காஷ்மீரில் ஒரே நாளில் 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
1 min read
12 terrorists shot dead in Kashmir on the same day
12/11/2021
காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 38பேர் பதுங்கி உள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்று நடந்த என்கவுண்டரில் ஹிஸ்புல் பயங்கரவாத இயக்கத்தின் காமாண்டர் உட்பட 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியதாவது:
பாகிஸ்தான் பயங்கரவாதிகள்
ஜம்மு காஷ்மீரில் பதுங்கி உள்ள பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் குறித்து உளவுத்துறையினர் கணக்கெடுத்தனர். அதில், 38 பேர் பதுங்கி உள்ளது தெரியவந்துள்ளது. அதில் 27 பேர் லஷ்கர் இ தொய்பா, 11 பேர் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள்.
அவர்களில், 4 பேர் ஸ்ரீநகரிலும், 3 பேர் குல்காமிலும் புல்வாமா மற்றும் பாரமுல்லாவில் தலா 10 பேரும், மற்ற பகுதிகளில் 11 பேரும் பதுங்கி உள்ளனர். பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற அவர்கள், உள்ளூரை சேர்ந்த சிலர் உதவியுடன் பதுங்கி உள்ளனர். மற்ற பயங்கரவாதிகளையும் பதுங்குவதற்கு உதவும் இவர்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்காகவே, அவர்களளுக்கு கையெறி குண்டு வீசுதல், குறி வைத்து கொலை செய்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
காஷ்மீரில் பொது மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, தொடர்ச்சியாக அங்கு, தேசிய புலனாய்வு முகமை மற்றும் உளவுத்துறையான ‛ஐபி’ சோதனை நடத்தி வருகின்றனர். அதில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 35 பேர் பிடிபட்டுள்ளனர்.
133 பயங்கரவாதிகள் கொலை
இதனிடையே காஷ்மீர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய்குமார் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீரில், இந்த ஆண்டு பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 133 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களில் தளபதிகளாக செயல்பட்டவர்களும் இறந்துவிட்டனர். இன்று குல்காமில் நடந்த மோதலில் 12 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த காமாண்டர் சிராஜ் மோல்வி மற்றும் யாவர் பட் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதில் ஹிஸ்புல் காமாண்டர் சிராஜ் மோல்வி என்பவன், கடந்த 2016ம் ஆண்டு முதல் செயல்பட்டவன். அப்பாவி மக்கள் கொலையில் இவனுக்கு தொடர்பு உள்ளது. ஸ்ரீநகரில் நடந்த என்கவுன்டரில் ஆமிர் ரியாஸ் என்பவன் சுட்டு கொல்லப்பட்டான்.
இவ்வாறு அவர் கூறினார்.