எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு; அறிக்கை சமர்ப்பிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
Case against S.P. Velumani; Court orders Anti-Corruption Bureau to submit report
2.8.2022
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முறைகேடு
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட ஆரம்பகால விசாரணையின் அறிக்கை எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு வழங்கப்பட்ட நிலையில், அறப்போர் இயக்கம் மற்றும் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்று தலைமை நீதிபதி மூனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.