கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு; மத்திய அரசு முடிவு
1 min read
Restriction on export of wheat flour; Central Govt decision
7.7.2022
கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், கோதுமை மாவு, ரவை, மைதா ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கட்டுப்பாடு
கோதுமை மாவு, ரவை உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் அமைச்சரவை குழுவிடம் முன் அனுமதி பெற வேண்டும். கோதுமை மற்றும் கோதுமை மாவில் உலகளாவிய விநியோகத்தில் உள்ள சிக்கல்கள் காரணமாக விலையில் ஏற்ற இறக்கங்களையும் மற்றும் தரம் தொடர்பான சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது. இதனால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோதுமை மாவின் தரத்தை பராமரிக்க வேண்டியது கட்டாயம். கோதுமை மாவு ஏற்றுமதி தொடர்பான கொள்கை வெளிப்படையாக உள்ளது.
ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படவில்லை. இருப்பினும், ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் அனுமதி பெறுவது அவசியம். இந்த நடைமுறை வரும் 12ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் ஏற்றுமதிக்காக கப்பலில் ஏற்றப்பட்ட மற்றும் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட கோதுமை மாவு வகைகள் ஏற்றுமதிக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.