June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை பயமுறுத்தும் அருவி/ நகைச்சுவை கதை

1 min read

A waterfall that frightens Kannayiram/ Comedy story By Thabasukumar

21/7/2022
கண்ணாயிரம் சுற்றுலா பஸ்சில் சென்றபோது குற்றாலத்தை பற்றி பயில்வானிடம் விலாவாரியாக கேட்டபோது அவரும் அருவியின் அருமை என்ன பெருமை என்ன என்று விளக்கிச்சொன்னார். தேனருவி தண்ணீர் திருநெல்வேலி அல்வாபோல தித்திப்பாக இருக்கும் என்று சொல்ல கண்ணாயிரம் நாக்கில் எச்சில் ஊற அல்வா இருக்கும் ஊர் வழியாக செல்லவேண்டும் என்று அடம்பிடிக்க பயில்வானும் கண்ணாயிரத்துக்காக ரூட்டை மாற்றி ஸ்ரீவில்லிப்புத்தூர் வழியாக செல்லாமல் நெல்லை வழியாக செல்ல ஒத்துக்கொள்ள மகிழ்ச்சியில் கண்ணாயிரம் ஆட அந்த நேரத்தில் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார்.
அப்போது மினரல் வாட்டர் கேன் மூடி திறந்து தண்ணீர் பெருகி ஓட சிலர் கண்ணாயிரத்தை சந்தேகத்துடன் பார்க்க…கண்ணாயிரம் மினரல்வாட்டர் கேனை நிமிர்த்திவைத்து கீழே கிடந்த மூடியை எடுத்து இறுக்கி மூடினார். அதை பார்த்த பூங்கொடி ஏங்க..மினரல்வாட்டர் கேனில் தண்ணி குடிச்சா ஒழுங்கா மூடவேண்டியதுதானே..அரைகுரையா மூடிவச்சிட்டு இப்ப மானத்தை வாங்குறிய என்று சத்தம்போட கண்ணாயிரம் கப்சிப் என்று பயில்வான் பக்கம் உட்கார்ந்தார்…
இந்த டிரைவருக்கு ஆரம்பத்திலிருந்தே என்மேல ஒரு கோபம்..அப்பப்ப..பிரேக் போட்டு என்னை அல்லாடவச்சிடுறாரு…அந்த ஆளுக்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்..சரி..குற்றாலத்தை பற்றி வேற என்ன தகவல் இருக்கு சொல்லுங்க..என்று பயில்வானிடம் கேட்டார்.
அவர் உடனே…அட..நான் ஒண்ணு சொன்னா..நீ ஒண்ணு கேட்கிற…எனக்கே குழப்பமாயிடுது…ஒண்ணு பண்ணுவோம்..பாலன் இன்போ… யூ டியூப் சேரில் குற்றாலத்தை பற்றி விரிவா சொல்லி இருக்காங்க.. இன்னா..என் செல்போனில பாரு என்று காட்டிவிட்டு ஒதுங்கிக்கொண்டார்.
கண்ணாயிரம் அதில் குற்றாலத்தை பற்றி கூறிய தகவலை சுவாரசியமாக கேட்டார். பின்னர் பயில்வானை முறைத்து பார்த்தார்..என்ன ஆச்சு என்று பயில்வான் மெதுவாக கேட்க..கண்ணாயிரம்..என்ன நீங்க…அருவியில தண்ணி விழுமுன்னு சொன்னிங்க..கல் விழுமுன்னு சொன்னிங்களா…எப்படி மறச்சிட்டிங்க… எல்லா அருவியிலும் கல்விழுமுன்னு எவ்வளவு அக்கறையா சொல்லியிருக்காங்க..தலையிலே கல்விழுந்தா என்ன ஆகும்…ஆ..நினைச்சு பாக்கவே பயமா இருக்கு…என்று படபடத்தார்.
பயில்வான் அவரை சமாதானப்படுத்தும் வகையில்..கண்ணாயிரம்…அது எப்போதாவதுதான்…கல்விழும்..எப்பமும்விழாது என்க..கண்ணாயிரமோ கோபத்துடன் நான்போகும்போது விழுந்துட்டா என்ன பண்ணுறது என்று பயத்துடன் கேட்டார்.
அதெல்லாம் விழாதுப்பா…குரங்கு எப்போதாவது கல்லை உருட்டிவிட்டுரும்..அது கீழேவந்துவிழும்..பெரிசா அடிபடாது..நீ பயப்படாத என்று பயில்வான் தைரியம் ஊட்டினார்.
நான் எப்படி நம்புறது என்று கண்ணாயிரம் கேட்க…பயில்வான் உடனே..நீவேணூமுன்னா தலையிலே இரண்டு துண்டு கட்டிக்க…எந்த பிரச்சினையும் இல்ல என்று சொல்ல கண்ணாயிரம் கொஞ்சம் அமைதியானார்.
ஆனாலும்..நீங்க ரொம்ப மோசம்..ஒரு அருவியையே எங்கிட்ட மறச்சிட்டிய…என்று கண்ணாயிரம் குற்றம்சாட்ட பயில்வான் என்ன அருவி என்று புரியாமல்விழிக்க…கண்ணாயிரம் மெல்ல..அந்த சிற்றருவியை நீங்க சொல்லவில்லை..ஏன் என்று கண்ணாயிரம் கேட்டார்.

உடனே பயில்வான்..ஓ..அதுவா…சின்ன அருவிதானேன்னு நினைச்சேன்…அதனால…சொல்ல மறந்துட்டேன்..ம்..நீ அதை பெரிசா எடுத்துக்காத என்று சொன்னார் பயில்வான்.
ம்..நான் ரொம்ப உஷாரு தெரியுமில்லா….எதையும் கணக்கா பார்த்து கேட்பேன்..தெரியுமா என்று சொல்லி கண்ணாயிரம் சிரிக்க..எல்லாம் என் நேரம் என்று பயில்வான்..கஷ்டப்பட்டு சிரித்தார்.
சரி..சரி..செல்போனை பார்த்தது போதும் கொடு என்று கேட்க..கண்ணாயிரம் அப்படியா..சரி என்று போனை கொடுத்தார்.
பஸ் நெய்வேலி வந்ததும் பயில்வான் மெதுவாக கண்ணாயிரத்திடம் நெய்வேலிவந்தாச்சு…இங்கேதான் அனல்மின் நிலையம் இருக்கு…இங்கிருந்துதான் கரண்டு வருது என்று சொன்னார். கண்ணாயிரம்..ஓ..கேள்வி பட்டிருக்கேன்..கம்பி எல்லாம் ஒழுங்காத்தான இருக்கு…பிறகு ஏன் கரண்டு கட்டாகி கட்டாகி நமக்கு வருது…அதுதான் புரியல..என்று கண்ணாயிரம் தன் கன்னத்தில் விரல்வைத்து யோசித்தார். பயில்வானும்..அதுவா..ஒரே நேரத்தில எல்லா கரண்டும் வந்தா கம்பி சூடாகி உருகிடுமில்ல…அதனால…கட் பண்ணி கட்பண்ணி கரண்டுவிடுறாங்க..இப்ப புரியுதா..என்று கேட்டார்.
கண்ணாயிரம்…ம்..நீங்க சொல்லுறதுதான் உண்மையா..இல்ல கதைவிடுறியளா…என்று சந்தேகமாக கேட்க பயில்வான் உடனே…இதபாரு..இதுக்குத்தான் உங்கிட்ட எதுவும் சொல்லுறது இல்ல என்று செல்லமாக கோபிக்க..கண்ணாயிரம்…ஆ..கோபப்படாதீங்க..எனக்கு சந்தேகம் வந்தா நான் யாருக்கிட்ட கேட்பேன் என்று அசடுவழிந்தார்.
சரி..சரி..இனி எங்கிட்ட எந்த சந்தேகமும் கேட்காதே…என்று செல்லமாக சொன்னார்.கண்ணாயிரம்…

அப்படின்னா நான் யாருக்கிட்ட கேட்கிறது என்று கேட்க துபாய்க்காரருக்கிட்ட கேளு…அவர் விவரமானவரு…உன் சந்தேகத்துக்கு அவர் பதில் சொல்வார் என்று பயில்வான் சொல்லிவிட்டு தப்பித்துக்கொண்டார்.

கண்ணாயிரம் மெல்ல எழுந்து துபாய்க்காரரிடம் சென்று..சார் ஒரு சின்ன சந்தேகம்…இந்த ஊருக்கு நெய்வேலின்னு பெயர் வச்சிரேக்காங்களே…என்ன காரணம் சொல்லுங்க…என்று கேட்க..துபாய்க்காரர்…பற்களை கடித்தார்.(தொடரும்)

வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.