அரியானாவில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் 4 பேர் கைது
1 min read
4 arrested with guns and grenades in Haryana
5.5.2022
அரியானா மாநிலத்தில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் இருந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பயங்கரவாதிகள்
அரியானா மாநிலம் கர்னாலில் பயங்கரவாதிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 4 பேரில் 3 பேர் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் லூதியானாவைச் சேர்ந்த நபர் என்றும் இவர்களது பெயர் குர்பிரீத், அமந்தீப், பர்மிந்தர் மற்றும் பூபிந்தர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கர்னல் எஸ்.பி. ராம் பூனியா கூறியதாவது:-
கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து துப்பாக்கி, வெடி மருந்துகள், வெடி பொருட்களுடன் கூடிய 3 இரும்பு கன்டெய்னர்கள் மற்றும் சுமார் 1.3 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகிக்கும் நபர்கள் குறித்து உறுதியான தகவல் கிடைத்ததை அடுத்து, இதுகுறித்து போலீஸ் குழுவை எச்சரித்தோம். பஸ்தாரா சுங்கச்சாவடிக்கு அருகில் தடுப்புக்காவல் போடப்பட்டது. பின்னர் சுற்றி வளைத்து கைது செய்தோம். குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் இருந்த வாகனத்தின் எண்ணில் ‘டிஎல்’ என்று உள்ளது. ஆனால் வாகனத்தின் உரிமையாளர் யார் என்பது குறுத்து இன்னும் தெரியவில்லை.
குற்றம்சாட்டப்பட்ட குர்பிரீத் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் ட்ரோனைப் பயன்படுத்தி எல்லைக்கு அப்பால் அனுப்பப்பட்ட வெடிபொருட்களைப் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக நாந்தெட்டில் வெடிகுண்டுகளை வீசியதும் தெரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.