June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

டிரெங்பெட்டியுடன் போராடிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை

1 min read

Kannayiram struggled with the box – StORY BY TaBasukumar

26/05/ 2022
கண்ணாயிரம் குற்றாலம் செல்வதற்கு காலையிலே குளித்து பவுடர் பூசி கண்ணாடியில் தனது அழகை ரசித்துகொண்டிருந்தார்.அப்போது அவரது மனைவி குக்கர் நாலுவிசில் அடித்தால் குக்கரை ஆப் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு மோட்டாரைபோட்டுவிட்டு குளிக்க சென்றார்.மோட்டார்போட்ட சத்தத்தில் குக்கர் அடித்தவிசில் சத்தம் கேட்காததால் கண்ணாயிரம் அமைதியாக இருந்துவிட்டார். இந்த நேரத்தில் குளித்துவிட்டுவெளியேவந்த பூங்கொடி சமையல் அறையிலிருந்து புகைவருவதைபார்த்து பதட்டமாக குக்கர் வெடித்து கண்ணாயிரத்தை தாக்க பறந்துவர கண்ணாயிரம் ஓடிபோய் உள்கதவை பூட்டிக்கொண்டு ஜன்னல்வழியாக எட்டிப்பார்த்தார்.
குக்கரில் இருந்த சாம்பார் கீழே கொட்ட வீடெங்கும் புகைமயமாக இருந்தது. பூங்கொடி கோபத்தில்…எல்லாம் உங்களாலத்தான்..போச்சு…போச்சு என்று கத்தினார்.மதியம் சாப்பிடுவதற்கு இட்லி சாம்பார் கொண்டுசெல்லலாமுன்னு நினைச்சேன்..இப்படி ஆக்கிப்புட்டிங்களே என்று கண்ணாயிரத்தை பார்த்து கத்தினார்.
மோட்டார்..இப்படி சத்தம்போட்டா..குக்கர் விசில் அடிக்கிறது எப்படி கேட்கும்..இதில் என் தப்பு ஒன்றும் இல்லை .எல்லாம் மோட்டார் தப்புதான் என்று கண்ணாயிரம் வாதாடினார்.
பூங்கொடி உடனே..சரி விடுங்க…நடக்கிறகதையை பார்ப்போம்…என்றவாறு சமையல் அறையை சுத்தம் செய்தார். கண்ணாயிரம் அதை பார்த்துக்கொண்டே இருந்தார்.
ஏங்க இங்கே என்ன பாக்கிறீங்க….உங்க சூட்கேசை எடுத்து ரெடியாகுங்க..மணி ஏழாகிவிட்டது…இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது…போங்க…போங்க என்றுவிரட்டினார். கண்ணாயிரம் சூட்கேசை எடுத்து வீட்டின் முன்பகுதிக்குகொண்டுவந்தார். கருப்பு கண்ணாடிபோட்டு சுற்றி சுற்றி வந்தார்.ஜன்னலை திறந்துவைத்து பஸ்வருகிறதா என்று பார்த்தபடி இருந்தார்.
பூங்கொடி சமையல் அறையை சுத்தம் செய்தபின் பாத்ரூமுக்கு சென்று கைகால் முகத்தை கழுவிவிட்டு உடைகளை மாற்ற உள்அறைக்கு சென்றார். அயர்னா செய்த பச்சை சேலை பச்சை சட்டையை அணிந்தபடி வெளியே வந்தார். கண்ணாயிரத்தைபார்த்து சேலை நல்லா இருக்கா என்று கேட்டார்…கண்ணாயிரம்..ம்..ம்..என்று இழுத்தார். உடனே பூஙாகொடி ஏங்க…இவ்வளவு யோசிக்கிங்க…சேலை நல்லா இருக்கா இல்லையா என்று மீண்டும் கேட்டார். அதற்கு அவர்…ஆ..நல்லா இருக்கு…நல்லா இருக்கு..என்றார்.
அப்போ சட்டை என்று பூங்கொடி கேட்க..எல்லாம் நல்லா இருக்கு..நல்லா இருக்கு என்று ஐஸ்வைத்தார். பூங்கொடி கண்ணாடியில் போய் பார்த்துவிட்டு…ஏங்க பொய் சொல்லுறீங்க…பச்சை புடவை எனக்கு சுமாராத்தான் இருக்கு..என்றார் பூங்கொடி.
அதை கேட்டு கண்ணாயிரம் விழித்தார்.என்னடா இது..மிரட்டி கேட்டா நல்லா இருக்குன்னுதானே சொல்வோம்..பிறகு நல்லா இல்லன்னா சொல்லமுடியும்…என்று மனசுக்குள் நினைத்துகொண்டார்.
அப்போது பூங்கொடி என்னங்க…எங்கே பாக்கிறீங்க..இந்த டிரெங்பெட்டியை தூக்கி முன்னகொண்டுவையுங்க…போங்க என்று கத்தினார். கண்ணாயிரம் ஓடிப்போய் டிரெங்பெட்டியை தூக்கிப்பார்த்தார். அசைக்கமுடியல…
என்ன பூங்கொடி..பெட்டிக்குள்ளே என்ன இருக்கு…இந்த கனம் கனக்குது…என்றபடி டிரெங்பெட்டியை மெல்ல அசைத்தார்.ஏங்க அதை கீழே தள்ளிடாதீங்க..உங்களாவ தூக்கமுடியலையா…விடுங்க..நானே தூக்கிறேன் என்றார்.
கண்ணாயிரம் அப்பாட..ஆளைவிட்டாபோதும் என்று ஒதுங்கிக்கொண்டார்.
பூங்கொடி ஒரே கையால் டிரெங்பெட்டியை தூக்கி முன்பகுதிக்கு கொண்டுவைத்தார். கண்ணாயிரம் அதை ஆச்சரியத்துடன் பார்த்தார்.எப்படி..நம்மால் அசைக்கவே முடியாததை பூங்கொடி எளிதா தூக்கிட்டா..நமக்கு பலம் காணாது..பச்ச முட்டை சாப்பிட்டு உடம்ப தேத்தணும்.. என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டார். அந்த நேரத்தில் வெளியில் பஸ்ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்டது.
கண்ணாயிரம் எட்டிப்பார்த்தார்.அங்கே புதுவை..குற்றாலம் இன்ப சுற்றுலா என்ற துணிபேனர் தாங்கிய பஸ்வேகமாகவந்து நின்றது.
கண்ணாயிரம் உடனே….ஆ…பஸ்வந்துட்டு ஆ..பஸ்வந்துட்டு என்று உற்சாகத்தில் கத்தினார்.அதை கேட்டதும் பூங்கொடி ஏங்க…ஓடிபோய் பஸ்சிலே முன்பக்கம் இடம்பிடிங்க..கடைசி சீட்டுக்கு போனா தூக்கிப்போடும்…ம் போங்க..போங்க என்று அதட்டினார்.கண்ணாயிரம் கையில் ஒரு துண்டை எடுத்துக்கொண்டு பஸ்சைநோக்கி வேகமாக ஓடினார். அவரை தள்ளிவிட்டு சிலர் பஸ்சில் ஏறமுயன்றனர்.ஆனாலும் கண்ணாயிரம் விடவில்லை.உள்ளே நுழைந்து சென்று மூச்சு திணறி டிரைவர் சீட்டுக்கு பின்னால் துண்டைபோட்டு இடம்பிடித்தார்.
எல்லோரும் அவரைபார்த்து சிரித்தபடி அடுத்த சீட்டை நோக்கி சென்றனர். பஸ் ஐன்னலை திறந்துவிட்டபடி ஆ..நல்லா காத்துவருது..முன்பக்கம் இருந்தா…நல்லாத்தான் இருக்கு. ஆனா வீடியோவில் படம் போட்டா…எட்டியில்லா பார்க்கணும்.கழுத்து வலிக்குமே..பூங்கொடிதான் முன்சீட்டைபிடிங்கன்னா…சரி இருப்போம்..என்றவாறு இருந்தார்.
அப்போது பூங்கொடி பஸ்சில் டிரெங்பெட்டியை ஏற்றமுடியாமல் திணறிக்கொண்டிருந்தார். ஏங்க ஒருகைகொடுங்க…டிரெங்பெட்டியை உள்ளே இழுங்க என்று கத்த கண்ணாயிரம் எழுந்து சென்று டிரெங்பெட்டியை உள்ளே இழுத்தார்..முடியவில்லை.வாசலில் மாட்டிக்கொண்டதால் மற்றவர்களும் பஸ்சுக்குள் ஏறமுடியல…என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா என்றபடி ஒருவர் டிரெங்பெட்டியை ஒரு சைடாக பஸ்சுக்குள் தள்ளினார். கண்ணாயிரம் டிரெங்பெட்டியின் கைப்பிடியை இழுத்தபோது அது உடைந்து தனியாக கையில்வந்தது.ஆ…என்ன கைப்பிடி இப்படி வந்துட்டு..பூங்கொடி சத்தம் போடுவாளே என்ன செய்யுறது..துண்டுக்கு அடியில்போட்டுவைப்போம்..கேட்டா சொல்லுவோம் என்று நினைத்தார். டிரெங்பெட்டியை சரபுரான்னு இழுத்து தனது சீட்டுக்கு பக்கத்தில் கொண்டு செல்லமுயன்றார்.
அவர் கஷ்டப்படுவதை பார்த்த ஒருவர்..சீட்டு பக்கத்தில் தள்ளிவைத்தார். அடுத்துவந்தவர்கள்..ஏங்க டிரங்பெட்டியை மேல தூக்கிவையுங்க..நடக்கிறதுக்கு இடைஞ்சலா இருக்குல்லா என்று சத்தம்போட்டபடி தாண்டி சென்றனர். கண்ணாயிரம்..ஆ..டிரெங்பெட்டியை அசைக்கவே முடியல…இதுல எப்படி மேல தூக்கிவைக்கிறது…விசியம் தெரியாமல் பேசுறாங்க என்றார்.அடுத்து கண்ணாயிரத்தின் சூட்கேசை தூக்கியவாறு பூங்கொடி பஸ்சை நோக்கி வந்தார். ஏங்க இந்த சூட்கேசைவாங்கி அங்கேவையுங்க என்றவர்..கண்ணாயிரத்தை முறைத்துபார்த்தார். டிரெங்பெட்டியை வைக்கவே இடமில்ல..இதுலே சூட்கேசை எங்கேவைக்க..என்று புலம்பினார். பின்னர் எழுந்து சென்று சூட்கேசை வாங்கி மேலகொண்டுவந்தார்.நம்ம சூட்கேசு லேசாத்தான் இருக்கு…இதை தூக்கி மேலவச்சிடலாம் என்று நினைத்தார்.
அந்த சூட்கேசை மேல தூக்கி உள்ளே தள்ளமுயன்றார்.அதுவும் சரியாக போகவில்லை.கண்ணாயிரம் போராடிப்பார்த்தார்.முடியவில்லை.என்ன பஸ்சு இது ஒரு சூட்கேசு கூடவைக்கமுடியல..நான் என்ன பண்ணுவேன் என்று விழிபிதுங்கி நின்றார். அப்போது உள்ளேவந்த ஒருவர்..ஏங்க சூட்கேசை மேலவையாதீங்க…உருண்டு மேல விழுந்திடும்.கடைசி சீட்டுக்கு அடியில் சூட்கேசை தள்ளுங்க…என்றபடிசென்றார். என்னடா…இது..கீழேவச்சாலும் சத்தம்போடுறாங்க…மேலேயும்வைக்கமுடியல..என்னதான் பண்ணுறது.பெட்டியை சீட்டுமேலவச்சு…அதுமேல உட்காரவேண்டியதுதான்…வேறுவழியில்லை என்று நினைத்தார்.
பூங்கொடி கண்ணாயிரத்தின் கருப்பு கண்ணாடி கைத்தடி..மினரல்வாட்டர்கேன் எல்லாவற்றையும் எடுத்துவந்தார்.கண்ணாயிரம் ஜன்னல்வழியாக பார்த்தார்.ஆ..உண்டானதைவைக்கவே இடமில்லை…இதுலே மினரல்வாட்டர்கேனை எங்கேவைக்கிறது…என்று தலையை சொரிந்தார். பூங்கொடி மினரல்வாட்டர் கேனை தூக்கியபடி பஸ்சுக்குள் ஏறிவந்தார். கண்ணாயிரத்தைபார்த்து ஏங்க…பெட்டியை மேலவைக்கலய்யா எதை சொன்னாலும் சரியா செய்யமாட்டிங்க…என்று சத்தம் போட்டார்.
கண்ணாயிரம் என்னபதில்சொல்வது என்று தெரியாமல் விழித்தார். பூங்கொடி டிரங்பெட்டியை தூக்கி மேல்பகுதியில்வைக்க எவ்வளவோ போராடிப்பார்த்தார்.ஒருவழியாக உள்ளே சென்றுவிட்டது.அப்பாட…ஒருவழியாக உள்ளே தள்ளியாச்சு..என்றவர் கண்ணாயிரத்தின் சூட்கேசையும் எடுத்து ஒருவழியாக வேகமாக மேல்பகுதியில் அழுத்தி தள்ளினார்.நசுங்கி உள்ளே சென்றது. பாத்தியளா…எப்படி..இதுக்குபோயி..அலட்டிக்கிட்டியள…இப்போதான் கால் நீட்டி இருக்கமுடியும்..தெரியுதா என்றார்.கண்ணாயிரம் தலையை ஆட்டினார்.
சரி பஸ்சில் ஆள் ஏறிக்கொண்டே இருந்தார்கள்.துபாய்காரரும் அவரது மனைவியும் ஒரு சூட்கேசுடன் பஸ்சில் ஏறினார்கள்.கண்ணாயிரத்தைபார்த்து அவர் மெல்ல புன்னகைத்தப்படி சென்றார். கண்ணாயிரமும் சிரித்தார்.பூங்கொடி ஏங்க…ஜன்னலோரம் நான் இருக்கேன்…இங்கே வாங்க என்றார்.கண்ணாயிரம் எழுந்துபின்னால் வந்தார்.பூங்கொடி ஜன்னல் ஓரம் அமர்ந்ததும் கண்ணாயிரம் அடுத்து உட்கார்ந்தார். அப்போது பஸ்சில் ஏறிய அவரது நண்பர் என்ன கண்ணாயிரம்…டிரைவர் சீட்டுக்கு பின்னால இருக்குற..பஸ் ஆக்சிடண்டு ஆச்சுன்னா முதலில் உன்னைதான் பாதிக்கும்…என்ன சீட்டு பிடிச்சிருக்க சீட்டு என்றபடி உள்ளே போனார்.ஏய்..போகும்போது..இப்படியா பேசுவ..நானே பயந்தவன்..என்ன மேலும் பயங்காட்டாத என்று எச்சரித்தார்.அடுத்து பஸ்சில் ஏறிய பெண்மணி கண்ணாயிரத்தைபார்த்து…மேல இருக்கிறது உங்க போட்டிங்களா…பஸ்சு மேட்டில போகும்போது பெட்டி உருண்டு உங்க தலை மேல விழுந்திடும்…கீழே எடுத்துவையுங்க என்று எச்சரித்தார். கண்ணாயிரம் பயத்துடன் மனைவியை பார்த்தார்.அவர்..சும்மா இருங்க..ஓண்ணும் செய்யாது.உங்களுக்கு ஆயுசு கெட்டி என்று தைரியம் ஊட்டினார். அந்த நேரத்தில் பஸ்சில் பயில்வான் ஏறினார். என்ன எல்லோரும் பஸ்சிலே ஏறியாச்சா..என்று பெயர்பட்டியலை சரிபார்த்தார். கண்ணாயிரம் பூங்கொடி வந்தாச்சு..அரேபியாக்காரர் அவர் மனைவி…ஆ அவங்களூம் வந்தாச்சா..ஆப்புறம்…இறைச்சிக்கடைக்காரர் சுதா வந்தாச்சா…இறைச்சிக்கடைக்காரர் சுதா வந்தாச்சா…என்ன சத்தத்தையே காணம்…வரலையா.. என்று கேட்டார்.யாரும் பதில் சொல்லவில்லை.என்ன…பதிலே இல்ல..இறைச்சிக்கடைகாரர் சுதா வந்தபிறகுதான் போகமுடியும்.அவன் ஒருமோசமான ஆளு.கொஞ்சம் பொறுத்து பார்ப்போம் என்றார்.எல்லோர்கண்களும் யார் அந்த சுதா என்று ரோட்டையே பார்க்க மோட்டார்சைக்கிளில் இறைச்சிகடைக்காரருடன் சுடிதார்போட்ட சுதா வேகமாக வந்து கொண்டிருந்தார்.அதைபார்த்ததும் கண்ணாயிரத்துக்கு பயம் தொற்றிக்கொண்டது.

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.