June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

‘சிக்கலான’ இந்தியா-சீனா உறவுகளில் தலையிட மாட்டேன்- ரஷிய அதிபர் புதின் உறுதி

1 min read

ரஷிய அதிபர் புதின்

Russian President Putin assures that he will not interfere in ‘complicated’ India-China relations

5.6.2026
ரஷிய அதிபர் புதின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உலகளாவிய முக்கிய செய்தி நிறுவனங்களின் தலைவர்களுடன் விரிவான கலந்துரையாடலை நடத்தினார். அதில் இந்தியா-சீனா உறவு குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரையும் பாராட்டிய புதின், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை பிரச்சினையை அமைதியான முறையில் தீர்ப்பதில் இரு தலைவர்களும் உறுதியாக உள்ளனர் என்று கூறினார்.

முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த ராணுவ மோதல் ஆகியவற்றால் கடுமையான பாதிப்புக்குள்ளான தங்கள் உறவை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, இந்தியாவும் சீனாவும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த சூழலில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான சிக்கலான இருதரப்பு உறவுகளில் ரஷியா தலையிடாது என்று புதின் உறுதியாக தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு நுட்பமானதும், பல பரிமாணங்களைக் கொண்டதுமாகும். இதில் தலையிடுவது நல்லதல்ல. நிச்சயமாக, ரஷியா தனது நண்பர்களான இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் தொடர்பில் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

சீனா உடனான ரஷியாவின் ஆழமான கூட்டணி இந்தியா உடனான அதன் பிணைப்பை பாதிக்காது என்றும், இந்தியா உடனான ரஷியாவின் வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பு சீனாவின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் புதின் குறிப்பிட்டார்.

தொடர்ந்து இந்தியா, சீனா மற்றும் ரஷியா இடையிலான உறவின் வரலாறு குறித்து பேசிய அவர், “ஒரு கட்டத்தில், இந்தியா மற்றும் சீனாவின் தலைவர்கள் ரஷியாவில் சந்திக்க வேண்டும் என்று நான் பரிந்துரைத்தேன். அப்படித்தான் ரஷியா-இந்தியா-சீனா கூட்டணி நிறுவப்பட்டது. எங்களிடம் பேசுவதற்கும், ஒப்புக்கொள்வதற்கும் விஷயங்கள் இருந்தன” என்று கூறினார்.

அதே சமயம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் குறித்து பேசிய புதின், “இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை பிரச்சினைகளின் நுணுக்கங்களை நாங்கள் நன்கு அறிவோம். பாகிஸ்தான் சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் நான் நம்பவில்லை. பாகிஸ்தான் ஒரு பெரிய நாடு, அது பல்வேறு நாடுகளுடன் பலதரப்பட்ட உறவுகளைக் கொண்டுள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து இந்தியா உடனான ரஷியாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகள் குறித்து பேசிய அதிபர் புதின், “ஐந்தாம் தலைமுறை எஸ்.யு.-57 போர் விமானத்தை கூட்டாக தயாரிப்பதற்கு இந்தியாவிடம் ரஷியா பரிந்துரைத்தது. இத்துறையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். முக்கிய பாதுகாப்பு தளங்கள் மற்றும் ஆயுதங்களுக்கான முக்கிய தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு வழங்க ரஷியா தயாராக உள்ளது” என்று புதின் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *