தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்; வருத்தம் தெரிவித்தது ரிசர்வ் வங்கி
1 min readTamil thai Vazthu; The Reserve Bank expressed regret
26/1/2022
ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி வங்கி அதிகாரிகளின் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
குடியரசு தினவிழா
சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலக வளாகத்தில் நேற்று குடியரசு தின விழாவையொட்டி தேசியக் கொடியேற்றப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது.
அப்போது அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்காமல் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.மேலும், இது குறித்து கேட்டபோது ‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. இதுதொடர்பாக கோர்ட்டே உத்தரவு வழங்கி இருக்கிறது’ என்று கூறினர்.
வங்கி அதிகாரிகளின் இந்த தவறான செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
வருத்தம்
இந்த நிலையில், இன்று காலை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி நேரில் சந்தித்து வங்கி அதிகாரிகளின் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
முன்னதாக தமிழக அரசின் அரசாணையில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படும் போது மரியாதை அளிக்கும் விததில் எழுந்து நிற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில்.அதனை எதிர்த்து பேசி வங்கி அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வங்கி அதிகாரிகளின் இந்த செயலை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.