குற்றாலத்தில் 2-வது நாளாக குளிக்க தடை
1 min read2nd day Bathing Ban at Courtalam
2.8.2022
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நேற்று 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தென்காசி குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நேற்று 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அருவிகளில் வெள்ளப்பெருக்கு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று முன்தினம் மதியத்திற்கு மேல் மெயின் அருவி, ஐந்தருவி, ஆகிய அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். நேற்று முன்தினம் முழுவதும் யாரையும் குளிப்பதற்கு அனுமதிக்கவில்லை. நேற்று காலையில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் அடித்தது. இடையிடையே சாரல் மழை தூறியது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை மிதமாக பெய்து வந்தது. மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறையாமல் தண்ணீர் அதிக அளவில் கொட்டியது. இதனால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்காததால் சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு சென்று விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஆனால் பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் குறைவாகத்தான் விழுந்தது. இருப்பினும் தென்காசி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடும் என்று கருதி இந்த அருவிகளிலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் அதிக தண்ணீர் வந்தாலும் குளிப்பதனால் ஆபத்து இல்லை என்ற சூழலில் குளிக்க அனுமதிக்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று சுற்றுலா பயணிகள் கூறினர். வருகிற 4-ந் தேதி வரை தென்காசி மாவட்டத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மேலும் 2 நாட்கள் குற்றாலத்தில் குளிக்க தடை நீடிக்கும் என்று தெரிகிறது.