பிளஸ்-2 மாணவியை எரித்து கொன்ற தந்தை கைது
1 min read
Father arrested for burning plus-2 student to death
10.7.2022
பிளஸ்-2 மாணவியை எரித்து கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிளஸ்2- மாணவி
புதுச்சேரி பிளஸ்-2 மாணவியை எரித்து கொலை செய்த வழக்கில் அவரது தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிளஸ்-2 மாணவி சாவு புதுச்சேரி உழவர்கரை கான்வென்ட் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியநாதன் (வயது 53). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மரிய லூர்தியா (52). இவர்களது மகன் பிரான்கோ (28), மகள் லூர்துமேரி (16). இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கடந்த 7-ந் தேதி வீட்டில் அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்த மரியலூர்தியா, லூர்துமேரி ஆகியோர் உடலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் உடல் கருகிய லூர்துமேரி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மரியலூர்தியா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தந்தை கைது இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியநாதனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், பெட்ரோல் தெளித்து தீயிட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆரோக்கியநாதனை போலீசார் கைது செய்தனர்.
போலீசில் ஆரோக்கியநாதன் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
எனது மனைவி மரிய லூர்தியா மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் ரூ.4 லட்சம் கடன் பெற்றேன். அந்த கடனை திரும்பி கொடுக்க முடியவில்லை. எனக்கும், வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இதனை எனது மனைவி கண்டித்தார். எனவே அவரை கொலை செய்ய முடிவு செய்து சம்பவத்தன்று அதிகாலை 3.30 மணி அளவில், ஏற்கனவே வீட்டில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை மரியலூர்தியா மீது தெளித்து தீ வைத்து கொளுத்தினேன். பெட்ரோலை மரியலூர்தியா மீது தெளிக்கும்போது அருகே தூங்கிக்கொண்டிருந்த மகள் லூர்துமேரி மீதும் விழுந்தது. எனவே அவர் மீதும் தீ பரவியது. பின்னர் தீயில் கருகிய 2 பேரையும் மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த கொலையை மறைப்பதற்காக வீட்டில் கொசுவர்த்தியால் தீப்பிடித்தாக நாடகமாடினேன். ஆனால் போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சிறையில் அடைப்பு இதையடுத்து ஆரோக்கியநாதனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.