அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டம்
1 min read
Work schedule 4 days a week for government employees
22.12.2021
அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தை அடுத்த நிதியாண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேலை நேர புள்ளி விவரம்
ஒவ்வொரு நாட்டிலும் வேலை செய்யும் ஊழியர்களின் நேரம் தொடர்பாக பொருளாதார கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளது.
உலகத்திலேயே ஆசியா கண்டத்தில்தான் ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்கள். இந்தியாவில் தான் அதிக அளவில் ஊழியர்கள் உழைக்கிறார்கள். வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் வேலை செய்கிறார்கள்.
கொலம்பியாவில் 47.6 மணி நேரமும், சீனாவில் 46 மணி நேரமும், துருக்கியில் 45.6 மணி நேரமும், மெக்சிகோவில் 44.7 மணி நேரமும், கோஸ்டாரிகாவில் 43.5 மணி நேரமும் வார வேலை நேரங்களாக இருக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வேலை செய்யும் தினத்தை 4½ நாட்களாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தியாவில்…
இதேபோல இந்தியாவிலும் அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலும் வேலை நாட்களை குறைக்க ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு வந்தது. தற்போது வேலை நாட்களை 4 தினமாக குறைக்க பரிசீலனை நடைபெற்று வருகிறது.
வேலை நாட்கள் குறைக்கப்பட்டாலும், தினசரி பணி நேரம் அதிகமாக இருக்கும். நாள்தோறும் பணியாற்றும் நேரம் 12 மணி நேரம் வரை நீட்டிக்கப்படும். இதனால் வாரத்திற்கு 48 மணி நேரம் என பணியாற்ற வேண்டிய அதே நிலையே ஏற்படும்.
அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தை அடுத்த நிதியாண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மசோதா குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:-
48 மணி நேரம்
தற்போது தொழில் நிறுவனங்களில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வீதம் வாரத்திற்கு 6 நாட்களுக்கு 48 மணி நேரம் பணி நேரமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக உள்ளன.
ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்ற விதியை மாற்றம் செய்ய அரசு விரும்பவில்லை. எனினும் ஒரு நாளுக்கான வேலை நேரத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை வாங்கினால் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.
மீதமுள்ள 3 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இதை தொழிலாளர்கள் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும். ஏனென்றால் அனைவராலும் 12 மணி நேரம் வேலை செய்ய இயலாது. இவற்றை உள்ளடக்கி தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்து, மசோதாவை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அடுத்த மாதம்
அடுத்த மாதத்தில் மசோதா தயாரிக்கப்பட்டு மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்படும். ஒப்புதலுக்கு பிறகு மசோதாவை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டான ஏப்ரல் 1-ந் தேதி முதல் இதை அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.