ஓடும் ரெயிலில் காமக்கொடூரடன் போராடிய பெண்; கீழே தள்ளிவிடப்பட்டதால் கவலைக்கிடம்
1 min readThe woman who struggled with lust on the running train; Worrying about being pushed down
30.4.2022
ரெயிலுக்குள் பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளார் ஒரு வாலிபர். அந்த காமுகனுடன் போராட்டிய அந்தப்பெண்ணை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.
கோவிலுக்கு..
மத்தியபிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆலயம் ஒன்று உள்ளது. அங்கு 21 செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம் ஆகும்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் அந்த கோவிலுக்கு கடந்த 20 வாரங்களாக வந்து சென்றார். 21வது கடைசி வார வழிபாட்டிற்காக அவர் கடந்த செவ்வாய்க்கிழமை வந்திருந்தார்.
ஆலய வழிபாட்டை முடித்துவிட்டு அவர் ஊர் திரும்புவதற்காக சத்தர்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து மகோபா எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்ல ஏறினார். அந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் மிக மிக குறைவாக இருந்தது.
பலாத்கார முயற்சி
பொது பெட்டி ஒன்றில் அவர் ஏறி அமர்ந்தார். அந்த பெட்டியில் அவரை தவிர வேறு பயணிகள் யாரும் இல்லை. மாலை 5.15 மணிக்கு ரெயில் புறப்பட்டபோது திடீரென்று ஓடி வந்து ஒரு வாலிபர் அந்த ரெயில் பெட்டியில் ஏறினார்.
ரெயில் பெட்டிக்குள் இளம்பெண் தனியாக இருப்பதை கண்ட அவருக்குள் காம ஆசை எழுந்தது. அந்த பெண்ணை நோக்கி அவர் தவறான நோக்கில் சைகை காண்பித்தார். ஆனால் அதை அந்த இளம்பெண் பொருட்படுத்தவில்லை.
இந்த நிலையில் திடீரென அந்த வாலிபர் அந்த இளம்பெண் அருகில் வந்து கையை பிடித்து இழுத்து பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அந்த வாலிபர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார்.
கீழே தள்ளிவிட்டார்
பிறகு அவர் அந்த பெட்டியை விட்டு எழுந்து அடுத்த பெட்டிக்குள் ஓடினார். ஆனால் அங்கும் பயணிகள் யாரும் இல்லாமல் காலியாக இருந்தது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த நபர் இளம்பெண்ணை ஓட ஓட விரட்டினார்.
அடுத்த பெட்டியில் பயணிகள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அந்த இளம்பெண் அடுத்த பெட்டிக்குள் ஓடினார். அந்த பெட்டியும் காலியாகவே இருந்தது. இதனால் அந்த நபர் அந்த பெண்ணிடம் மிக மோசமாக கற்பழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அந்த பெண் அந்த வாலிபரின் கையை கடித்தார்.
இதில் அந்த வாலிபர் கையில் இருந்து ரத்தம் வழிந்தது. ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அந்த இளம்பெண்ணை சரமாரியாக தாக்கினார். வயிறு, முகத்தில் கடுமையாக அடித்தார். இதனால் அந்த பெண் நிலை குலைந்தார்.
என்றாலும் அந்த பெண் தன்னை காப்பாற்றுமாறு கதறினார். இதனால் அந்த வாலிபர் பயந்து போய் அந்த இளம்பெண்ணை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொல்ல முயற்சி செய்தார். கம்பியை பிடித்துக் கொண்டு அந்த பெண் கதறியபடி தொங்கினார்.
அடுத்த நிலையம் வந்தால் தப்பி விடலாம் என்று அந்த பெண் வாசலில் தொங்கியபடி கதறினார். ஆனால் அந்த வாலிபர் அந்த பெண் கையில் ஓங்கி மிதித்தார். இதனால் கை நழுவி அந்த பெண் ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்தார்.
கவலைக்கிடம்
அந்த பெண்ணின் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. ரெயில்வே தொழிலாளி ஒருவர் அவர் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அந்த பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதற்கிடையே சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வு செய்ததில் அந்த வாலிபர் ஒரு ரெயில் நிலையத்தில் இருந்து தப்பி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவரை பிடிக்க ரெயில்வே போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.