டாடா குழும தலைவர் வாங்கிய ரூ.98 கோடி சொகுசு வீடு
1 min read
Rs 98 crore luxury house bought by Tata Group Chairman
8.7.2022
டாடா குழும தலைவர் சந்திரசேகரன் மும்பையில் ரூ.98 கோடிக்கு வீடு வாங்கி உள்ளார்.
டாடா குழுமத் தலைவர்
பிரபல தனியார் நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த சந்திரசேகரன் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு செய்யப்பட்டார். இவர் மும்பை பெடடர் ரோட்டில் ஜாஸ்லோக் ஆஸ்பத்திரி அருகில் உள்ள 28 மாடிகளை கொண்ட ‘33 சவுத்’ என்ற வானுயர சொகுசு கட்டிடத்தில் 11 மற்றும் 12-வது மாடிகளை அடங்கிய ‘டூப்லக்ஸ்’ வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அந்த வீட்டுக்கு அவர்கள் மாதந்தோறும் ரூ.20 லட்சம் வாடகை செலுத்தி வந்தனர்.
ரூ.98 கோடி
இந்தநிலையில் தான் வசித்து வந்த ‘டூப்லக்ஸ்’ வீட்டை ரூ.98 கோடிக்கு சந்திரசேகரன் வாங்கி உள்ளார். இது சுமார் 6 ஆயிரம் சதுர அடி பரப்பை கொண்ட வீடாகும்.
கடந்த 4 நாட்களுக்கு முன் சந்திரசேகரன், அவரது மனைவி லலிதா, மகன் பிரனாவ் ஆகியோர் பெயரில் அந்த வீடு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சதுர அடிக்கு ரூ.1.63 லட்சம் செலுத்தி உள்ளனர். அவர்களிடம் ஜிவேஷ் என்ற கட்டுமான நிறுவனம் வீட்டை விற்பனை செய்து உள்ளது. டாடா குழும தலைவர் சந்திரசேகரனுக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு (2027-ம் ஆண்டு வரை) சமீபத்தில் பதவி நீட்டிக்கப்பட்ட நிலையில் அவர் அடுக்குமாடி வீட்டை வாங்கியுள்ளார்.
மும்பை பெடடர் ரோட்டில் தான் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் ஆடம்பர ‘அண்டிலா’ அடுக்குமாடி வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.