசுல வாங்கின சோடா ஆனா நமக்கு குடிக்கதரமாட்டேங்கிராங்க, என்ன அநியாயம். இப்போ நம்ம கையிலேதான் இருக்கு ஆனா வெறும்வயிற்றில் சோடா குடிக்ககூடாது. என்ன செய்யிறது என்று சிந்தித்தபடி இருந்தார்.
வீட்டிலிருந்து கருவாடு வாசனை தூக்கலாக இருந்தது. நாம கருவாடு குழம்பு வைக்க சொன்னா நீங்க உப்பு அதிகம் சாப்பிடக்கூடாதுன்னு தடைபோடுறா. அவங்க அப்பாவுக்கு வயசாகிபோச்சு. கருவாடு இல்லாம அவர் சாப்பிடமாட்டார். அவருக்கு யார் தடைபோடுறது. கேட்டா அரிவாளைகாட்டிமிரட்டுறாரு. நம்முளும் சிலம்பு, வாள் சுற்றுதல் ஆகிய வீரவிளையாட்டை கற்றிருக்கணும். இப்பகேட்டா ஐம்பது வயசாச்சே . இப்ப எதுக்கு என்பார்கள்-
கண்ணாயிரம் இப்படி புலம்பிகொண்டிருந்தபோது கண்ணாயிரம் மனைவி ஒரு தட்டில் சோறுபோட்டு ரசம் ஊற்றி, துவையல் வைத்து எடுத்துவந்தார். கண்ணாயிரத்தை பார்த்து இன்னாங்க அந்த மேசையில் வைத்து சாப்பிடுங்க என்றார்.
கண்ணாயிரம், என்ன ரசமா, கருவாட்டுகுழம்பு இல்லையா என்று கேட்டார்.
அதற்கு அவர், எங்க அப்பா வரும்போது கருவாடுவாங்கிட்டு வந்துட்டாரு. அதனால அவருக்கு மட்டும் கருவாட்டுகுழம்பு. உங்களுக்கு ரசம் மட்டும்தான் என்று சொன்னார்.
கண்ணாயிரம் இது அநியாயம் என்றார். அதை கேட்ட அவர் மனைவி சத்தம் போடாதீங்க எங்க அப்பாரொம்ப கோபமாக இருக்கார் என்று சொல்லிவிட்டு கதவை மீண்டும் பூட்டிவிட்டார்.
கண்ணாயிரம் முகத்தை சுழித்தபடி ரசம் சாப்பாட்டை பார்த்தார். இது சாப்பாட்டை மேசையில் உட்கார்ந்து சாப்பிடணுமா. அவ்வளவு பேரும் பார்த்துட்டுபோவான். கண்ணாயிரத்துக்கு ரசம் சாப்பி்டறான் டோய் என்று ஊரெல்லாம் சொல்வான். இது தேவையா, நமக்கு. பேசாம வீட்டு திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடுவோம் என்று நினைத்த கண்ணாயிரம் அங்கே உட்கார்ந்து சாப்பிட்டார்.
அந்த வழியாக வந்த ஒருவர் என்ன கண்ணாயிரம் மட்டனா. சாப்பிடுங்க, சாப்பிடுங்க என்று சொல்லியபடி சென்றார். கண்ணாயிரத்துக்கு கோபம்வந்தது. நாம ரசம் சாப்பாடு சாப்பிடுறோம். பிறகு எப்படி மட்டன் அப்படின்னு சொன்னான். நம்மள கேலிபண்ணிட்டுபோறான். இருக்கட்டும். பார்த்துக்கிடுவோம் என்றபடி சாப்பிட்டார். ரசம் காரமாக இருந்ததால் ஆ.. தண்ணீ என்று கத்தினார். உடனே அவர் மனைவி கதவை திறந்து ஒரு செம்பில் தண்ணீர் வைத்துவிட்டு அங்கிருந்த இரண்டு சோடாபாட்டில்களையும் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள்சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
அதைபார்த்ததும் கண்ணாயிரம் அட சோடாபோச்சே. சோறுசாப்பிட்டுவிட்டு குடிக்கலாம் என்றால் அதை தூக்கிக்கொண்டு போய் விட்டாளே என்றுபுலம்பினார் கண்ணாயிரம்.
(தொடரும்)
வே.தபசுகுமார்.