காவிரி துரோகத்தை மறைக்கவே எம்.பி.க்கள் கூட்டம் – திமுக குற்றச்சாட்டு
1 min read
Meeting of MPs is merely to cover up the betrayal on the Cauvery issue – DMK alleges
8.8.2026
காவிரி துரோகத்தை மறைக்கத் தவெக அரசு நடத்தும் திசைதிருப்பல் நாடகமே எம்.பி.க்கள் கூட்டம் என்று திமுக ஐடி விங் கூறியுள்ளது. இதுதொடர்பாக, திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பாஜகவை எதிர்த்து பேசப் பயந்து, கடந்த ஆண்டு திமுக நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தமுறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்தவர் இந்த விஜய். தொகுதி மறுவரையறை ஆபத்தை முதன்முதலில் எதிர்த்து, மாநாடுகள் நடத்தி, நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவைத் தோற்கடித்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான்!
இதில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு, தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றம் செய்யக்கூடாது என்று ஏற்கனவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், இப்போது இந்த எம்.பி.க்கள் கூட்டத்திற்கான தேவை என்ன?
காவிரி விவகாரத்தில் கர்நாடகக் காங்கிரஸிடம் உரிமையை அடகு வைத்துவிட்டு, டெல்டா விவசாயிகளின் போராட்டத்திலிருந்து தப்பிக்கவே இந்த அவசரத் தொகுதி மறுவரையறை நாடகத்தை அரங்கேற்றுகிறார் இந்த முதல்-அமைச்சர்.
மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்; சட்டமன்றத் தீர்மானத்தை நமது எம்.பி.க்களுடன் சென்று மத்திய ஜல் சக்தி மந்திரிடம் நேரில் வழங்கத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் தயாரா? விவசாயிகளின் உரிமையை விற்றுவிட்டு, தவெக அரசு நடத்தும் எந்தக் கபட நாடகத்திலும் தி.மு.க. பங்கேற்காது. தமிழ்நாட்டின் நலனில் எங்களின் நிலைப்பாட்டில் எள்ளளவும் மாற்றமில்லை!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.