கண்ணாயிரம்பற்றி வாத்தியார் சொன்ன ரகசியம்/ நகைச்சுவை கதை
1 min read
Vathiyar’s secret about Kannayiram / Story by Thabasukumar
11.4.2022
கண்ணாயிரம் சிலம்பம் கற்றுக்கொள்ள பயில்வானிடம் சென்றார்.பயில்வான் அவரிடம் உடம்பு நல்லா இருக்க வேண்டும் என்றால் பச்ச முட்டை சாப்பிடணும் என்று சொன்னார்.பின்னர் சிலம்பம் கற்றுக்கொள்ளும் முன் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று கூறினார்.இதையடுத்து கண்ணாயிரத்தை ஒருகாலை ஊன்றி மறுகாலை தூக்கி நின்று சூரியனை ஒருமணிநேரம் வணங்கும்படி சொல்லிவிட்டு அவரது முட்டைக்கடைக்கு பயில்வான் சென்றுவிட்டார். அவர் தாமதமாக வந்தபோது கண்ணாயிரம் வெயில் தாங்காமல் கீழே மயங்கிவிழுந்து கிடந்தார். அதை பார்த்த பயில்வான் பயந்துபோய் கண்ணாயிரம் மனைவியிடம் தண்ணி கொண்டுவாங்க…கண்ணாயிரம் மயங்கி விழுந்திட்டார் என்று கத்தினார். அவர் உடனே…ஒரு செம்பில் வேகமாக தண்ணீர் கொண்டு வந்தார்.கண்ணாயிரம் முகத்தில் ஓங்கி தெளித்தார். கண்ணாயிரம் கண்களை கசக்கிக்கொண்டு விழித்துபார்த்தார். நான் எங்கே இருக்கிறேன்…நீங்க எல்லாம் யாரு என்று கேட்டார். அதைகேட்டதும் கண்ணாயிரம் மனைவிக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது.
என்னங்க இதுக்கு முன்னாடி எல்லாம் மயங்கி விழுவார். இப்படி என்னைபார்த்து யார் என்று கேட்டதில்லையே…என்ன ஆச்சு அவருக்கு என்றபடி செம்பில் இருந்த மீதி தண்ணீரையும் எடுத்து கண்ணாயிரம் முகத்தில் ஓங்கி அடித்தார். கண்ணாயிரம் சைகையால் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். உடனே பூங்கொடி வீட்டுக்குள் சென்று செம்பில் குளிர்ந்த தண்ணீர் கொண்டுவந்து கண்ணாயிரத்திடம் நீட்டினார். கண்ணாயிரம் கையில்வாங்காமல் வாயில் ஊற்றும்படி சொன்னார். ஏங்க கை என்ன ஆச்சு..என்று கேட்டபடி குளிர்ந்த தண்ணீரை அவரது வாயில் ஊற்றினார். கண்ணாயிரம் மடக் மடக் என்று குடித்தார். சரி எழும்புங்க..வீட்டுக்கு போவோம் என்று பூங்கொடி சொன்னார்.
அதற்கு கண்ணாயிரம்..யார் நீங்க..ஏன் வீட்டுக்கு கூப்பிடுறீங்க என்று உளறினார். அதை கேட்ட பூங்கொடி அய்யோ என் வீட்டுக்காரருக்கு என்னமோ ஆச்சுபோல… ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும் போலிருக்கே…
பயில்வான் நீங்க என்ன பண்ணுனீங்க அவரை என்று கேட்டார்.அதற்கு அவர்…ஒண்ணும் இல்லம்மா…காலை கடும்வெயில் அவருக்கு ஒத்துக்கல்ல…கொஞ்ச நேரம் நிழலில் இருந்தாருன்னா சரியாகிடும் என்று சொன்னார்.
உடனே பூங்கொடி தன்கணவரிடம்…எழும்புங்க..கொஞ்சம் மரத்தில் நிழலில் உட்காருங்க என்றார். கண்ணாயிரத்தால் எழுந்து நிற்கமுடியல…கால் வலிக்கு என்றார்.பூங்கொடி..ஒருநாளையிலே காலும் போச்சா..என் கையை பிடிச்சிட்டு எழும்புங்க என்று சொன்னார்.
பயில்வான் அவரிடம்..நீங்கவிடுங்க…நான் அவரை தூக்கிக்கிட்டு மர நிழலுக்கு கொண்டுவருகிறேன் . ..என்று சொல்லிவிட்டு கண்ணாயிரத்தை தூக்கிக்கொண்டு மரநிழலுக்கு கொண்டுவந்தார் பயில்வான். ஒற்றைக்காலில் நின்றதால் கண்ணாயிரத்துக்கு கால்வலி அதிகமாக இருக்கு ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்..காலை கொஞ்சம் அமுக்கிவிடுங்க .என்றார்.
அதை கேட்ட பூங்கொடி ஏங்க..கால்வலிக்குதுன்னா.. ஒறைகாலை மாற்றி இரண்டு காலில் நின்னிருக்க வேண்டியதுதானே …இப்படி வம்பு பண்ணுறீங்களே…என்றார்.
கண்ணாயிரம் கோபத்துடன்…ஒருமணிநேரம் ஒற்றைகாலிலே நிக்கணுமுன்னு பயில்வான்தான் சொன்னார். அதனாலத்தான் நான் கண்ணை மூடிக்கிட்டு ஒற்றைகாலிலே நின்னேன்..என்றார்.
உடனே பூங்கொடி வேகமாக..நல்லா நின்னிங்க..கால்வலிச்சா பயில்வான்கிட்ட கால்வலிக்குது அப்படின்னு சொல்ல வேண்டியதுதானே.. இப்படி மக்குமாதிரி நின்னுக்கிட்டு இருந்திருக்கீங்க என்று சத்தம் போட்டார்.
அதை கேட்டதும் கண்ணாயிரம்..என்ன பூங்கொடி விவரம் தெரியாம பேசுற..பயில்வான் பக்கத்தில் இருந்தாதான் நான் கேட்டிருப்பேனே…அவர்தான் தன்னுடைய முட்டைக்கடைக்கு போயிட்டாரே..அப்புறம் நான் என்னசெய்வேன் என்றார்.
பூங்கொடி உடனே பயில்வானை பார்த்தார். பயில்வான் மெல்ல அப்படியெல்லாம் இல்லம்மா..போனேன்…கொஞ்ச நேரத்திலே வந்துட்டேன்..இப்பம் ஒண்ணும் கெட்டுப்போகல…கண்ணாயிரம் இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கட்டும்..நாளைக்கு மீண்டும் பயிற்சி எடுத்துக்கலாம்…நான் வர்ரேன் என்றபடி அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.
பூங்கொடி கண்களை துடைத்தபடி ஏங்க..உங்களை சிலம்பந்தானே கற்றுக்க சொன்னேன்.நீங்க ஏன் ஒற்றைக்காலில் நின்னிங்க…அது அவசியமா என்று கேட்டார். கண்ணாயிரம் பதிலுக்கு நான் எங்கே நின்னேன் …பயில்வான்தான் நிக்க சொன்னார்.அதனால்தான் நின்னேன் என்றார்.
அவர் சொன்னா…நீங்க நிற்கிறதா..உங்களுக்குதான் நோஞ்சான் உடம்பாச்சே…நீங்களும் உங்க சிலம்பாட்டமும் என்று கோபத்தில் வார்த்தைகளை கொட்டினார்.
அதை கேட்டதும் கண்ணாயிரம் சூடாகி..நான் சிலம்பாட்டம் வேண்டா முன்னுதான் சொன்னேன்.நீதான் நான் சிலம்பாட்டம் கற்றுக்கணுமுன்னு ஒத்தக்காலில் நின்னே என்று சொன்னார். அதை கேட்ட பூங்கொடி கடுப்பாகி…நான் எங்கேங்க ஒத்தைகாலில் நின்னேன்…என்று கண்களை கசக்க கண்ணாயிரம் …உடனே.. ஒருபேச்சுக்கு சொன்னேன் என்று சமாளித்தார். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.நான் ஒத்தக்காலில் நின்னேன்னு எப்படி பொய் சொல்லலாம்…என்னால நிக்கமுடியுமா..நீங்க சொன்னதை வாபஸ்வாங்குங்க…என்றார். கண்ணாயிரத்துக்கு ரொம்ப கஷ்டமாபோச்சு..அவர் பூங்கொடியை பார்த்து…பூங்கொடி நான் அப்படி சொல்லல..நீ தப்பா நினைச்சுக்கிட்ட. ..உனக்கு சரியா புரியல…என்று சொல்ல பூங்கொடி அவரை பிடிபிடின்னு பிடித்துவிட்டார். ஏங்க..எனக்கா புரியலைங்கிறிய..ஹநான் பத்தாம்வகுப்பு பாஸ்..நீங்க எட்டாம் வகுப்பு பெயில் புரிஞ்சுக்கிங்க….என்று கத்தினார். கண்ணாயிரத்துக்கும் கோபம் வந்தது. என்ன…நான் எட்டாம்வகுப்பிலே இரண்டுமார்க்கிலே பெயிலு ….அது பெரிய பெயிலா என்று கேட்டார்.
பூங்கொடி உடனே..ஏங்க எட்டாம் வகுப்பிலே நீங்க வாங்கின மார்க்கே இரண்டுதானே..மறுபடி ஏன் இரண்டு மார்க்கிலே பெயிலானேன்னு சொல்லுறீங்க…பொத்திக்கிட்டு இருங்க என்று சொன்னார்.
இதை உனக்கு யார் சொன்னா என்று கண்ணாயிரம் கேட்க உங்க வாத்தியாருதான் சொன்னாரு என்றார் பூங்கொடி. அதற்கு கண்ணாயிரம் ஓங்கிட்ட அப்படி சொல்லி இருக்காரு. ஏங்கிட்ட இரண்டுமார்க்கிலே பெயிலாகிட்டேன் என்று சொன்னார். நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன் போலிருக்கு…அவர் ரெண்டுமார்க் போட்டு பாசாக்கிவிட்டிருக்கலாமேன்னு நினைச்சு கோபத்திலே அப்புறம் பள்ளிக்கே போகல…அது சரி..நான் இரண்டு மார்க் வாங்கினதை வாத்தியாரு உங்கிட்ட ஏன் சொன்னாரு….என்று கேட்டார். பூங்கொடி..அது ஏன்னு தெரியல…ஆனா..கண்ணாயிரம் சொன்னா சொல்லாத அடிச்சிக்கேட்டாலும் சொல்லாதேன்னு ஒரு விசியத்தை சொன்னாரு…அதை நான் சொல்லமாட்டேன் என்றார்.
கண்ணாயிரத்துக்கு தூக்கிவாரிப்போட்டது. என்ன சொன்னாரு சொல்லு என்று கேட்டார்.அவர் சொல்லக்கூடாதுன்னு சொல்லி இருக்காரு.நான் சொல்லமாட்டேன் என்று பூங்கொடி உறுதியாகநின்றார். அப்படி அவர் என்னசொல்லி இருப்பாரு…மண்டைவெடிச்சிடும் போலிருக்குதே…என்று கண்ணாயிரம் கண்களை உருட்டினார். அவரை பார்த்து கண்ணை உருட்டாதீங்க…முதல்ல.. நான் ஒத்தக்காலில் நின்னேன்னு சொன்னீங்களே…அதுக்கு பதில் சொல்லுங்க…ஏற்கனவே..காலில் பீங்கான் குத்தி நான் வலியிலே இருக்கேன். நான் ஒத்தக்காலில் நிக்கமுடியுமா.உண்மையை சொல்லுங்க..என்று உலுக்கினார். கண்ணாயிரம்..ம் அதுவந்து ஒரு பேச்சுக்கு அப்படி சொன்னேன்…அதாவது நான் சிலம்பம் கற்றுக்கணுமுன்னு நீ உறுதியா சொன்னா என்கிறதைத்தான் நான் அப்படி சொன்னேன். மற்றபடி உண்மையிலே நீ ஒத்தைக்காலில் நின்றாய் என்று சொல்லவில்லை என்றார். பூங்கொடி சமாதானம் ஆகவில்லை.ஏங்கே உண்மையிலே நான் ஒத்தக்காலில் நின்னேன்னு நீங்க சொன்னிங்க…நீங்க ஏமாத்துறிங்க..சொன்னதை இல்லங்கிறீங்க…என்றார்.கண்ணாயிரத்துக்கு கால்வலியுடன் தலைவலியும் வந்தது.சரி நான் அப்படிதான் சொன்னேன்.அதைவாபஸ் வாங்கிக்கிறேன்.போதுமா என்றார் கண்ணாயிரம்.
அதை கேட்டதும் பூங்கொடி புன்னகைபூத்தவாறு அப்படிவாங்கவழிக்கு .சரி..எழும்புங்க..வீட்டுக்கு போவோம் என்றார்.கண்ணாயிரம்சிணுங்கியபடி தூக்கு..எந்திரிக்கமுடியல என்று சொன்னார்.பூங்கொடி கையைபிடித்து தூக்க கண்ணாயிரம் எழுந்தார்.பூங்கொடியின் தோளைபிடித்தபடி ஒற்றைக்காலை ஊன்றி ஒற்றைக்காலை தூக்கியபடி நொண்டியடித்தபடி சென்றார்.எல்லாம் ஒற்றைக்கால் பிரச்சினைதான் என்று முணங்கினார். என்னசத்தம் என்று பூங்கொடி கேட்க ..ஒண்ணுமில்லன்னு கண்ணாயிரம் சொல்ல எல்லோரும் அவரை வேடிக்கைபார்த்தனர்.
வே.தபசுக்குமார்.புதுவை.