மராட்டிய அரசியல் குழப்பம்: மும்பையில் 144 தடை உத்தரவு அமல்
1 min readMaratha political turmoil: 144 restraining orders enforced in Mumbai
25.6.2022
மராட்டிய அரசியல் குழப்பம் காரணமாக மும்பையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மராட்டிய அரசு
மராட்டியத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே மராட்டிய மகாவிகாஸ் அகாடி அரசுக்கு எதிராக திரும்பியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களான 50 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்கியுள்ளார். இதில், 40 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மராட்டிய அரசியலில் உச்ச கட்ட குழப்பம் நிலவும் நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள எம்.எல்.ஏ.க்களை கண்டித்து சிவசேனா கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
144 தடை
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் மும்பையில் 144- தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி வரை இந்த தடையுத்தரவு அமலில் இருக்கும் என்று மும்பை போலீஸ் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனா எம்.எல்.ஏக்கள், ஏக்னாத் ஷிண்டே இல்லம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.